இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 3 December 2011

மதனப் பெண் 28 - நான் எதுக்கு மாமா சாகணும்..?

கண்ணனின் விபரீத செயலைக் கண்டு அவரது சிறிய மாமா பதற்றத்தின் உச்சத்திற்கே போனார்.

கண்ணனின் கையை பிடித்து இழுப்பதற்காக அவர் கண்ணனின் அருகே ஓட்டமாக ஓடிச் சென்றார்.

"மாமா.. அவ கூப்புடுறா மாமா..." என்று சொல்லிக் கொண்டிருந்த கண்ணன் இப்போது, "மாமா.. இப்போ பவித்ராவோட குழந்தைங்களும்  தெரியறாங்க... அவ என்னை வரவேனாம்ன்னு சொல்றா மாமா.. குழந்தைங்களை பாத்துக்க சொல்றா... " என்றவாறு கண்ணன் கிணற்றின் சுற்றுச் சுவர் மீதிருந்து கீழே குதித்து அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டார். கண்ணனின் அருகில் வந்துவிட்ட மாமாவுக்கு அப்போதுதான், போன உயிர் திரும்பி வந்தது போல் ஆனது.

அவர் அப்படியே கண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "தெய்வமே.. நான் என்ன பண்ணுவேன்..? இப்படி சோதிக்கிறாயே ..." என்றவர், பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு, "கண்ணா.. கொஞ்ச நேரத்திலே என்ன காரியம் பண்ணப் போனே..? நீ இப்படி பண்ணலாமா? உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

பின் கண்ணன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து சடக்கென விடுபட்டார் போன்று, ஓவென கதறி அழ ஆரம்பித்தார். "பவித்ரா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்டியே ..." என்பதே திரும்பத் திரும்ப அவரது அழுகையின் ஊடே வந்த அவரது குரலாக இருந்தது.

கண்ணனின் துக்கங்கள், மன வேதனைகள், வருத்தங்கள், பவித்ராவின் நினைவுகள் எல்லாம் அழுகையின் வடிவில் வெளி வரட்டும் என்று அவரது மாமா அவரை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டார். கண்ணனின் பெருங்குரல் அழுகையை கேட்டு அந்த நந்தவனத்தில் இருந்த அனைவரும் திரண்டு விட்டனர். நிலைமையை அறிந்து அவர்களில் வயது முதியவர்களாக இருந்த சிலர் கண்ணனை மெல்ல சமாதனப்படுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்ணன் தனது அழுகை, தொடர்ந்து ஏற்பட்ட விசும்பல் எல்லாவற்றையும் மெல்ல நிறுத்தி, அருகில் இருந்த வாளியை எடுத்து கிணற்றில் விட்டு நீர் சேந்தி தலைக்கு மடமடவென ஊற்றிக் கொண்டார். பின் உடலை துண்டால் துவட்டி கொண்டு, உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டார். இப்போது அவரது முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

அருகில் வந்த மாமா, "கண்ணா.. நீ இப்போ பண்ணின மாதிரி எப்பவும் பண்ண மட்டே என்று என்கிட்டே சத்தியம் பண்ணு" என்று சற்று உறுதி கலந்த கண்டிப்புடன் தனது உள்ளங்கையை கண்ணனுக்கு எதிராக நீட்டினர். கண்ணன் அவரது கையை அப்படியே தனது கையால் பற்றிக் கொண்டார். "எனக்கு.. எங்கே பாத்தாலும் பவித்ரா தெரியறா  மாமா.. அவளோட untimely  death  என்னை ரொம்ப பாதிச்சிடிச்சு..  சாரி மாமா.. நான் சரி பண்ணிக்கிறேன்...  எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. பவித்ரா ஆசைப்பட்ட மாதிரி அவங்களை நல்ல வளக்கிறேன்.. அப்போதான் அவளோட ஆத்மா சாந்தியடையும்.. நான் எதுக்கு மாமா சாகணும்..? பவித்ராதான் என்கூடவே இருக்கல்லே...!  இனி குழந்தைங்களுக்காக  வாழப்போறேன்... நாம வீட்டுக்கு போலாம் மாமா.. எல்லோரும் காத்திருப்பாங்க.. " என்றவாறு மாமாவின் கைகளை பிடித்தவாறு கண்ணன் மெல்ல எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார்.

கண்ணன் உறுதியாக பேசுவதை கண்டு மாமாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது.. கண்ணன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மனதளவில் தயாரானார்.



அதிகமாக பிரியம் வைத்திருந்து, தானும் சந்தோசமாக இருந்து, மற்றவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் ஒருவர்,- அதுவும் அவர் அன்பான, அழகான, அருமையான, பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான, வாழ்வை வண்ணமயமாகும் மனைவியாக இருந்து, சிறிய வயதிலேயே திடீரென இறந்து விட்டால் இப்படிப்பட்ட உடனடித் தடுமாற்றங்கள் எல்லா கணவன்மார்களுக்கும்  ஏற்படும். அத்துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

(தொடரும்..)

Tuesday 29 November 2011

மதனப் பெண் 27 - "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா.."

பவித்ராவை மண்ணுக்கு கொடுத்து விட்டு எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.


அவ்வப்போது சின்ன சின்ன விசும்பல்கள் வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பவித்ராவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கேற்றி  ஊதுபத்தி பொருத்தி வைத்திருந்தனர். கண்ணன் அந்தப் புகைப்படத்தின் முன் அமர்ந்தே இருந்தார். பவித்ராவை பார்த்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலசமயம் 'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்.

சாதி மத வழக்கப்படி பத்தாம் நாள் காரியம் செய்வார்கள். ஆனால் பவித்ரா இப்படி துர் மரணம் அடைந்த காரணத்தால் மூன்றாம் நாளே அக்காரியங்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டன. இடுகாட்டில் பவித்ராவை அடக்கம் செய்த இடத்தில் எல்லோரும் கூடினர்.  கண்ணன் பூஜை செய்தார். பவித்ராவின் மரணம் கொடுத்து அதிர்ச்சியில் இருந்து கண்ணன் எள்ளளவும் மீளவில்லை என்பதை அவர் ஏதோ ஒரு சாவி கொடுத்த பொம்மையாக பூஜை செய்ததிலிருந்து எல்லோரும் அறிய முடிந்தது.

பிறகு அருகில் இருக்கும் நந்தவனத்தில் குளித்து விட்டு கண்ணன் வீட்டிக்குள் நுழைய வேண்டும் என்று சமூகப் பெரியோர்கள் கூறினார். இதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது சிறிய மாமா (சுந்தரத்தின் தம்பி) நந்தவனத்திற்கு செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இடுகாட்டில் அந்திமக் காரியம் செய்து விட்டு வரும் உறவின் முறையினர் குளிக்க, உடை மாற்ற, பிற சாங்கியங்கள் செய்ய அதற்கு அருகிலேயே ஒரு இடத்தை பெரிய கிணற்று நீர் வசதியுடன் பூங்காவனம் போல அந்தக் காலத்திலேயே ஒதுக்கி கொடுத்திருந்தனர். அது நந்தவனமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு வரும் வரையில் கண்ணனோ, அவரது சிறிய மாமாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நந்தவனம் வந்து அதன் வாயிற் படியில் கண்ணன் இறங்கும் போது, "கண்ணா.. நீ படிச்சவன்.. வக்கீல்.. யாரும் நிரந்தரம் கிடையாது என்கிறதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அவ போய்ட்ட .. நம்மோட இல்லை என்கிறதை நீ நம்பித்தான் ஆகணும்.. இப்படியே நீ மௌனமா இருந்தா எப்படி..? பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்று கண்ணனின் சிறிய மாமா மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். கண்ணன் எவ்வித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தார்.

தொடர்ந்து, "கண்ணா நீ தலைக்கு குளிச்சிட்டு வந்திடு... பவித்ராவுக்கு இங்கேயே முழுக்கு போட்டுட்டு.. அவ திரும்பி வரப்போறதில்லே.. இந்தா பக்கெட்டு.. கிணத்து தண்ணியே சேந்தி தலைக்கு ஊத்திக்கோ" என்று சிறிய மாமா சொல்லிவிட்டு நந்தவன படிக்கட்டுக்கு அருகே சென்று அமர்ந்தார்.

மாமா கொடுத்த வாளியை அந்த பெரிய கிணற்றில் விட்டு தண்ணீர் சேந்தி கண்ணன் தலைக்கு விட்டுக் கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமா, கண்ணனை பவித்ராவின் நினைவுகளில் இருந்து மீட்டு கொண்டுவர தான் பேசிய பேச்சுகள் ஒரு சிறிய தாக்கத்தை முதற்கட்டமாக ஏற்படுத்தி இருக்கின்றன என்று நம்பினார். அப்போது திடீரென கண்ணன் ஒரு செயலைச்   செய்தார். அவர் அந்தப் பெரிய கிணற்றின் சுற்றுச் சுவர் மீது ஏறி நின்று கொண்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமாவுக்கு அதிர்ச்சி. உடனே கண்ணனின் அருகில் ஓடி வந்தார். "கண்ணா. என்ன ஆச்சி...? கீழே இறங்கப்பா..!" என்று கூவிக் கொண்டே வந்தார்.

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்.

தொடர்ந்து... "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா..!!" என்றவாறு இரண்டு கைகளையும் விரித்து கிணற்றில் விழத் தயாரானார் கண்ணன்.

மாமா பதறிப் போனார்..!?


(தொடரும்.)

Sunday 27 November 2011

மதனப் பெண் 26 - வாய் விட்டு அழுதிடு

நன்கு வாழ வேண்டிய இளம் வயதில் ஒருவரை மரணம் தழுவிக் கொண்டால் சம்பந்தப்பட்டவர் வீட்டில் எப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சோகம் நிலவுமோ அச்சோகம் வரலஷ்மி மற்றும் சுந்தரத்தின் வீட்டில் நிலவியது. மேலும் மாமாமார்கள் , சித்தப்பாமார்கள் என சொந்தபந்தம் வட்டத்தில் பவித்ராவும் கண்ணனும் செல்லப் பிள்ளைகள். எனவே மொத்த உறவே அழுது கொண்டிருந்தது.

பவித்ராவின் அகால மரணம் அக்குடும்பத்தினரை பெரிதும் பாதித்து விட்டது. ஒரு புறம் பவித்ராவின் இழப்பு. மற்றொரு புறம் அவள் விட்டுச் சென்ற இரண்டு பிஞ்சுக் குழந்தைகள். மகள் ரோஹிணிக்கு வயது 5. மகன் சத்யதேவுக்கு வயது 3. இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அந்திம சாங்கியங்கள் முடிந்து பவித்ராவை இடுகாட்டில் புதைக்கும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. அவளது உடலை அலங்கரிப்பட்ட ஊர்தியில் இருந்து கீழே இறக்கி வைத்திருந்தனர். உடலின் அருகே ரோஹினியும், சத்தியதேவும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மண்ணுக்குள் செல்லவிருக்கும் தாயின் முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து கண்ணனின் சித்தப்பா குழந்தைகளை அப்படி அமர வைத்திருந்தார். துருதுருவென இருக்கும் இரண்டு குழந்தைகள் மீதும் கண்ணனின் சித்தப்பாவுக்கு மிகவும் பிரியம். அடிக்கடி பார்க்க வருவர். பொம்மைகள் வாங்கி தருவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி விளையாடுவார். இதனால் குழந்தைகளும் அவரிடம் 'தாத்தா.. சின்ன தாத்தா" என்று நன்றாக ஒட்டிக்கொண்டன. "தனது தாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ஏன் எழுந்திரிக்கவில்லை.."  என்று ரோஹினி புரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மீது மழைத்துளி விழாமல் இருக்க அவர் குடை விரித்து பிடித்திருந்தார். விபத்து மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பவித்ராவின் உடலை கொடுத்தனர். உடல் முழுவதும் துணிக் கட்டுகள். முகம் மட்டும் தெரிகிறது. அந்த முகத்தில் தூறிக் கொண்டிருந்த மழை துளிகளைக் கண்டு, அந்தக் குழந்தைகள் இருவரும் செய்தது, அனைவரையும் மீண்டும் அழ வைத்தது.

அமர்ந்திருந்த சத்தியதேவ் மெல்ல நகர்ந்து தனது பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை லேசாக துடைத்து விட்டான். தொடர்ந்து ரோஹினி, "தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

"தெய்வமே.. உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ? இந்த அறியாப் பிஞ்சு குழந்தைகளை இப்படி தவிக்க விட்டு விட்டாயே..." என்று நெஞ்சு குமுறி அழ ஆரம்பித்தார், கண்ணனின் சித்தப்பா.

கண்ணன் சித்தப் பிரமை பிடித்தார் போல் இருந்தார். பவித்ராவின் முகத்தை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் பேசவில்லை. "கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

அடக்கம் செய்பவர் சொன்னவற்றை கண்ணன் ஒரு இயந்திரமாக செய்து கொண்டு வந்தார். இதோ.. அழகு தேவதை பவித்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்டது. பெண் உறவினர்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு 'ஓ..'வென அழ ஆரம்பித்தனர். கடைசி பிடி மண் எடுத்து கண்ணன் பவித்ராவின் உடல் மீது இட்டார்.

எல்லாம் முடிந்து விட்டன. பவித்ரா தனக்கான ஒரு இறுதி இடத்தில் அமைதி ஆனாள். அவளுடன் அவளது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே  புதைந்து போயின.. 

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...