இந்த முடிவைக் கேட்டு வரலஷ்மியின் சுருக்கம் விழத் தொடங்கிய முகத்தில் மேலும் சற்று சுருக்கங்கள் தோன்றின.
"கண்ணா. நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு அப்புறம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்காதான்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனா எந்தக் குழந்தையும் என் வயத்திலே தங்கலே. எல்லாம் போய்டிச்சு. நீ இப்போ நல்ல சம்பாதிக்கிறே.. இன்னும் நிறைய சம்பாதிப்பேன்னு, நல்ல வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒத்தப் பனைமரமா இருந்த உனக்கு இப்போ துணைக்கு ரெண்டு மரம் சேர்ந்திருக்கு. வீடும் கலகலப்பா இருக்கு. அதோட ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. அதுக்குள்ளே ஏம்ப்பா கருத்தடை ஆபரேசனேல்லாம் ? சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கும்.. சிலருக்கு ஒத்துக்காது.." என்றார் வரலக்ஷ்மி.
"கருத்தடை ஆபரேசன் இந்தக் காலத்திலே சகஜம்மா.. ஒரு ரிஸ்கும் இல்லே.." என்றார் கண்ணன்.
ஆனால் தனது கருத்தை வலியுறுத்தி சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வரலக்ஷ்மி, "அதெல்லாம் சரிதான்ப்ப..." என்று சொன்னவர், "கருத்தடை ஆபரேசனெல்லாம் வேணாம் கண்ணா" என்றார். மேலும், "ஏன் இன்னொரு வாரிசு வந்தா என்ன இப்போ?" என்று சடக்கென ஒரு கேள்வியையும் எழுப்பினார்.
ஒரு மகனை பெற்ற ஆதங்கத்தில் வாழ்ந்து வந்த வரலக்ஷ்மி தனது மகனுக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று கருதியதில் வியப்பு ஏதுமில்லை.
கண்ணனும் விடாமல், "என்னம்மா நீங்க இப்படி சொல்றீங்க?
எனக்கு பிறந்திருக்கிற இந்த ரெண்டு குழந்தைகளை நல்ல வளக்கணும். அதுக்கே இந்த காலகட்டத்துலே நேரம் போதாது.. குழந்தைகளோட நேரத்தை செலவு பண்ணவே சரியாப் போய்டும். இதிலே இன்னொரு குழந்தை பிறந்த நான் பவித்ராவை கவனிக்கிறதோ, இல்லை பவித்ரா என்னை கவனிக்கிறதோ சிரமமாய்டும்.. பவித்ராவும் சின்ன பொண்ணுதானே.. எனக்கென்னமோ கருத்தடை ஆபரேசன் பண்ணிக்கிறதுதான் பெட்டர்ன்னு தோணுது", என்று தொடர்ந்து வாதிட்டார்.
ஆனால் வரலட்சுமிக்கு இதில் உடன்பாடு இல்லை. பவித்ரா கருத்தடை அறுவை செய்து கொள்வதருக்கு அவர் இசையவில்லை.
இந்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருத்த போது பவித்ராவின் அறைக்கு மருத்துவர் வந்தார். பவித்ராவை மீண்டும் பரிசோதனை செய்து, "மிஸ்டர் கண்ணன், நீங்க பவித்ராவையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டி போகலாம். தே ஆர் ஆல்ரைட்" என்றார்.
அப்போது கருத்தடை அறுவை செய்து கொள்ள பவித்ரா விரும்புவது குறித்தும், அதற்கு தனது தாயார் ஆட்சேபனை செய்வது குறித்தும் மருத்துவரிடம் கண்ணன் ஆங்கிலத்தில் கூறினார். விவரத்தை புரிந்து கொண்ட மருத்துவர் தனது பங்குக்கு வரலக்ஷ்மியிடம் தெளிவாக சில வார்த்தைகள் பேசினார்.
இதற்கிடையில் பவித்ரா இந்த பேச்சு வார்த்தைகளையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். "தனது சொந்த அத்தை எதற்கு இப்படி பேசுகிறார்? தன்னை பிள்ளை பெற்றுப் போடும் மிசின் என்று நினைத்து விட்டாரோ? தனது விருப்பத்திற்கு தனது கணவன் கண்ணன் செவி சாய்த்திருக்கும் போது இவர் மட்டும் ஏன் அனுமதி தர மறுக்கிறார்? ஒருவேளை அத்தையிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?" என்று பல கேள்விகளை தனக்குள்ளே எழுப்பி மன உளைச்சல் அடைந்தாள் பவித்ரா. அத்துடன் இத்தனை நாள் தங்கள் விருப்பங்களுக்கு குறுக்கே வராதவர், இப்போது இப்படி தர்க்கம் பேசுவது கேட்டு உள்ளுக்குள் அத்தையின் மீது கோபமும் வந்தது, பவித்ராவிற்கு. "தனது அத்தை ஒருவேளை உள்ளபடி மாமியாராகி விட்டாரோ?" என்றும் ஐயம் கொண்டாள்.
எனினும் மருத்துவர் தொடர்ந்து பேசிய சில தகவல்களின் அடிப்படையில் வரலட்சுமிக்கு சமாதானம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பவித்ரா இந்த பேச்சு வார்த்தைகளையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். "தனது சொந்த அத்தை எதற்கு இப்படி பேசுகிறார்? தன்னை பிள்ளை பெற்றுப் போடும் மிசின் என்று நினைத்து விட்டாரோ? தனது விருப்பத்திற்கு தனது கணவன் கண்ணன் செவி சாய்த்திருக்கும் போது இவர் மட்டும் ஏன் அனுமதி தர மறுக்கிறார்? ஒருவேளை அத்தையிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?" என்று பல கேள்விகளை தனக்குள்ளே எழுப்பி மன உளைச்சல் அடைந்தாள் பவித்ரா. அத்துடன் இத்தனை நாள் தங்கள் விருப்பங்களுக்கு குறுக்கே வராதவர், இப்போது இப்படி தர்க்கம் பேசுவது கேட்டு உள்ளுக்குள் அத்தையின் மீது கோபமும் வந்தது, பவித்ராவிற்கு. "தனது அத்தை ஒருவேளை உள்ளபடி மாமியாராகி விட்டாரோ?" என்றும் ஐயம் கொண்டாள்.
எனினும் மருத்துவர் தொடர்ந்து பேசிய சில தகவல்களின் அடிப்படையில் வரலட்சுமிக்கு சமாதானம் ஏற்பட்டது.
அது என்ன சமாதானம்?
(பின் சொல்கிறேன்)
2 comments:
"தனது அத்தை ஒருவேளை உள்ளபடி மாமியாராகி விட்டாரோ?" என்றும் ஐயம் கொண்டாள்/
கருத்து வேறுபாடு வந்துவிட்டதே ..
ஒரு கணத்தில் மனித மனம் என்னவெல்லாம் நினைக்கிறது பாருங்கள் !
பின்னூட்டதிற்கு நன்றி
Post a Comment