இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Thursday 29 December 2011

மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !

கண்ணனின் சீனியர் அலுவலகம் மதுரை கீழ மாரட் வீதியில் அமைந்துள்ளது. அலுவலகத்துடன் கூடிய வீடு. பெரிய கட்டடம். வெளியில் எஸ்.கே.நாக லிங்கம், வழக்கறிஞர்., என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட பெயர் பலகை. முன்னால் கட்சிகாரர்கள் அமர்வதற்கான அறை. அருகிலேயே ஜூனியர் வழக்குரைஞர்கள், குமாஸ்தா அமரும் அறை. உள்ளே சீனியர் நாகலிங்கத்தின் தனியறை. நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கண்ணின் சீனியர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் ஆபிஸ் பாய் தவிர வேறு யாரும் இல்லை.  கண்ணனையும் குழந்தைகளையும் பார்த்தவுடன் அவர் உற்சாகமானார்.

"வா. கண்ணா.." என்று அன்பாக வரவேற்றார். குழந்தைகளை பார்த்தவுடன் "ஹாய்... குட்டீஸ்.." என்று அரவணைத்துக் கொண்டார். இரண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டனர். அவர் சத்தியாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, ரோஹிணியிடம், "நான் உங்களுக்கு தாத்தா மாதிரி.. உங்க தாத்தா வேதாச்சலதோட குட் ஓல்ட் பிரண்ட்.." என்று அவர் தன்னை ஒரு மிகப் பெரிய வக்கீல் என்பதை மறந்து சிறு குழந்தையாக பிரியமாக அவர்களிடம் பேசினார்.

வாழ்வில் வள்ளல், வறியவர்களுக்கு  இலவசமாக சட்ட உதவி, தொழிலில் சிங்கம்,  மனைவிக்கு தங்கம், நீதிமன்ற வட்டாரத்தில் அவரை எல்லோரும் அவரது பெயரின் முதல் மூன்று எழுத்துகள் S.K.N .என்பதைக் கூட்டி பிரபலமாக 'ஸ்கேன்' என்று அழைப்பார்கள். வழக்கு ஆவணங்களை பரிசீலிப்பதில், அவரது பார்வையும் ஒரு 'ஸ்கேன்' தான். குறைவில்லா வருமானத்துடன் ஆண்டவன் அவருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். 


ஆனால் என்ன சொல்லி, என்ன செய்ய? ஆண்டு அனுபவிக்க, பெயர் சொல்ல  அவருக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை. அவரும், அவரது மனைவி கண்மணியும்  வேண்டாத தெய்வங்கள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. செய்யாத தான தருமங்கள் இல்லை. ஆண்டுகள் போனதே தவிர, ஆண்டவன் கண் திறந்து பார்க்கவில்லை. முதலில் மிக்க மன வருத்தமடைந்த அவர், பின் அதை பற்றி நினைக்கவில்லை. அவர் 'டேக் இட் இசி' பாலிசியை பின்பற்றுபவர். கேட்டால், "இப்படி சில சமயங்களில் நடந்து விடுவதுண்டு.... நான் வேற ஒரு காரியத்துக்காக, என்னோட தொழிலுக்காக படைக்கப்பட்டிருக்கேன் என்று எனக்கு கடவுள் உணர்த்தியிருக்கார். அதுக்காக எனக்கு குழந்தைகள் பொறுப்பை ஆண்டவன் தரவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.  வயது 60  ஆகிறது. அவரது மனைவி கண்மணியை இன்றும் 'செல்லம்.. கண்ணு..' என்று தான் எல்லோர் முன்பும் அழைப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாகி விட்டனர். வாரம் தவறாமல் கோவில் அல்லது உணவகம் என்று வெளியே கிளம்பி விடுவர். ஆண்டு தவறாமல் கோடை விடுமுறையில் வெளிநாட்டு சுற்றுலா. கிட்டத்தட்ட உலக நாடுகளில் பாதிக்கும் அதிகமானதை பார்த்து விட்டனர், இத்தம்பதிகள்.  எல்லா உறவினர்களிடமும் பாசமாக பழகுவதால், இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் வருகை அதிகம் இருக்கும்.

இப்படிப்பட்ட அவர் கண்ணனின் குழந்தைகளை பார்த்தவுடன் குதூகலமானதில் வியப்பில்லை. உடனே அருகில் உள்ள அரசன் ஸ்வீட் கடையில் இருந்து ஸ்வீட், பப்ஸ் வாங்கி வரச் சொல்லி ஆபிஸ் பையனை அனுப்பினார்.

ஸ்வீட், பப்ஸ் வந்தது. எல்லோரும் சாப்பிட்டனர். அப்போது... "சொல்லு கண்ணா.. எப்படி இருக்கே..? அம்மா எப்படி இருக்காங்க.? மக கொடைக்கானல் ஸ்கூல்லே எப்படி படிக்கிறா? ஹொவ் இஸ் கோயிங் லைப் ?" என்று சில கேள்விகளை கேட்டார். "எல்லாம் ஓரளவு சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. ஆனா என்னதான் நான் எனக்குநானே சமாதானம் பண்ணிக்கிட்டாலும் அவளை என்னலே மறக்க முடியலை.." என்று கண்ணன் சற்று சுருதி குறைந்த குரலில் சொன்னார்.

"கண்ணா.. போனதை நினைச்சு வருத்தப்பட்டா உன் மனசு, உடம்பு ரெண்டும் கெட்டுப் போகும்.. ஆக வேண்டிய வேலையைப் பாரு.. நிறைய கேஸ் வருது.. எல்லாம் எடுத்து நடத்து..கட்டி முடிச்ச வீட்டை கிரஹப் பிரவேசம் பண்ணு.. அதுக்கு முன்னாடி பவித்ராவோட வருஷ திதி வருதுன்னு நினைக்கிறன்.. அதை முடி.. உனக்கு நிறைய வேலை இருக்கு கண்ணா.. அப்புறம் .... ...  " என்று சீனியர் நாகலிங்கம் பேசிக் கொண்டே இருக்கும் போது அவரது மனைவி கண்மணி, கண்ணனும் குழந்தைகளும் வந்திருப்பதை அறிந்து பில்டர் காபி போட்டு எடுத்து வந்திருந்தார்.

"வா கண்ணா.. எப்படி இருக்கேப்ப...? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. நீ தனியா ஆபிஸ் போட்டப்புறம் இவருக்கு பர்டன் ஜாஸ்தியாயாய்டிச்சு.. இப்போ ரொம்ப செலக்ட் பண்ணி கேஸ் எடுக்கிறாரு. இப்போ இருக்கிற ஜுனியருங்க உன்னளவு வேகம் இல்லே..! எப்படியோ சமாளிக்கிறோம்.. சரி அதே விடுப்பா.." என்றவாறு ரோஹிணியை வாரியணைத்து செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தார். அப்படியே சத்தியதேவுக்கும்.

"பவித்ரா போனதுக்கப்புறம் நீ ரொம்ப இளைச்சு போயிட்டே.. உன் முகத்திலே பழைய சந்தோசம் இல்லே.. குழந்தைகளை பாத்தா பாவமா இருக்கு.. உங்கம்மா வேற பாவம்.." என்று கண்ணனை பார்த்து பேசிக் கொண்டே வந்த கண்மணி, அப்படியே தனது பார்வையை தனது கணவர் நாகலிங்கம் பக்கம் திருப்பி, "இவர் கூட பவித்ராவோட வருஷ திதி முடிஞ்ச பிறகு உன்கிட்டே ஒரு மேட்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. இல்லே செல்லம்..!" என்று அவரது ஆமோதிப்பை எதிர்பார்க்கும் வண்ணம் சொன்னார். அதற்கு அவர் காபி குடித்துக் கொண்டே தலையை  ஆட்டினார்.

"அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டார்.  சீனியரின் மனைவி கண்மணியை கண்ணன் 'அக்கா' என்று அழைப்பது வழக்கம்.

"முதெல்ல, எல்லாம் ஒன் பை ஒன்னா முடிப்போம்.. அதுக்கப்புறம் பேசிக்கலாம்..." என்று கண்மணி கூறினார். பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ணன் தனது குழந்தைகளுடன் விடை பெற்றார். சத்யாவை சீனியர் நாகலிங்கம் தனது தோளில் போட்டுக் கொண்டு வந்து வாசல் வரை வந்தார். அவனும் நன்கு அவரிடம் ஒட்டிக் கொண்டான்.  பின் அவனை கண்ணனிடம் கொடுத்து விட்டு வழியனுப்பி வைத்தார். அதே நேரத்தில் "அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டாரே தவிர பிறகு அதைப் பற்றி அவர் அந்த வாசல் படியிலேயே மறந்து போனார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிவுக்கு வரவுள்ளது. புத்தாண்டும் பிறக்க உள்ளது.  பவித்ரா இறந்து போனதால் கண்ணன் குடும்பத்தினர் எந்தப் பண்டிகையையும்  கொண்டாட வில்லை. எனினும், குழந்தைகள் என்ன செய்தது பாவம்? அவர்களை மகிழ்விக்க புத்தாண்டுக்கு முன்தினம் கண்ணன் அழகாக செய்யப் பட்ட ஒரு புத்தாண்டு கேக் வாங்கி வந்தார். அதை புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெட்டலாம் என்று ரோஹிணியிடம் சொன்னார்.

அழகான அந்த கேக்கை பார்த்தமாத்திரத்தில் ரோஹினிக்கும், சத்தியதேவுக்கும் பிடித்து போயிற்று. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி. 'இப்போதே வெட்டிவிடலாம்' என்று சத்தியா குறும்பாக சைகை காட்டினான். அதற்கு, 'உன் மூக்கை அறுத்து விடுவேன்' என்று கேக் வெட்டும் பிளாஸ்டிக் கத்தியை ரோஹினி காட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்கத தொடங்கி பின் கண்ணனை சுற்றி வந்தனர். கண்ணனும் விளையாட்டு காட்டினார். இப்படி கண்ணன், தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வரலக்ஷ்மியும் மகிழ்ந்தார்.


அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.. கண்ணன் எடுத்தார்... "அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.." என்று ஒரு இளம் பெண்ணின் குரல் ஒலித்தது. கண்ணனும் சற்று குழம்பியவாறு, "Same to you.." என்று கூறி விட்டு தொடர்ந்து, "May I know with whom I am talking now?" என்று கேட்டார். ஆனால் இதை நன்கு கேட்டு விட்டு, மறுமுனை பொறுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. கண்ணன் இந்தக் குரலை இதற்கு முன் எங்கோ கேட்டதை போல் உணர்ந்தார். ஆனால் ஞாபகம் வரவில்லை. நீதிமன்றத்தில் யாராவது தெரிந்த பெண் வழக்குரைஞராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படி இருந்தாலும், யார் பேசுகிறீர்கள் என்று கேட்ட பிறகும், பதில் சொல்லாமல் ஏன் அப்பெண் தொலைபேசியை வைத்தார் என்ற கேள்வி கண்ணனுக்கு எழுந்தது. பிறகு, 'யாரோ நமக்கு வாழ்த்து சொன்னார்கள்.. நாமும் பதில் வாழ்த்து சொல்லி விட்டோம்.. அவர் யாராக இருந்தால் நமெக்கென்ன?" என்று அதை பற்றி மறந்து விட்டு, புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன்.

நாமும்தானே !


(தொடரும்..)

Tuesday 27 December 2011

மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்தது

வித்ரா மறைந்த பிறகு கண்ணனின் வீடு ஏற்கனவே களையிழந்து இருந்தது.   இப்போது ரோஹிணியை கொடைக்கானல் ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்த பிறகு, வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

ஒரு குடும்பம், அதன் வளர்ச்சி, தொடர்ச்சி என்பது தினமும் முனைந்து பாடுபட்டு மிகுந்த முயற்சியால் கட்டிய கூடு. அது திடீரென கலைந்து விட்டால், மீண்டும் அதை உருவாக்கி வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, என்ன விளைவுகள் ஏற்படும், இன்னும் இது போன்ற பல்வேறு காரணிகளை சிந்திக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு கலைந்து போன வாழ்வை கண்ணன் தனக்கு தெரிந்தவரை சீர் செய்து கொள்ள எடுத்த முதல் முடிவு, ரோஹினியின் கல்வி வாழ்வு சிறக்க வேண்டும்; அதற்கு அவளை தற்போதுள்ள சூழலில் ஹாஸ்டல் பள்ளியில் சேர்ப்பது. பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு  கல்வி வாழ்க்கை கிடைத்தது.  அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பெற்றோர்கள் வருகை தினம். கண்ணன் வெள்ளிக்கிழமை மதியமே மதுரையிலிருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்று விடுவார். இவ்வாறு மாதத்தில் இருமுறை சென்று வருவதால் கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள விடுதி ஒன்றை, தான் வழக்கமாக தங்கும் இடமாக்கிக் கொண்டார், கண்ணன். அவரது வருகை அறிந்து அவருக்காக அறை காத்திருக்கும். அவ்வப்போது வரலஷ்மி, சத்தியதேவ் ஆகியோரை அழைத்து வரவும் கண்ணன் தவறுவதில்லை.

வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் வந்தடையும் கண்ணன்,  விடுதியில் தங்கி மறுநாள் சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ரோஹிணியை பார்ப்பார். அச்சமயத்தில் மற்றெல்லா பெற்றோர்களும் வந்திருப்பர். பள்ளி வளாகத்தில் எங்கு நோக்கிலும் பிள்ளைகளின்  ஆரவாரத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அவர்களுடன் பெற்றோர்களும் சிறுபிள்ளைகள் ஆகி விடுவர்.

தனது தந்தையின் வருகைக்காக ரோஹினி நன்றாக உடுத்திக் கொண்டு, ஒரு குட்டி தேவதையாக கையில் ஒரு ரோஜாப் பூவுடன் காத்திருப்பாள். கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். பிறகு அவளை அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்று, பல இடங்களை சுற்றிக் கட்டுவார்.  போட்டிங், ரெஸ்டாரென்ட், பூங்கா, விளையாட்டு என ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாக போகும். குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது. படிப்பில் சுட்டியான ரோஹிணி தனது பாடங்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பற்றி கண்ணனிடம் நிறைய சளைக்காமல் பேசுவாள். புல்வெளியில் அமர்ந்துகொண்டு அவற்றையெல்லாம் ரசித்து கண்ணன் கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு தினங்கள் போவதே தெரியாது. ஞாயிற்றுக் கிழமை பிரியும் போது மட்டும் ரோஹினியின் முகம் வாட்டமடையும். கொஞ்சம் ஹோம் மேட் சாக்லேட்ஸ். சில முத்தங்கள்.  மீண்டும் வருவதாக சமாதானம். பிறகு விடை பெறல். இது வழக்கமான நிகழ்வானது.

மதுரையில் மகன் சத்தியதேவ் யு.கே.ஜி. படித்து வந்தான். பள்ளிக்கு 'ஸ்கூல் வேனில்' சென்று திரும்பி வந்தான். அவனுடன் வொர்க்ஷீட், டிராயிங், கிளே வொர்க், ஹோம் வொர்க் என வரலக்ஷ்மியும் பொழுது போக்கினார்.  பவித்ராவின் இறப்பிற்கு பிறகு, தற்போது  எல்லாம் ஓரளவு 'செட் ரைட்' ஆனதாக கண்ணன் நம்பினார்; தனது தொழில், மதுரை-கொடைக்கானல் டிரிப், குழந்தைகள் என பிசியானார்.

ரோஹிணிக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் விடுமறை விடப்பட்டது. பள்ளியில் அதன் தாளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகளை கூறிவிட்டு, அவளை கண்ணன் மதுரைக்கு அழைத்து வந்தார். கண்ணனுக்கும் நீதிமன்றம் விடுமுறை. எனவே கண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். சித்தப்பா, சிறிய மாமா என உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்; அளவளாவினார். பேச்சின் ஊடே பவித்ராவை நினைவு கூர்ந்து அவளது பேச்சை எடுக்காமல், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் பற்றி கண்ணன் தொடர்ந்து உரையாடியதைக் கேட்டு எல்லோரும் சற்று நிம்மதி; அமைதி !


கண்ணனின் குடும்பத்தில் மெல்ல மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

தான் தனியாக சட்டத் தொழிலில் நன்கு காலூன்றி விட்டாலும், தனது தொழில் வளர்ச்சிக்கு காரணமாக, அடித்தளமாக இருந்த மூத்த வழக்குரைஞரை கண்ணன் அவ்வப்போது சென்று சந்திக்கத் தவறுவதில்லை. கண்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது சீனியருக்கு மிகவும் கட்டுப்பட்டவர். அவரது எந்த பேச்சையும் தட்டமாட்டார்.  அவர் கண்ணனுக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது நிறைய ஆறுதல் வார்த்தைகள் கூறி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்த்தியவர். பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய சூழலை சுட்டிக் காட்டியவர். மனதிற்கு வலு சேர்த்தவர்.

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு  ஓர்  சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர்.  மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'.

இந்த முறை தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சீனியரை சென்று பார்த்தார் கண்ணன்.

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! 

(தொடரும்...)

Sunday 25 December 2011

மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு

மாமா சுந்தரத்தின் ஆலோசனையை கண்ணன் கூர்ந்து கேட்டார். அதற்கு பதில் தர ஆரம்பிக்கு முன் கண்ணன் ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.

"மாமா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நீங்க ஒரு பிரக்டிகல் மேன். ஆனா ... இன்னும் கொஞ்சம் பிரக்டிகலா தின்க் பண்ணி பாக்கணும். முதல்லே இங்கே விட்டுட்டு அம்மா அங்கே வந்து இருக்கணும்... இங்கே எப்படி அம்மாவுக்கு வயசாகுதோ, அப்படியே உங்களுக்கும், மாமிக்கும். சொல்லப்போன நீங்க என்  அம்மாவோட அண்ணன்.. வயசு அதிகம்.. நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும். தவிர அம்மாவும் குழந்தைகளும் அங்கே வந்திட்டா நான் இங்கே தனியாள இருக்கணும். ஓட்டல் சாப்பாடு..! வீடு வேற பெருசா கட்டிட்டேன்.. மதுரை டூ கோவை தூரம் அதிகம்" என்று தனது தரப்பை மெல்ல நியாயப்படுத்தி கண்ணன் பேசி வந்தார்.

"மாமா.. இன்னொரு விசயத்தையும் நீங்க கவனிக்கணும்.. குழந்தைகளை நீங்க கொண்டு போய் வளத்தினா, பின்னிட்டு அவங்க என்னை ஒரு நல்ல கார்னர்லே வச்சிருக்கிறது சந்தேகம்.. குழந்தைங்க உங்க பராமரிப்புலே வளருது என்கிற நினைப்புலே நான் என் வோர்கிலே பிசிய இருந்துடுவேன்.. ஏதோ ஒரு டிடாச்மென்ட் ஏற்பட சான்ஸ் இருக்கு.. ரோஹினி ஹாஸ்டல்லே படிச்சா நான் கண்டிப்பா போய் பாத்துட்டு வருவேன்.. என் குழந்தைங்க மேலே எனக்கு பெர்சனல் ரெஸ்பான்சிபிளிட்டி அதிகம் இருக்கணும்..  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கணும்.. அவங்க மம்மி இறந்த பிறகு அவங்களை டாடிதான் வளக்கிறார் என்ற உணர்வு அவங்களுக்கு இந்த வயசிலிருந்தே ஏற்படணும்.." என்று தனது மன உணர்வுகளை கோவையாக சொன்னார் கண்ணன்.

"அதனாலே மாமா.. நான் எடுத்திருக்கிற டிசிசன் வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் உங்க ஆசீர்வாதம் ஒன்னு மட்டும்தான்.." என்று கண்ணன் முடித்தார்.

சுந்தரத்திற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்துடன் முன்னதாக தான் சொல்ல வந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம், அதற்கு இது தருணமல்ல  என்று முடிவு செய்து விட்டார். "சரி மாப்பிள்ளே.. நீங்க நினைச்ச மாதிரி செய்யுங்க.. நீங்களே குழந்தைகளே கவனிச்சாத்தான் அதுக பின்னிட்டு உங்க மேலே பாசமா இருக்கும்ன்னு சொல்லறீங்க.. அதுக்கு நாங்க தடையா நிக்க விரும்பலை.. குழந்தைகளையும் , அம்மாவையும் பாத்துகோங்க... நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்." என்று சொல்லிவிட்டு அடுத்தநாள் சர்மிளாவுடன் கோவை புறப்பட்டு சென்று விட்டார், சுந்தரம்.

வரலக்ஷ்மி மெல்ல உடல் நலம் தேறி வந்தார். பேரன், பேத்தி இருவரும் வரலக்ஷ்மியிடம் சமத்தாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய வேலைக்காரி ஒருவரை அதிக சம்பளத்தில் வரலக்ஷ்மி நியமனம் செய்தார். அவர் தன்னை இயல்பான நிலைக்கு தாயார்படுத்தி கொண்டார். தினமும் சாப்பிட வேண்டிய இதய நோய் மாத்திரைகளை தொடர்ச்சியாக சாப்பிட பழகிக் கொண்டார். சில சிறிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு கற்றுக் கொண்டார். டென்சனை தவிர்த்தார். சமைக்கும் நேரம் போக குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். எனினும் இப்படி நிறைய நேரம் அவரால் உற்சாகமாக இருக்க இயலவில்லை. சோர்வு ஏற்பட்டது. இப்படியாக சுமார் 10 நாட்கள் சென்று விட்டன.


கோடை விடுமுறை முடிவடையும் நேரம். கண்ணன் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுபடி ரோஹிணியை கொடைக்கானல் பள்ளியில் சேர்க்க தயாரானார். வரலக்ஷ்மி, சுந்தரம், சர்மிளா உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்று ரோஹிணியை பள்ளியில் விட்டனர். ஹாஸ்டல் வார்டன், பள்ளியின் சிஸ்டர் ஆகியோரிடம் ரோஹினி 'தாயில்லாக் குழந்தை' என்ற விவரத்தைக் கூறி கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தனர். 

ரோஹிணிக்கு தனது தந்தை கண்ணனை விட்டு பிரிய மனமில்லை. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.  கண்ணனுக்கும், மற்றவர்களுக்கும்  அழுகை வந்து விட்டது. பிறகு ஒரு வழியாக ரோஹினியின் புது தோழிகள் வந்து சமாதனம் செய்தனர்.  "ரோஹினி அழதேம்மா... டாடி இங்கேதான் இருக்கப் போறேன்... உன்னை அடிக்கடி வந்து பாத்திட்டு போவேன்.. உன்னை சண்டேஸ்லே நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போவேன்.. நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தருவேன்.. உங்களுக்கு இங்கே நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. தம்பியும் அடுத்த வருஷம் இங்கேயே படிக்க வந்திடுவான்.  நீங்க நல்ல படிக்கணும்...  சரியா..? அழக்கூடாது... நீங்க அழுதா டாடி அழுவேன்.. கண்ணை துடைச்சிகோங்க..." என்று பலவாறு சமாதானம் கூறி கண்ணன் மெல்ல ரோஹிணியிடமிருந்து விடை பெற்றார்.

கண்ணனின் மனதில் பவித்ரா ஒரு புன்சிரிப்புடன் மின்னலாக தோன்றி மறைந்தாள். 

(தொடரும்)

Saturday 24 December 2011

மதனப் பெண் 33 - மாமாவின் நல்ல ஆலோசனை

தனது மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து மாமா சுந்தரம் பல்வேறு ஊகங்களுக்கு போனார். ஒருவேளை தான் நினைத்துக் கொண்டிருந்த விசயத்தைதான் மாப்பிள்ளையும் சொல்லப் போகிறாரோ..? என்றும் சுந்தரம் நினைத்தார். எனினும் மாப்பிள்ளை சொல்வதை முதலில் கேட்போம் என்று கருதி தான் சொல்ல வந்த விசயத்தை தள்ளி வைத்து விட்டார்.

"நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே.. சொல்லுங்க மாப்பிள்ளே.."

"ஒண்ணுமில்லே மாமா.. நான் உங்ககிட்டே ஏற்கனவே கோடு போட்டு காட்டியதுதான்... இருந்தாலும் அது சரி வருமா என்ற யோசனையும் எனக்கு இருந்தது... ஆனா அதுக்கான ஒரு டிசிசன் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போ எனக்கு ஏற்பட்டு இருக்கு.. இது சரியான நேரமும் கூட.. முக்கியமா குழந்தைங்க நல்ல வளரனும்.. எங்க அம்மாவும் நல்ல இருக்கணும்.. எனக்கு தொழில் அது இதுன்னு நேரம் போய்கிட்ருக்கு.. நான் பெர்சனலா குழந்தைங்கலே கவனிக்க முடியுமா என்பது கொஞ்சம் டிபிகல்டியா இருக்கு.. அதுக்காகதான் இந்த முடிவு.. எனக்கு வேற வழி தெரியலை.. " என்று நிறைய பீடிகைகளை போட்டு கண்ணன் பேசிக் கொண்டே போனார்.

"அதெல்லாம் சரி மாப்பிளே.. என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே.." என்று சுந்தரம் சற்று அங்கலாய்ப்புடன் கேட்டார்.

"இப்போ ரோஹிணிக்கு சம்மர் வெகேசன். 2 -ஆம் வகுப்பு போகப் போறா. சத்தியா யு.கே.ஜி. போகப் போறான். ரோஹினி நல்ல படிக்கிறா. அவளை கொடைக்கானல்லே இருக்கிற போர்டிங் ஸ்கூல்லே சேர்க்கப் போறேன். அப்ப்ளிகேசன் வாங்கிட்டேன். சத்தியா 1 -ஆம் கிளாஸ் போகிறப்போ அவனையும் அந்த ஸ்கூல்லே சேர்க்க முடிவு செய்திருக்கேன். ரெண்டு குழந்தைகளையும் வைச்சு அம்மாவலே நேரத்துக்கு சமைச்சு போடா முடியலே.. ரெண்டும் ரொம்ப சேஷ்டை செய்யறாங்க.. தவிர  அம்மா, ஏதோ நியாபகத்திலே ஏதேதோ செய்றாங்க.. பதற்றபடறாங்க .. ஹோம் வொர்க் கோச்சிங் தெரியலே.. அதனாலேதான் இந்த முடிவு.  நான் மாசத்துக்கு ஒரு தடவை கொடைக்கானல் போய் ரோஹிணியை பார்த்திட்டு வரப் போறேன். என்ன மாமா.... மதுரையிலிருந்து இதோ இங்கிருக்கிற வத்தலகுண்டு ஒரு மன்நேரம். அங்கிருந்து 2  மணி நேரம்  கொடைக்கானல். போயிட்டு ஒரு நாள் அங்கே தங்கிருந்து ரோஹிணியை பாத்திட்டு அடுத்த நாள் வந்திடப் போறேன்," என்றார் கண்ணன்.


மாப்பிள்ளை கண்ணன் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்த சுந்தரத்திற்கு இந்த சங்கதி அவரது மனதில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. தான் சொல்ல வந்த விசயத்தைப் பற்றி அவர் வாயைத்   திறக்கவில்லை. மாறாக, "அதான் குழந்தைகளே நாங்க கூட்டிகிட்டு போய் வளத்துரோம்ன்னு முதல்லேயே சொன்னோம்ல்லே மாப்பிளே.. . நீங்க இப்போ ஹாஸ்டல்லே சேக்கணும்ன்னு சொல்றீங்க.. இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை... நீங்க குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்ககிட்டே விட்டுரங்க.. கோவையில் எத்தனையோ நல்ல ஸ்கூல் இருக்கு. அதிலே குழந்தைகளை சேக்கறோம்.. நான் உங்கம்மாவையும் கோவைக்கே கூட்டிட்டிட்டு போறேன். அவ எங்ககூட இருக்கட்டும். நீங்க வந்து பாத்துட்டு போங்க.. நீங்க ரோஹிணியை ஹாஸ்டல்லே சேத்து நல்ல படிக்க வைக்கோணம்ன்னு சொல்றீங்க. வேணும்னா அவளை ஊட்டி  ஸ்கூல்லே சேர்ப்போம்.. சத்தியா கோவை ஸ்கூல்லே படிக்கட்டும்...  எங்ககூட இருக்கட்டும்.." என்று சுந்தரம் உள்ளபடி வீட்டுக்கு மூத்தவராக இருந்து படபடப்பாக தனது தரப்பை சொன்னார். 

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..? 

ஆனால் கண்ணன் இதற்கு வேறு ஒரு பதில் சொன்னார்.

(பிறகு சொல்கின்றேன்.)

Friday 23 December 2011

மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?

படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக  வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி,  திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி. தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும்  வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும்  மருத்துவமனைக்கு வந்து  வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4  நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.

சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப  சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

(பின் சொல்கிறேன்..) 

Wednesday 21 December 2011

மதனப் பெண் 31 - அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..

கண்ணன் ஒருவித பீதியுடன் வரலக்ஷ்மியின் அருகில் சென்று பார்த்தார். மெல்லிய குறட்டை சத்தத்துடன் சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. இதைக் கண்டு கண்ணனுக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது. "அம்மா.. அம்மா.. என்னாச்சு உங்களுக்கு?" என்றவாறு  வரலக்ஷ்மியை கண்ணன் மெல்ல தட்டி எழுப்பினார். மெல்ல விழித்துக் கொண்ட  வரலக்ஷ்மி, சற்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "ஒண்ணுமில்லேப்பா... மதியம் சாப்பிட்ட பிறகு எப்பவும் இல்லாத மேனிக்கு ரொம்ப அசதியா இருந்தது... கண்ணை அப்படியே இருட்டிக்கிட்டு வந்தது.. கொஞ்ச நேரம் தலையை கீழே வைக்கலாம்ன்னு படுத்தேன்.. அப்படியே நல்ல தூங்கிட்டேன் போல.. மத்தபடிக்கு ஒண்ணுமில்லே" என்றார்.

"அம்மா.. பி.பி. மாத்திரை ரெகுலரா சாப்பிடுறீங்க இல்லே? மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா.. பாத்துக்குவா... வேணுமின்னா டாக்டர் கிட்டே கூட்டுட்டு போகவா?" என்று கண்ணன் அனுசரணையாக கேட்டார். "வேண்டாம் கண்ணா.. ஏதோ அசதி.. அவ்வளவுதான்" என்றார் வரலக்ஷ்மி.

"சரி ... நீங்க படுத்திருக்கீங்கன்னு நான் அப்படியே மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.. வர்ற வழியிலே ஓட்டல்லே இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்.. சாப்பிடுங்க.. மதியம் கூட நீங்க கொஞ்சம் சாதம்தான் வச்சுகிட்டீங்க.." என்று கூறிகொண்டே தான் வாங்கி வந்திருந்த டிபன் பொட்டலங்களை கண்ணன் பிரிக்க ஆரம்பித்தார்.

வரலக்ஷ்மி 4  இட்லிக்களை திருப்தியுடன் சாப்பிட்டார். கண்ணனும் சாப்பிட்டார். பிறகு இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். கண்ணன் தொலைபேசியில் கோவையிலிருக்கும் தனது மகள் மற்றும் மகனுடன் சிறிது நேரம் பேசினார். இப்படியாக மாலைபொழுது முற்றிலும் மறைந்து இரவு 10௦ மணி ஆகிவிட்டது.

வரலக்ஷ்மி ஒரு கொட்டாவியுடன் மீண்டும் தனது அறைக்கு சென்று படுத்துக் கொண்டார். ஏதும் பேசவில்லை. கண்ணனும் தனது அறைக்கு சென்று படுத்து விட்டார். அவருக்கு நல்ல தூக்கம்.

பின்னிரவு மணி 3.30 இருக்கும். அப்போது, "கண்ணா.. கொஞ்சம் இங்கே வர்றையப்பா..." என்று தன்னை வரலக்ஷ்மி முனகலுடன் மெல்ல அழைப்பது போல் கண்ணன் உணர்ந்தார். கனவா.. என நினைத்து கண்ணன் சட்டென விழித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் கண்ணனை வரலக்ஷ்மி தனது அறையில் இருந்து அழைத்துக் கொண்டிருப்பது அவருக்கு நன்கு கேட்டது.

உடனே கண்ணன் வரலக்ஷ்மியின் அறைக்கு ஓடினார். அங்கே, இரவு மின் விளக்கின் ஒளியில் வரலக்ஷ்மி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது கண்ணனுக்கு தெரிந்தது. கண்ணன் உடனடியாக விளக்கை போட்டார். மேலே மின்விசிறி வேகமாக  சுற்றிக் கொண்டிருந்தது. எனினும்  வரலக்ஷ்மியின் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. மூச்சு விட சிரமப் படுவது போல் தெரிந்தது. 

"கண்ணா.. நெஞ்சை பிசையறா மாதிரி இருக்கு.. மூச்சு விட முடியலே.. மயக்கமா இருக்கு.. ஏதோ பன்னுதப்பா... " என்றார் வரலக்ஷ்மி. "நான் அப்போதே சொன்னேன்.. டாக்டர் கிட்டே ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலன்னு.." என்றார் கண்ணன். பிறகு உடனடியாக தொலைபேசி செய்து ஒரு டாக்சியை வரவழைத்து வரலக்ஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை வாசலருகே வரும் போது வரலக்ஷ்மி மயக்கமாகி துவண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த டூட்டி மருத்துவர்கள் வரலக்ஷ்மியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலில் பிராண வாயு செலுத்தினர். இ.சி.ஜி. பார்த்தனர். அங்கேயே நெஞ்சின் மீது நுண்கதிர் படம் எடுத்தனர்.  வரலக்ஷ்மி வழக்கமாக பரிசோதித்துக் கொள்ளும் இருதய சிறப்பு மருத்துவரை துரிதமாக வரவழைத்தனர்.

அவர் வந்து வரலக்ஷ்மியை சுமார் இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ஊசிகள் சிலவற்றை அவருக்கு இட்டு, சில குறிப்புகளை அங்கிருந்த டூட்டி மருத்துவர்களிடம் கூறிவிட்டு ஐ.சி.யு.-வில் இருந்து வெளி வந்தார்.

"டாக்டர்.. அம்மாவுக்கு பி.பி. ரைஸ் ஆய்டிச்சா.. ஹார்ட் எப்படி இருக்கு?" என்று அடுக்கடுக்காக சில கேள்விகளை படபடவென கேட்டார் கண்ணன்.

"எஸ்.. யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கண்ணன்.. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு.. மைல்ட்ன்னு சொல்ல முடியாது.. பி.பி. நர்மல்லே இல்லே.. நல்ல வேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்திட்டீங்க.. கொலஸ்ட்ரல், சுகர் எல்லாம் டெஸ்ட் செய்யனும். ரெண்டு நாள் இன்டென்சிவ் கேர்லே இருக்கட்டும்.. நாளைக்கு செக் பண்ணிட்டு சில டேப்லேட்ஸ் எழுதி தர்றேன்.." என்றார் மருத்துவர்.

"அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்சன் கூடாது.." என்று கூறிக்கொண்டே கிளம்பி விட்டார் மருத்துவர்.

ஐ.சி.யு. அறைக்குள் வரலக்ஷ்மி பிராண வாயு முகமூடி அணிந்து, ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அதே கையின் ஆட்காட்டி விரல் நூனியில்  நாடித் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்க, மற்றொரு கையின் மேல் பகுதியில் இரத்த அழுத்தத்தை தானாக கண்காணிக்கும் பட்டை பொருத்தப்பட்டிருக்க, தலைக்கு மேலே இவற்றின் அளவுகளை காட்டும் மானிட்டர் பெட்டியுடன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. 


(தொடரும்..) 

Monday 12 December 2011

மதனப் பெண் 30 - அது வெறும் ஒப்புக்குத்தான் !

மேல்தள கட்டடப் பணிகள் 80  சதவீதம் முடிந்து விட்டன. பவித்ரா இருந்தால் விரிவாக கிரஹப்பிரவேசம் செய்திருக்கலாம். பவித்ரா இல்லை. அத்தோடு பவித்ரா இறந்து 6  மாதங்கள்தான் ஆகின்றன. எனவே எளிய முறையில் பால் பொங்கி மேல் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை மாற்றி விடலாம் என கண்ணன் நினைத்திருந்தார். ஆனால், மாமா, சித்தப்பாமார்கள், சில பெரியவர்கள் என எல்லோரும் பவித்ராவின் ஆண்டு திதி முடிந்த பிறகு மேல்தள கட்டத்திருக்கு குடி போகலாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர். இது கண்ணனுக்கும் சரியெனப்பட்டது.

பவித்ரா ஆசைஆசையாகப் பார்த்து வடிவமைத்து, அவளது மேற்பார்வையில் தொடங்கப்பட்ட அலுவலகக்  கட்டடம், படுக்கையறை, சமையலறை.... அந்தக் அறைகளில் எப்படி எல்லாம் தனது கணவனுடன், குழந்தைகளுடன்  வாழ வேண்டும் என்று பவித்ரா கனவு கண்டிருந்தாளோ, நினைத்திருந்தாளோ ? எனவே முதலில் பவித்ராவின் ஆண்டு திதியை நல்ல முறையில் முடித்து விட்டு பிறகு மேல் தள கட்டடத்திற்கு குடி போகலாம் என்று கண்ணனும் முடிவு செய்து விட்டார்.

கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை. குழந்தைகள் இருவரையும் அவரது தாத்தா சுந்தரம் அழைத்து சென்று விட்டார். கண்ணன் நீதிமன்றம் திறந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய சில வழக்குகளை தயார்  செய்து கொண்டிருந்தார்.

பவித்ராவின் மறைவுக்குப் பிறகு கண்ணனை தனிமை நிறைய தொந்தரவு செய்தது. பெரிய நட்பு வட்டத்தை கொண்ட அவர்  இப்போது தான் உண்டு, தனது வேலை உண்டு, வீடு உண்டு, குழந்தைகள் உண்டு என்று மிகவும் சுருக்கமானார். சிரிப்பதை மறந்து போனார். உற்சாகமான முகம் இறுக்கமாகிக் விட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவரால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. பளீர்பளீரென பவித்ராவின் நினைவுகள் அவரது மனதை மின்னலாக தாக்கிக் கொண்டே இருந்தன. குழந்தைகள் மட்டுமே சற்று ஆறுதல். ஆனால் வரலக்ஷ்மியால் இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியவில்லை. சரிவர சமைக்க முடியவில்லை. அவரிடமும் எந்த உற்சாகமும் இல்லை. ஏதோ இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

புரிதல் மிக்க அழகான  மனைவி, பாசமிகு தாய், பொறுப்பான மருமகள் என வலம் வந்த பவித்ராவின் திடீர் மறைவு, கண்ணனின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. பரபரப்பாய், சந்தோசமாய், கலகலவென பம்பரமாய் சுழன்று வந்த பவித்ரா என்ற ஒரு ஒத்தைப் பெண்மணி இல்லாமல் கண்ணன் உட்பட நான்கு ஜீவன்கள் தடுமாறிப் போனார்கள். அவரவர்களுக்கு உண்டான தவிப்பை உணர்ந்தார்கள். மனித வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏற்படும் இழப்பை சட்டென சரி செய்து கொள்ள முடியுமா? ஈடு செய்ய இயலுமா? அப்படி முடிந்தாலும் அது வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகளும் தங்கள் தாத்தா வீட்டிற்கு சென்று இருப்பதால் வீடு வெறிச்சோ என்று இருந்தது. கண்ணன் வெறுமையின் கொடுமையை அனுபவித்தார்.

ஒரு நாள் மதியம் வரலக்ஷ்மி சமைக்கவில்லை. "கண்ணா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கு ஓட்டல்லே இருந்து ஒரு எடுப்பு சாப்பாடு வாங்கிட்டு வந்திடு... என்னால சமைக்க முடியலப்பா..." என்று கொஞ்சம் மூச்சிரைக்க வரலக்ஷ்மி கூறினார். அவ்வாறே கண்ணனும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தார். வரலக்ஷ்மி சரியாகச் சாப்பிடவில்லை. களைப்பாக இருக்கிறது என்று தனது அறையில் சென்று படுத்துவிட்டார். "சரி.. அம்மா ஓய்வெடுக்கட்டும்" என்று கண்ணன் சிறிது  நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை 5  மணி இருக்கும்.. வரலக்ஷ்மியின் அறைக்குள் கண்ணன் எட்டிப் பார்த்தார். அப்போதும் வரலக்ஷ்மி தூங்கிக் கொண்டிருந்தார். 'சரி.. தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கருதி, கண்ணன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அப்படியே கால்நடையாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு கிளம்பிப் போனார். அங்கே தரிசனம் முடிந்து விட்டு கண்ணன் வீடு திரும்பும் போது 7  மணி இருக்கும். வீட்டுக்குள் மின்விளக்கு ஏதும் போடப்படவில்லை என்பதை வெளி ஜன்னல் வழியாக கண்ணன் தெரிந்து கொண்டார். "அம்மா.. இப்படி சாயங்கால வேளையிலே படுத்திருக்க மாட்டங்களே..! ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை...?" என்ற சில வியப்பான கேள்விகளுடன் பூட்டை திறந்து கண்ணன் ஹாலின் மின் விளக்கை போட்டவாறு வரலக்ஷ்மியின் அறைக்கு சென்றார்.

அங்கே மாலையில் கண்ணன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது வரலக்ஷ்மி எப்படி வயிற்றின் மீது கைகளை குறுக்காக இட்டு படுத்து இருந்தாரோ அதே நிலையில் அப்போதும் படுக்கையில் படுத்து இருந்தார்.

கண்ணனை சடக்கென ஒரு பயம் தொற்றிக் கொண்டது. உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. 

(தொடரும்) 

Wednesday 7 December 2011

மதனப் பெண் 29 - உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க !

பவித்ரா இறந்த பிறகு கண்ணன் பல நாட்கள் வெறுமனே இருந்தார். தனது பணிகளை தொடங்கவில்லை. நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள் வழக்கு கட்டுகளை கவனித்துக் கொண்டனர். கண்ணனின் வாழ்க்கை வறண்ட பூமியாக ஆகி விட்டது. அவ்வப்போது நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கட்டட வேலை பாதியில் அப்படியே நின்று விட்டது.

மகள் ரோஹினி மட்டும் பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினாள். மகன் சத்தியதேவ் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. ரோஹிணிக்கு வேண்டியதை செய்து அவளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளை வரலக்ஷ்மி செய்து வந்தார். பவித்ரா வந்த பிறகு ஓய்வில் இருந்த வரலக்ஷ்மிக்கு இந்த திடீர் பணிகள் அவரது உடல்நலத்தை படுத்த ஆரம்பித்தது. அவரால் வீட்டுப் பணிகளை, சமையல் வேலைகளை  முன்பு போல் ஓடியாடி செய்ய இயலவில்லை.  குறிப்பாக மகன் சத்தியதேவ் இரவில் திடீரென முழித்துக் கொண்டு 'மம்மி..மம்மி.." என்று பவித்ராவை தேட தொடங்கினான். அவனை சமாதானப்படுத்தி தூங்க வைப்பது வரலக்ஷ்மிக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இப்படியாக மூன்று மாதங்கள் சென்று விட்டன.

ஒருமுறை தனது பேரக் குழந்தைகளை பார்க்க கோவையிலிருந்து மாமனார் சுந்தரம் வந்திருந்தார். "மாப்பிளே.. நீங்க இப்படியே இருக்கக் கூடாது.. பழையபடி உங்க தொழிலை கவனிக்ககோணும்... குழந்தைகளை பாக்கணும்.. நின்னு போன கட்டட வேலையை முடிங்க.. பவித்ராதான் போயிட்டா..  நீங்களும் இப்படியே இடிஞ்சு போயிட்டா நாங்க என்ன பண்ண முடியும்?" என்று அவர் கண்ணனுக்கு தைரியம் சொன்னார்.

"ஆமா மாமா.. நான் என்னை தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்.. நான் சில முடிவுகளை எடுத்து இருக்கேன்.. முதல்லே ரோஹிணியை ஒரு போர்டிங் ஸ்கூல்லே சேர்த்தப் போறேன்.. சத்தியாவை வர்ற விஜய தசமி அன்னிக்கு எல்.கே.ஜி.-யிலே சேர்த்தப் போறேன். அம்மாவாலே முடியலே.. இந்த கட்டட வேலையை கூடிய சீக்கிரம் முடிக்கப் போறேன்.." என்று தனது மனதில் இருந்த திட்டங்களை கண்ணன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க.. ஆனா.. பிள்ளைங்களை நல்ல கவனிச்சுக்கோங்க... சத்தியாவை வேணா என்னகிட்டே விட்டுருங்க.. நாங்க அவனை கோயமுத்தூர்லே ஒரு நல்ல ஸ்கூல்லே சேக்கிறோம்... நாங்க பாத்துக்கிறோம்.." என்றார் சுந்தரம்..

ஆனால் அதற்கு கண்ணன் இசையவில்லை. "இல்லை மாமா.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க கவலைபடாதீங்க.." என்றார் கண்ணன். சுந்தரம் குழந்தைகளை பார்த்து விட்டு அடுத்த நாள் கோவை கிளம்பிச் சென்றார்.

விஜயதசமி அன்று மகன் சத்தியாவை மகள் ரோஹினி படித்துக் கொண்டிருக்கும் அதே பள்ளியில் எல்.கே.ஜி.-வகுப்பில் சேர்த்தார். அதே தினத்தில் தனது அலுவலகத்திற்கு பூஜை போட்டு தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினர். கண்ணன் இவ்வாறு வழக்கமான  பணிக்கு திரும்பியது கண்டு அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள், தட்டச்சர், குமாஸ்தா அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் தசரா விடுமுறை முடிந்ததும் கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல ஆரம்பித்தார்.

ஒரு நல்ல நாளில் நின்று போன கட்டட வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். முந்தைய மேஸ்திரி பணிக்கு வரவில்லை. எனவே வேறு ஒரு மேஸ்திரி மற்றும் பொறியாளரை வைத்து வரைபடத்தில் சில திருத்தங்களை செய்து பணிகளை தொடங்கினார்.

கண்ணன் காலையில் தனது அலுவலக அறைக்கு வரும் போது, மறைந்து போன தந்தையார் வேதாச்சலத்தின் நிழற்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்குவது வழக்கம். இப்போது அந்த நிழற்படத்திற்கு அருகே பவித்ராவின் நிழற்படமும் சேர்ந்து விட்டது.

அருகில் இல்லாது போனாலும், உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் மனதார வணங்கி விட்டு கண்ணன் தனது அன்றாட பணிகளை தொடங்கினார். ரோஹினியும் இப்படி வழிபாடு செய்து விட்டு பள்ளிக்கு சென்று வந்தாள். இவ்வாறு வழிபட சத்தியதேவும் பழகிக் கொண்டான். "வாழ்த்த வேண்டிய வயசிலே, என்னை இப்படி கும்பிட வெச்சிட்டேயம்மா...? நீ எங்கே இருந்தாலும் இந்தப் புள்ளைங்களையும், உன் புருசனையும் காப்பாத்து" என்று புலம்பியவாறு இந்த மூவரின் பிரார்த்தனையில் வரலக்ஷ்மியும் அவ்வப்போது சேர்ந்து விடுவர்.

இப்படியாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி காலம் சென்று கொண்டிருந்தது.

ரோஹினி முழு ஆண்டுதேர்வை எழுதி முடித்து விட்டாள். சத்தியதேவ் யு.கே.ஜி.-க்கு தயாராகி விட்டான். கோடைக் கால விடுமுறை தொடங்கி விட்டது. கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தன.

அப்போது ஒரு நாள்...!

(தொடரும்) 

Saturday 3 December 2011

மதனப் பெண் 28 - நான் எதுக்கு மாமா சாகணும்..?

கண்ணனின் விபரீத செயலைக் கண்டு அவரது சிறிய மாமா பதற்றத்தின் உச்சத்திற்கே போனார்.

கண்ணனின் கையை பிடித்து இழுப்பதற்காக அவர் கண்ணனின் அருகே ஓட்டமாக ஓடிச் சென்றார்.

"மாமா.. அவ கூப்புடுறா மாமா..." என்று சொல்லிக் கொண்டிருந்த கண்ணன் இப்போது, "மாமா.. இப்போ பவித்ராவோட குழந்தைங்களும்  தெரியறாங்க... அவ என்னை வரவேனாம்ன்னு சொல்றா மாமா.. குழந்தைங்களை பாத்துக்க சொல்றா... " என்றவாறு கண்ணன் கிணற்றின் சுற்றுச் சுவர் மீதிருந்து கீழே குதித்து அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டார். கண்ணனின் அருகில் வந்துவிட்ட மாமாவுக்கு அப்போதுதான், போன உயிர் திரும்பி வந்தது போல் ஆனது.

அவர் அப்படியே கண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "தெய்வமே.. நான் என்ன பண்ணுவேன்..? இப்படி சோதிக்கிறாயே ..." என்றவர், பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு, "கண்ணா.. கொஞ்ச நேரத்திலே என்ன காரியம் பண்ணப் போனே..? நீ இப்படி பண்ணலாமா? உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

பின் கண்ணன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து சடக்கென விடுபட்டார் போன்று, ஓவென கதறி அழ ஆரம்பித்தார். "பவித்ரா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்டியே ..." என்பதே திரும்பத் திரும்ப அவரது அழுகையின் ஊடே வந்த அவரது குரலாக இருந்தது.

கண்ணனின் துக்கங்கள், மன வேதனைகள், வருத்தங்கள், பவித்ராவின் நினைவுகள் எல்லாம் அழுகையின் வடிவில் வெளி வரட்டும் என்று அவரது மாமா அவரை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டார். கண்ணனின் பெருங்குரல் அழுகையை கேட்டு அந்த நந்தவனத்தில் இருந்த அனைவரும் திரண்டு விட்டனர். நிலைமையை அறிந்து அவர்களில் வயது முதியவர்களாக இருந்த சிலர் கண்ணனை மெல்ல சமாதனப்படுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்ணன் தனது அழுகை, தொடர்ந்து ஏற்பட்ட விசும்பல் எல்லாவற்றையும் மெல்ல நிறுத்தி, அருகில் இருந்த வாளியை எடுத்து கிணற்றில் விட்டு நீர் சேந்தி தலைக்கு மடமடவென ஊற்றிக் கொண்டார். பின் உடலை துண்டால் துவட்டி கொண்டு, உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டார். இப்போது அவரது முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

அருகில் வந்த மாமா, "கண்ணா.. நீ இப்போ பண்ணின மாதிரி எப்பவும் பண்ண மட்டே என்று என்கிட்டே சத்தியம் பண்ணு" என்று சற்று உறுதி கலந்த கண்டிப்புடன் தனது உள்ளங்கையை கண்ணனுக்கு எதிராக நீட்டினர். கண்ணன் அவரது கையை அப்படியே தனது கையால் பற்றிக் கொண்டார். "எனக்கு.. எங்கே பாத்தாலும் பவித்ரா தெரியறா  மாமா.. அவளோட untimely  death  என்னை ரொம்ப பாதிச்சிடிச்சு..  சாரி மாமா.. நான் சரி பண்ணிக்கிறேன்...  எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. பவித்ரா ஆசைப்பட்ட மாதிரி அவங்களை நல்ல வளக்கிறேன்.. அப்போதான் அவளோட ஆத்மா சாந்தியடையும்.. நான் எதுக்கு மாமா சாகணும்..? பவித்ராதான் என்கூடவே இருக்கல்லே...!  இனி குழந்தைங்களுக்காக  வாழப்போறேன்... நாம வீட்டுக்கு போலாம் மாமா.. எல்லோரும் காத்திருப்பாங்க.. " என்றவாறு மாமாவின் கைகளை பிடித்தவாறு கண்ணன் மெல்ல எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார்.

கண்ணன் உறுதியாக பேசுவதை கண்டு மாமாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது.. கண்ணன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மனதளவில் தயாரானார்.



அதிகமாக பிரியம் வைத்திருந்து, தானும் சந்தோசமாக இருந்து, மற்றவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் ஒருவர்,- அதுவும் அவர் அன்பான, அழகான, அருமையான, பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான, வாழ்வை வண்ணமயமாகும் மனைவியாக இருந்து, சிறிய வயதிலேயே திடீரென இறந்து விட்டால் இப்படிப்பட்ட உடனடித் தடுமாற்றங்கள் எல்லா கணவன்மார்களுக்கும்  ஏற்படும். அத்துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

(தொடரும்..)

Tuesday 29 November 2011

மதனப் பெண் 27 - "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா.."

பவித்ராவை மண்ணுக்கு கொடுத்து விட்டு எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.


அவ்வப்போது சின்ன சின்ன விசும்பல்கள் வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பவித்ராவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கேற்றி  ஊதுபத்தி பொருத்தி வைத்திருந்தனர். கண்ணன் அந்தப் புகைப்படத்தின் முன் அமர்ந்தே இருந்தார். பவித்ராவை பார்த்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலசமயம் 'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்.

சாதி மத வழக்கப்படி பத்தாம் நாள் காரியம் செய்வார்கள். ஆனால் பவித்ரா இப்படி துர் மரணம் அடைந்த காரணத்தால் மூன்றாம் நாளே அக்காரியங்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டன. இடுகாட்டில் பவித்ராவை அடக்கம் செய்த இடத்தில் எல்லோரும் கூடினர்.  கண்ணன் பூஜை செய்தார். பவித்ராவின் மரணம் கொடுத்து அதிர்ச்சியில் இருந்து கண்ணன் எள்ளளவும் மீளவில்லை என்பதை அவர் ஏதோ ஒரு சாவி கொடுத்த பொம்மையாக பூஜை செய்ததிலிருந்து எல்லோரும் அறிய முடிந்தது.

பிறகு அருகில் இருக்கும் நந்தவனத்தில் குளித்து விட்டு கண்ணன் வீட்டிக்குள் நுழைய வேண்டும் என்று சமூகப் பெரியோர்கள் கூறினார். இதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது சிறிய மாமா (சுந்தரத்தின் தம்பி) நந்தவனத்திற்கு செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இடுகாட்டில் அந்திமக் காரியம் செய்து விட்டு வரும் உறவின் முறையினர் குளிக்க, உடை மாற்ற, பிற சாங்கியங்கள் செய்ய அதற்கு அருகிலேயே ஒரு இடத்தை பெரிய கிணற்று நீர் வசதியுடன் பூங்காவனம் போல அந்தக் காலத்திலேயே ஒதுக்கி கொடுத்திருந்தனர். அது நந்தவனமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு வரும் வரையில் கண்ணனோ, அவரது சிறிய மாமாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நந்தவனம் வந்து அதன் வாயிற் படியில் கண்ணன் இறங்கும் போது, "கண்ணா.. நீ படிச்சவன்.. வக்கீல்.. யாரும் நிரந்தரம் கிடையாது என்கிறதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அவ போய்ட்ட .. நம்மோட இல்லை என்கிறதை நீ நம்பித்தான் ஆகணும்.. இப்படியே நீ மௌனமா இருந்தா எப்படி..? பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்று கண்ணனின் சிறிய மாமா மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். கண்ணன் எவ்வித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தார்.

தொடர்ந்து, "கண்ணா நீ தலைக்கு குளிச்சிட்டு வந்திடு... பவித்ராவுக்கு இங்கேயே முழுக்கு போட்டுட்டு.. அவ திரும்பி வரப்போறதில்லே.. இந்தா பக்கெட்டு.. கிணத்து தண்ணியே சேந்தி தலைக்கு ஊத்திக்கோ" என்று சிறிய மாமா சொல்லிவிட்டு நந்தவன படிக்கட்டுக்கு அருகே சென்று அமர்ந்தார்.

மாமா கொடுத்த வாளியை அந்த பெரிய கிணற்றில் விட்டு தண்ணீர் சேந்தி கண்ணன் தலைக்கு விட்டுக் கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமா, கண்ணனை பவித்ராவின் நினைவுகளில் இருந்து மீட்டு கொண்டுவர தான் பேசிய பேச்சுகள் ஒரு சிறிய தாக்கத்தை முதற்கட்டமாக ஏற்படுத்தி இருக்கின்றன என்று நம்பினார். அப்போது திடீரென கண்ணன் ஒரு செயலைச்   செய்தார். அவர் அந்தப் பெரிய கிணற்றின் சுற்றுச் சுவர் மீது ஏறி நின்று கொண்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமாவுக்கு அதிர்ச்சி. உடனே கண்ணனின் அருகில் ஓடி வந்தார். "கண்ணா. என்ன ஆச்சி...? கீழே இறங்கப்பா..!" என்று கூவிக் கொண்டே வந்தார்.

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்.

தொடர்ந்து... "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா..!!" என்றவாறு இரண்டு கைகளையும் விரித்து கிணற்றில் விழத் தயாரானார் கண்ணன்.

மாமா பதறிப் போனார்..!?


(தொடரும்.)

Sunday 27 November 2011

மதனப் பெண் 26 - வாய் விட்டு அழுதிடு

நன்கு வாழ வேண்டிய இளம் வயதில் ஒருவரை மரணம் தழுவிக் கொண்டால் சம்பந்தப்பட்டவர் வீட்டில் எப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சோகம் நிலவுமோ அச்சோகம் வரலஷ்மி மற்றும் சுந்தரத்தின் வீட்டில் நிலவியது. மேலும் மாமாமார்கள் , சித்தப்பாமார்கள் என சொந்தபந்தம் வட்டத்தில் பவித்ராவும் கண்ணனும் செல்லப் பிள்ளைகள். எனவே மொத்த உறவே அழுது கொண்டிருந்தது.

பவித்ராவின் அகால மரணம் அக்குடும்பத்தினரை பெரிதும் பாதித்து விட்டது. ஒரு புறம் பவித்ராவின் இழப்பு. மற்றொரு புறம் அவள் விட்டுச் சென்ற இரண்டு பிஞ்சுக் குழந்தைகள். மகள் ரோஹிணிக்கு வயது 5. மகன் சத்யதேவுக்கு வயது 3. இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அந்திம சாங்கியங்கள் முடிந்து பவித்ராவை இடுகாட்டில் புதைக்கும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. அவளது உடலை அலங்கரிப்பட்ட ஊர்தியில் இருந்து கீழே இறக்கி வைத்திருந்தனர். உடலின் அருகே ரோஹினியும், சத்தியதேவும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மண்ணுக்குள் செல்லவிருக்கும் தாயின் முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து கண்ணனின் சித்தப்பா குழந்தைகளை அப்படி அமர வைத்திருந்தார். துருதுருவென இருக்கும் இரண்டு குழந்தைகள் மீதும் கண்ணனின் சித்தப்பாவுக்கு மிகவும் பிரியம். அடிக்கடி பார்க்க வருவர். பொம்மைகள் வாங்கி தருவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி விளையாடுவார். இதனால் குழந்தைகளும் அவரிடம் 'தாத்தா.. சின்ன தாத்தா" என்று நன்றாக ஒட்டிக்கொண்டன. "தனது தாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ஏன் எழுந்திரிக்கவில்லை.."  என்று ரோஹினி புரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மீது மழைத்துளி விழாமல் இருக்க அவர் குடை விரித்து பிடித்திருந்தார். விபத்து மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பவித்ராவின் உடலை கொடுத்தனர். உடல் முழுவதும் துணிக் கட்டுகள். முகம் மட்டும் தெரிகிறது. அந்த முகத்தில் தூறிக் கொண்டிருந்த மழை துளிகளைக் கண்டு, அந்தக் குழந்தைகள் இருவரும் செய்தது, அனைவரையும் மீண்டும் அழ வைத்தது.

அமர்ந்திருந்த சத்தியதேவ் மெல்ல நகர்ந்து தனது பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை லேசாக துடைத்து விட்டான். தொடர்ந்து ரோஹினி, "தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

"தெய்வமே.. உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ? இந்த அறியாப் பிஞ்சு குழந்தைகளை இப்படி தவிக்க விட்டு விட்டாயே..." என்று நெஞ்சு குமுறி அழ ஆரம்பித்தார், கண்ணனின் சித்தப்பா.

கண்ணன் சித்தப் பிரமை பிடித்தார் போல் இருந்தார். பவித்ராவின் முகத்தை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் பேசவில்லை. "கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

அடக்கம் செய்பவர் சொன்னவற்றை கண்ணன் ஒரு இயந்திரமாக செய்து கொண்டு வந்தார். இதோ.. அழகு தேவதை பவித்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்டது. பெண் உறவினர்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு 'ஓ..'வென அழ ஆரம்பித்தனர். கடைசி பிடி மண் எடுத்து கண்ணன் பவித்ராவின் உடல் மீது இட்டார்.

எல்லாம் முடிந்து விட்டன. பவித்ரா தனக்கான ஒரு இறுதி இடத்தில் அமைதி ஆனாள். அவளுடன் அவளது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே  புதைந்து போயின.. 

(தொடரும்)

Tuesday 22 November 2011

மதனப் பெண் 25 - "மாமா.. பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?"

மருத்துவமனையில் பவித்ராவுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் தொடங்கின. அறுவை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டாள். விவரம் அறிந்து கண்ணனின் சக வழக்குரைஞர் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

பவித்ராவுக்கு தலையில் அறுவை தொடங்கியது. எலும்பு முறிவு ஆன இடத்திலும் அறுவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கண்ணன் அறுவை அரங்கிற்கு வெளியே மனம் கொள்ளாமல் துக்கத்தில் தவித்தார். வரலக்ஷ்மி மிகவும் கவலையுடன் குழந்தைகளை கட்டிபிடித்தபடி அமர்ந்திருந்தார். பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து காரில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து மணி நேரம் அறுவை நடந்தது. மூத்த மருத்துவர் ஒருவர் வெளியே வந்தார். கண்ணனும், அவரது நண்பர்களும் விவரம் அறிய அவரை பதற்றத்துடன் நெருங்கினர்.

"கண்ணன்.. ஆபரேசன் எல்லாம் நல்லபடியா முடிச்சது. தலையில் ரொம்ப அடி பட்டிருக்கு. மல்டிபிள் பிராக்ச்சர் ஆகி இருக்கு. ரத்தம் ரொம்ப வெளியே போய்டிச்சு. இப்போ எதுவும் சொல்ல முடியாது. பவித்ரா கண் முளிச்சதான் என்னன்னு சொல்ல முடியும். கடவுளை வேண்டுங்க. " என்று எந்த வகையிலும் சேர்த்தி இல்லாமல் மருத்துவர் சொல்லி விட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் பவித்ராவை அறுவை அரங்கிலிருந்து அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு மாற்றினர். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. பவித்ராவின் உடலில் எந்த அசைவும் இல்லை. பிராண வாயு பொருத்தப்பட்டிருந்தது.

"இந்தக் காட்சியை காணத்தானா இவளை குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து சென்றேன்? தெய்வமே இது என்ன சோதனை?" என்று கண்ணன் வேதனையில் பிதற்றிக் கொண்டிருந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தினர்.

இப்படியே இரவு ஆகி விட்டது. அதற்குள் பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மதுரை வந்துவிட்டனர். அவசர சிகிச்சை அறையின் கதவுக் கண்ணாடி வழியாக பவித்ராவை பார்த்து அவளது தாய் சர்மிளா அழத் தொடங்கினர். சுந்தரத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி. நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார். யார் யாரைத் தேற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை.

இரவு சுமார் 12  மணியளவில் பவித்ராவின் கை விரல் அசைவு தெரிந்தது.  மீண்டும்  ஏதோ முனகுவது போல் பிராண வாய் குழாயையும் மீறி வாய் அசைந்தது. கண்கள் மூடியே இருந்தன. உடனே அங்கிருந்த பயிற்சி மருத்துவர் மற்றொரு மூத்த மருத்துவருக்கு இன்டர்காம் வழியாக தகவல் தெரிவித்தார். அவரும் இன்னும் இரு மருத்துவர்களும் உடனே அவசர சிகிச்சை அறைக்கு வந்தனர். பவித்ராவை பரிசோதித்தனர். பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கண்ணனை உள்ளே வரும்படி அழைத்தனர்.

கண்ணன் உள்ளே சென்று பவித்ராவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "கண்ணன்.. அழக்கூடாது.." என்று மேலும் ஏதோ சொல்ல வருவதை போல மருத்துவர்கள் ஒருவர் மற்றொருவரின் முகத்தை பார்த்துக் கொண்டனர். அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததை அவளது வாய் அருகே காது வைத்து கண்ணன் கேட்டார். விட்டுவிட்டு வந்த அந்த வார்த்தைகளை கோவையாக்கினால், "ம..மா..  பிள்ளைன் .. களை பாத்துப்பீங்....களா ?" என்பது தெளிவானது.. இது கேட்டு கண்ணனுக்கு துக்கம் இன்னும் அதிகமானது.. ஓவென அழ ஆரம்பித்தார்.. "பவித்ரா.. என்னை ஏமாத்திடாதே..." என்று கதற ஆரம்பித்தார். ஆனால் அவரது கதறல் தொடைக்குழிக்குள்ளே அடங்கிப் போனது.

மூத்த மருத்துவர் ஒருவர், "கண்ணன்.. பவித்ராவுக்கு பல்ஸ் இம்ப்ருவ் ஆகலே..  ஹார்ட் பீட் ரெகார்ட் சரியா இல்லே.. கிளாட் பார்ம் ஆகுது. அண்டிகொயக்குலன்ட்ஸ் போட்டாலும், கிளாட் பார்ம் ஆகுது. மனசை தேத்திக்கங்க கண்ணன்.." என்று மெல்ல சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது பவித்ரா ஏதோ ஆழ்ந்து மூச்சு விடுவது போல் நெஞ்சு மேலேறி வந்தது. மூன்று முறை அப்படி செய்திருப்பாள். பின் அவ்வளவுதான். எல்லாம் அடங்கி போனது. மருத்துவர் பவித்ராவின் நாடித்துடிப்பை பரிசோதனை செய்து பார்த்து, "சாரி கண்ணன்.. பவித்ரா இறந்து போய்ட்டாங்க..." என்று வேதனையுடன் கண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.

கண்ணனுக்கு ஒன்று புரியவில்லை.. தான் சிறுவயது முதலே பார்த்து ஆசையுடன்  பழகிய தன் அன்பு மனைவி பவித்ரா இறந்து போனாளா? கண்ணனுக்கு நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை.. அவருக்கு மூச்சு நின்று விடும் போல் ஆனது; பித்துபிடித்தார் போல் ஆனார்.

எல்லோரும்தான்..!

(தொடரும்)
 

Friday 18 November 2011

மதனப் பெண் 24 - பவித்ராவுக்கு என்ன ஆச்சு ?

வரலஷ்மிக்கு மிக அருகில் லாரி வந்து விட்டது. அம்மாவுக்கு ஏதோ ஆகப் போகிறது என்று கண்ணன் நினைத்து எதிர்புறத்தில் இருந்து ஓடி வர ஆரம்பித்து விட்டார்.

அந்த நேரத்தில் பவித்ரா ஒரு காரியம் செய்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் வரலக்ஷ்மியின் கையை பிடித்து தன்னால் இயன்ற மட்டும் வேகமாக திட்டு பகுதிக்கு தரதரவென இழுத்தாள். வரலக்ஷ்மி நிலை தடுமாறி திட்டின் மீது விழுந்தார். லாரி அவரை உரசிய வண்ணம் சென்று நிற்க ஆரம்பித்தது.

அதே நேரம் அழகு பவித்ராவிற்கு என்ன நடந்தது? வரலக்ஷ்மியின் கையை பிடித்து பின்னுக்கு  இழுத்த வேகத்தில் பவித்ராவும் நிலை தடுமாறி பின் பக்கமாக சென்று திட்டை விட்டு தாங்கள் கோவிலில் இருந்து கடந்து வந்த சாலைப் பகுதியில் விழத் தொடங்கினாள்.

ஐய்யகோ...! என்னவென்று சொல்வது..? எப்படிச் சொல்வது? இப்படியும் ஆகுமா? அந்தக் குல தெய்வம் என்ன காரணத்தாலோ கை விட்டு விட்டதே..! முன் எச்சரிக்கைகளை, அறிகுறிகளை கண்ணனின் குடும்பம் கவனிக்காதது குற்றமாகி விட்டதா?

அப்போது அந்த சாலையில் மதுரையில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார், திட்டிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்து கொண்டிருந்த பவித்ராவின் மீது சடக்கென மோதிவிட்டது. மோதிய வேகத்தில் பவித்ரா மீண்டும்  திட்டு பகுதிக்கே  தூக்கி  எறியப்பட்டாள். தேவதை பவித்ராவின் உடல் முழுவதும் ரத்தம் கொப்புளித்து வெளி வரத் தொடங்கியது. தலையில் பலத்த அடி  பட்டிருந்தது .

வரலக்ஷ்மிக்கும் கண்ணனுக்கும் திக் பிரமை பிடித்தார் போல் ஆகி விட்டது. தன் கண் முன்னே தனது செல்ல மனைவி  பவித்ரா விபத்தில் அடிபட்டு ரத்தக் களறியாக தூக்கி எறியப்பட்ட காட்சியை கண்டு கண்ணனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் ஆனது. அந்தக் காட்சியை, உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடனே அருகில் இருந்தவர்கள் அங்கே  கூடிவிட்டனர். அங்கு வந்த பெண்டிர்களில் ஒருவர் உச் கொட்டியவாறு, "அடப்பாவமே.. நான் அப்போதே பார்த்தேன்.. இந்தப் பொண்ணு மாமியாளை காப்பாத்தப் போய் அது இப்போ ஆக்சிடேன்ட்லே மாட்டிகிச்சி" என்றார்.

அப்போது கண்ணன் வந்த காரும் U-Turn எடுத்து வந்து விட்டது. ஒரு 5  நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்து வாழ்க்கை அலங்கோலம் ஆகி விட்டது. பவித்ராவின் பிள்ளைகளுக்கு ஒன்று புரியவில்லை. ஆனால் அவர்கள் தாய் விழுந்து கிடந்த கோலத்தை கண்டு உடனே ஓவென அழத் தொடங்கினார்கள்.

கண்ணன் தட்டுதடுமாறி பவித்ராவின் அருகில் சென்று பார்க்கும் பொழுது, பவித்ராவிற்கு மூச்சு இருந்தது. உடனே பரபரப்பனார். தான் வந்த காரில் பவித்ராவை அள்ளி தூக்கி வைத்துக்கொண்டு, வரலக்ஷ்மியையும் அழைத்துக் கொண்டு உடனே மதுரையில் உள்ள விபத்து சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவமனை நோக்கி விரைந்தார். 'U-Turn எடுத்து வருவதற்குள் வக்கீல் சாரின் வாழ்க்கையே Turn  ஆகி விட்டதே' என்று ஓட்டுனர் ரகுவின் மனதில் பரிதாப எண்ணங்கள் தோன்றின. வழி முழுவதும் வரலக்ஷ்மியும், குழந்தைகளும் அழுது கொண்டே வந்தனர். பவித்ராவின் உடலில் அசைவு இல்லை. ஏற்கனவே சிகப்பாக இருக்கும் பவித்ராவின் உதடுகள் காயம் காரணமாக கிழிந்து மேலும் சிகப்பாகி இருந்தன. அவை மட்டும் அசைவது போல் தெரிந்தன. மூச்சு மெலிதாக வந்து கொண்டிருந்தது. கண்ணனின் மடியில் தலை வைத்து பவித்ரா படுத்து இருந்ததால், அவரது ஆடை முழுவதும் இரத்தமாகி விட்டிருந்தன.

மதுரை வந்தடைந்து,  மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பவித்ரா சேர்க்கப்பட்டாள். அந்த மருத்துவமனை கண்ணனுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயம் என்பதால், அந்தந்த துறை சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் வந்து விட்டனர். ஒரு குழுவாக நின்று பவித்ராவிற்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது தெரிந்தது. பவித்ரா ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

குல தெய்வம் பல எச்சரிக்கைகளை  செய்திருக்கிறது. பல சம்பவங்களை காட்டி இருக்கிறது.  ஆனால் அதை கண்ணனின் குடும்பம் கடை பிடிக்கத் தவறி விட்டது. குல தெய்வத்தை தொழுதால் எல்லாம் சரியாகி விடும் என்று மட்டும் நம்பினர். கோவில் ஆராதனையில் கற்பூர தீபம் திடீரென அணைந்த பிறகும், சாலையை இப்படி எச்சரிக்கை இல்லாமல் கடக்கலாமா? 5  நிமிடம் கால தாமதமாக மதுரை சென்றிருந்தால் ஒன்றும் தலை முழுகி போயிருக்காது. இப்போது மொத்த வாழ்க்கையே கேள்விகுறியானதே ! ஆபத்து நெருங்கும் போது இயற்கை சமிக்கை செய்யும். அதை புரிந்து  கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

இங்கு எல்லாம் தவறாகி விட்டதே..!

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...