இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Thursday 29 December 2011

மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !

கண்ணனின் சீனியர் அலுவலகம் மதுரை கீழ மாரட் வீதியில் அமைந்துள்ளது. அலுவலகத்துடன் கூடிய வீடு. பெரிய கட்டடம். வெளியில் எஸ்.கே.நாக லிங்கம், வழக்கறிஞர்., என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட பெயர் பலகை. முன்னால் கட்சிகாரர்கள் அமர்வதற்கான அறை. அருகிலேயே ஜூனியர் வழக்குரைஞர்கள், குமாஸ்தா அமரும் அறை. உள்ளே சீனியர் நாகலிங்கத்தின் தனியறை. நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கண்ணின் சீனியர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் ஆபிஸ் பாய் தவிர வேறு யாரும் இல்லை.  கண்ணனையும் குழந்தைகளையும் பார்த்தவுடன் அவர் உற்சாகமானார்.

"வா. கண்ணா.." என்று அன்பாக வரவேற்றார். குழந்தைகளை பார்த்தவுடன் "ஹாய்... குட்டீஸ்.." என்று அரவணைத்துக் கொண்டார். இரண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டனர். அவர் சத்தியாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, ரோஹிணியிடம், "நான் உங்களுக்கு தாத்தா மாதிரி.. உங்க தாத்தா வேதாச்சலதோட குட் ஓல்ட் பிரண்ட்.." என்று அவர் தன்னை ஒரு மிகப் பெரிய வக்கீல் என்பதை மறந்து சிறு குழந்தையாக பிரியமாக அவர்களிடம் பேசினார்.

வாழ்வில் வள்ளல், வறியவர்களுக்கு  இலவசமாக சட்ட உதவி, தொழிலில் சிங்கம்,  மனைவிக்கு தங்கம், நீதிமன்ற வட்டாரத்தில் அவரை எல்லோரும் அவரது பெயரின் முதல் மூன்று எழுத்துகள் S.K.N .என்பதைக் கூட்டி பிரபலமாக 'ஸ்கேன்' என்று அழைப்பார்கள். வழக்கு ஆவணங்களை பரிசீலிப்பதில், அவரது பார்வையும் ஒரு 'ஸ்கேன்' தான். குறைவில்லா வருமானத்துடன் ஆண்டவன் அவருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். 


ஆனால் என்ன சொல்லி, என்ன செய்ய? ஆண்டு அனுபவிக்க, பெயர் சொல்ல  அவருக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை. அவரும், அவரது மனைவி கண்மணியும்  வேண்டாத தெய்வங்கள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. செய்யாத தான தருமங்கள் இல்லை. ஆண்டுகள் போனதே தவிர, ஆண்டவன் கண் திறந்து பார்க்கவில்லை. முதலில் மிக்க மன வருத்தமடைந்த அவர், பின் அதை பற்றி நினைக்கவில்லை. அவர் 'டேக் இட் இசி' பாலிசியை பின்பற்றுபவர். கேட்டால், "இப்படி சில சமயங்களில் நடந்து விடுவதுண்டு.... நான் வேற ஒரு காரியத்துக்காக, என்னோட தொழிலுக்காக படைக்கப்பட்டிருக்கேன் என்று எனக்கு கடவுள் உணர்த்தியிருக்கார். அதுக்காக எனக்கு குழந்தைகள் பொறுப்பை ஆண்டவன் தரவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.  வயது 60  ஆகிறது. அவரது மனைவி கண்மணியை இன்றும் 'செல்லம்.. கண்ணு..' என்று தான் எல்லோர் முன்பும் அழைப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாகி விட்டனர். வாரம் தவறாமல் கோவில் அல்லது உணவகம் என்று வெளியே கிளம்பி விடுவர். ஆண்டு தவறாமல் கோடை விடுமுறையில் வெளிநாட்டு சுற்றுலா. கிட்டத்தட்ட உலக நாடுகளில் பாதிக்கும் அதிகமானதை பார்த்து விட்டனர், இத்தம்பதிகள்.  எல்லா உறவினர்களிடமும் பாசமாக பழகுவதால், இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் வருகை அதிகம் இருக்கும்.

இப்படிப்பட்ட அவர் கண்ணனின் குழந்தைகளை பார்த்தவுடன் குதூகலமானதில் வியப்பில்லை. உடனே அருகில் உள்ள அரசன் ஸ்வீட் கடையில் இருந்து ஸ்வீட், பப்ஸ் வாங்கி வரச் சொல்லி ஆபிஸ் பையனை அனுப்பினார்.

ஸ்வீட், பப்ஸ் வந்தது. எல்லோரும் சாப்பிட்டனர். அப்போது... "சொல்லு கண்ணா.. எப்படி இருக்கே..? அம்மா எப்படி இருக்காங்க.? மக கொடைக்கானல் ஸ்கூல்லே எப்படி படிக்கிறா? ஹொவ் இஸ் கோயிங் லைப் ?" என்று சில கேள்விகளை கேட்டார். "எல்லாம் ஓரளவு சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. ஆனா என்னதான் நான் எனக்குநானே சமாதானம் பண்ணிக்கிட்டாலும் அவளை என்னலே மறக்க முடியலை.." என்று கண்ணன் சற்று சுருதி குறைந்த குரலில் சொன்னார்.

"கண்ணா.. போனதை நினைச்சு வருத்தப்பட்டா உன் மனசு, உடம்பு ரெண்டும் கெட்டுப் போகும்.. ஆக வேண்டிய வேலையைப் பாரு.. நிறைய கேஸ் வருது.. எல்லாம் எடுத்து நடத்து..கட்டி முடிச்ச வீட்டை கிரஹப் பிரவேசம் பண்ணு.. அதுக்கு முன்னாடி பவித்ராவோட வருஷ திதி வருதுன்னு நினைக்கிறன்.. அதை முடி.. உனக்கு நிறைய வேலை இருக்கு கண்ணா.. அப்புறம் .... ...  " என்று சீனியர் நாகலிங்கம் பேசிக் கொண்டே இருக்கும் போது அவரது மனைவி கண்மணி, கண்ணனும் குழந்தைகளும் வந்திருப்பதை அறிந்து பில்டர் காபி போட்டு எடுத்து வந்திருந்தார்.

"வா கண்ணா.. எப்படி இருக்கேப்ப...? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. நீ தனியா ஆபிஸ் போட்டப்புறம் இவருக்கு பர்டன் ஜாஸ்தியாயாய்டிச்சு.. இப்போ ரொம்ப செலக்ட் பண்ணி கேஸ் எடுக்கிறாரு. இப்போ இருக்கிற ஜுனியருங்க உன்னளவு வேகம் இல்லே..! எப்படியோ சமாளிக்கிறோம்.. சரி அதே விடுப்பா.." என்றவாறு ரோஹிணியை வாரியணைத்து செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தார். அப்படியே சத்தியதேவுக்கும்.

"பவித்ரா போனதுக்கப்புறம் நீ ரொம்ப இளைச்சு போயிட்டே.. உன் முகத்திலே பழைய சந்தோசம் இல்லே.. குழந்தைகளை பாத்தா பாவமா இருக்கு.. உங்கம்மா வேற பாவம்.." என்று கண்ணனை பார்த்து பேசிக் கொண்டே வந்த கண்மணி, அப்படியே தனது பார்வையை தனது கணவர் நாகலிங்கம் பக்கம் திருப்பி, "இவர் கூட பவித்ராவோட வருஷ திதி முடிஞ்ச பிறகு உன்கிட்டே ஒரு மேட்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. இல்லே செல்லம்..!" என்று அவரது ஆமோதிப்பை எதிர்பார்க்கும் வண்ணம் சொன்னார். அதற்கு அவர் காபி குடித்துக் கொண்டே தலையை  ஆட்டினார்.

"அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டார்.  சீனியரின் மனைவி கண்மணியை கண்ணன் 'அக்கா' என்று அழைப்பது வழக்கம்.

"முதெல்ல, எல்லாம் ஒன் பை ஒன்னா முடிப்போம்.. அதுக்கப்புறம் பேசிக்கலாம்..." என்று கண்மணி கூறினார். பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ணன் தனது குழந்தைகளுடன் விடை பெற்றார். சத்யாவை சீனியர் நாகலிங்கம் தனது தோளில் போட்டுக் கொண்டு வந்து வாசல் வரை வந்தார். அவனும் நன்கு அவரிடம் ஒட்டிக் கொண்டான்.  பின் அவனை கண்ணனிடம் கொடுத்து விட்டு வழியனுப்பி வைத்தார். அதே நேரத்தில் "அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டாரே தவிர பிறகு அதைப் பற்றி அவர் அந்த வாசல் படியிலேயே மறந்து போனார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிவுக்கு வரவுள்ளது. புத்தாண்டும் பிறக்க உள்ளது.  பவித்ரா இறந்து போனதால் கண்ணன் குடும்பத்தினர் எந்தப் பண்டிகையையும்  கொண்டாட வில்லை. எனினும், குழந்தைகள் என்ன செய்தது பாவம்? அவர்களை மகிழ்விக்க புத்தாண்டுக்கு முன்தினம் கண்ணன் அழகாக செய்யப் பட்ட ஒரு புத்தாண்டு கேக் வாங்கி வந்தார். அதை புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெட்டலாம் என்று ரோஹிணியிடம் சொன்னார்.

அழகான அந்த கேக்கை பார்த்தமாத்திரத்தில் ரோஹினிக்கும், சத்தியதேவுக்கும் பிடித்து போயிற்று. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி. 'இப்போதே வெட்டிவிடலாம்' என்று சத்தியா குறும்பாக சைகை காட்டினான். அதற்கு, 'உன் மூக்கை அறுத்து விடுவேன்' என்று கேக் வெட்டும் பிளாஸ்டிக் கத்தியை ரோஹினி காட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்கத தொடங்கி பின் கண்ணனை சுற்றி வந்தனர். கண்ணனும் விளையாட்டு காட்டினார். இப்படி கண்ணன், தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வரலக்ஷ்மியும் மகிழ்ந்தார்.


அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.. கண்ணன் எடுத்தார்... "அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.." என்று ஒரு இளம் பெண்ணின் குரல் ஒலித்தது. கண்ணனும் சற்று குழம்பியவாறு, "Same to you.." என்று கூறி விட்டு தொடர்ந்து, "May I know with whom I am talking now?" என்று கேட்டார். ஆனால் இதை நன்கு கேட்டு விட்டு, மறுமுனை பொறுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. கண்ணன் இந்தக் குரலை இதற்கு முன் எங்கோ கேட்டதை போல் உணர்ந்தார். ஆனால் ஞாபகம் வரவில்லை. நீதிமன்றத்தில் யாராவது தெரிந்த பெண் வழக்குரைஞராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படி இருந்தாலும், யார் பேசுகிறீர்கள் என்று கேட்ட பிறகும், பதில் சொல்லாமல் ஏன் அப்பெண் தொலைபேசியை வைத்தார் என்ற கேள்வி கண்ணனுக்கு எழுந்தது. பிறகு, 'யாரோ நமக்கு வாழ்த்து சொன்னார்கள்.. நாமும் பதில் வாழ்த்து சொல்லி விட்டோம்.. அவர் யாராக இருந்தால் நமெக்கென்ன?" என்று அதை பற்றி மறந்து விட்டு, புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன்.

நாமும்தானே !


(தொடரும்..)

Tuesday 27 December 2011

மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்தது

வித்ரா மறைந்த பிறகு கண்ணனின் வீடு ஏற்கனவே களையிழந்து இருந்தது.   இப்போது ரோஹிணியை கொடைக்கானல் ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்த பிறகு, வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

ஒரு குடும்பம், அதன் வளர்ச்சி, தொடர்ச்சி என்பது தினமும் முனைந்து பாடுபட்டு மிகுந்த முயற்சியால் கட்டிய கூடு. அது திடீரென கலைந்து விட்டால், மீண்டும் அதை உருவாக்கி வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, என்ன விளைவுகள் ஏற்படும், இன்னும் இது போன்ற பல்வேறு காரணிகளை சிந்திக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு கலைந்து போன வாழ்வை கண்ணன் தனக்கு தெரிந்தவரை சீர் செய்து கொள்ள எடுத்த முதல் முடிவு, ரோஹினியின் கல்வி வாழ்வு சிறக்க வேண்டும்; அதற்கு அவளை தற்போதுள்ள சூழலில் ஹாஸ்டல் பள்ளியில் சேர்ப்பது. பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு  கல்வி வாழ்க்கை கிடைத்தது.  அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பெற்றோர்கள் வருகை தினம். கண்ணன் வெள்ளிக்கிழமை மதியமே மதுரையிலிருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்று விடுவார். இவ்வாறு மாதத்தில் இருமுறை சென்று வருவதால் கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள விடுதி ஒன்றை, தான் வழக்கமாக தங்கும் இடமாக்கிக் கொண்டார், கண்ணன். அவரது வருகை அறிந்து அவருக்காக அறை காத்திருக்கும். அவ்வப்போது வரலஷ்மி, சத்தியதேவ் ஆகியோரை அழைத்து வரவும் கண்ணன் தவறுவதில்லை.

வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் வந்தடையும் கண்ணன்,  விடுதியில் தங்கி மறுநாள் சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ரோஹிணியை பார்ப்பார். அச்சமயத்தில் மற்றெல்லா பெற்றோர்களும் வந்திருப்பர். பள்ளி வளாகத்தில் எங்கு நோக்கிலும் பிள்ளைகளின்  ஆரவாரத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அவர்களுடன் பெற்றோர்களும் சிறுபிள்ளைகள் ஆகி விடுவர்.

தனது தந்தையின் வருகைக்காக ரோஹினி நன்றாக உடுத்திக் கொண்டு, ஒரு குட்டி தேவதையாக கையில் ஒரு ரோஜாப் பூவுடன் காத்திருப்பாள். கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். பிறகு அவளை அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்று, பல இடங்களை சுற்றிக் கட்டுவார்.  போட்டிங், ரெஸ்டாரென்ட், பூங்கா, விளையாட்டு என ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாக போகும். குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது. படிப்பில் சுட்டியான ரோஹிணி தனது பாடங்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பற்றி கண்ணனிடம் நிறைய சளைக்காமல் பேசுவாள். புல்வெளியில் அமர்ந்துகொண்டு அவற்றையெல்லாம் ரசித்து கண்ணன் கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு தினங்கள் போவதே தெரியாது. ஞாயிற்றுக் கிழமை பிரியும் போது மட்டும் ரோஹினியின் முகம் வாட்டமடையும். கொஞ்சம் ஹோம் மேட் சாக்லேட்ஸ். சில முத்தங்கள்.  மீண்டும் வருவதாக சமாதானம். பிறகு விடை பெறல். இது வழக்கமான நிகழ்வானது.

மதுரையில் மகன் சத்தியதேவ் யு.கே.ஜி. படித்து வந்தான். பள்ளிக்கு 'ஸ்கூல் வேனில்' சென்று திரும்பி வந்தான். அவனுடன் வொர்க்ஷீட், டிராயிங், கிளே வொர்க், ஹோம் வொர்க் என வரலக்ஷ்மியும் பொழுது போக்கினார்.  பவித்ராவின் இறப்பிற்கு பிறகு, தற்போது  எல்லாம் ஓரளவு 'செட் ரைட்' ஆனதாக கண்ணன் நம்பினார்; தனது தொழில், மதுரை-கொடைக்கானல் டிரிப், குழந்தைகள் என பிசியானார்.

ரோஹிணிக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் விடுமறை விடப்பட்டது. பள்ளியில் அதன் தாளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகளை கூறிவிட்டு, அவளை கண்ணன் மதுரைக்கு அழைத்து வந்தார். கண்ணனுக்கும் நீதிமன்றம் விடுமுறை. எனவே கண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். சித்தப்பா, சிறிய மாமா என உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்; அளவளாவினார். பேச்சின் ஊடே பவித்ராவை நினைவு கூர்ந்து அவளது பேச்சை எடுக்காமல், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் பற்றி கண்ணன் தொடர்ந்து உரையாடியதைக் கேட்டு எல்லோரும் சற்று நிம்மதி; அமைதி !


கண்ணனின் குடும்பத்தில் மெல்ல மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

தான் தனியாக சட்டத் தொழிலில் நன்கு காலூன்றி விட்டாலும், தனது தொழில் வளர்ச்சிக்கு காரணமாக, அடித்தளமாக இருந்த மூத்த வழக்குரைஞரை கண்ணன் அவ்வப்போது சென்று சந்திக்கத் தவறுவதில்லை. கண்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது சீனியருக்கு மிகவும் கட்டுப்பட்டவர். அவரது எந்த பேச்சையும் தட்டமாட்டார்.  அவர் கண்ணனுக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது நிறைய ஆறுதல் வார்த்தைகள் கூறி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்த்தியவர். பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய சூழலை சுட்டிக் காட்டியவர். மனதிற்கு வலு சேர்த்தவர்.

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு  ஓர்  சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர்.  மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'.

இந்த முறை தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சீனியரை சென்று பார்த்தார் கண்ணன்.

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! 

(தொடரும்...)

Sunday 25 December 2011

மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு

மாமா சுந்தரத்தின் ஆலோசனையை கண்ணன் கூர்ந்து கேட்டார். அதற்கு பதில் தர ஆரம்பிக்கு முன் கண்ணன் ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.

"மாமா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நீங்க ஒரு பிரக்டிகல் மேன். ஆனா ... இன்னும் கொஞ்சம் பிரக்டிகலா தின்க் பண்ணி பாக்கணும். முதல்லே இங்கே விட்டுட்டு அம்மா அங்கே வந்து இருக்கணும்... இங்கே எப்படி அம்மாவுக்கு வயசாகுதோ, அப்படியே உங்களுக்கும், மாமிக்கும். சொல்லப்போன நீங்க என்  அம்மாவோட அண்ணன்.. வயசு அதிகம்.. நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும். தவிர அம்மாவும் குழந்தைகளும் அங்கே வந்திட்டா நான் இங்கே தனியாள இருக்கணும். ஓட்டல் சாப்பாடு..! வீடு வேற பெருசா கட்டிட்டேன்.. மதுரை டூ கோவை தூரம் அதிகம்" என்று தனது தரப்பை மெல்ல நியாயப்படுத்தி கண்ணன் பேசி வந்தார்.

"மாமா.. இன்னொரு விசயத்தையும் நீங்க கவனிக்கணும்.. குழந்தைகளை நீங்க கொண்டு போய் வளத்தினா, பின்னிட்டு அவங்க என்னை ஒரு நல்ல கார்னர்லே வச்சிருக்கிறது சந்தேகம்.. குழந்தைங்க உங்க பராமரிப்புலே வளருது என்கிற நினைப்புலே நான் என் வோர்கிலே பிசிய இருந்துடுவேன்.. ஏதோ ஒரு டிடாச்மென்ட் ஏற்பட சான்ஸ் இருக்கு.. ரோஹினி ஹாஸ்டல்லே படிச்சா நான் கண்டிப்பா போய் பாத்துட்டு வருவேன்.. என் குழந்தைங்க மேலே எனக்கு பெர்சனல் ரெஸ்பான்சிபிளிட்டி அதிகம் இருக்கணும்..  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கணும்.. அவங்க மம்மி இறந்த பிறகு அவங்களை டாடிதான் வளக்கிறார் என்ற உணர்வு அவங்களுக்கு இந்த வயசிலிருந்தே ஏற்படணும்.." என்று தனது மன உணர்வுகளை கோவையாக சொன்னார் கண்ணன்.

"அதனாலே மாமா.. நான் எடுத்திருக்கிற டிசிசன் வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் உங்க ஆசீர்வாதம் ஒன்னு மட்டும்தான்.." என்று கண்ணன் முடித்தார்.

சுந்தரத்திற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்துடன் முன்னதாக தான் சொல்ல வந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம், அதற்கு இது தருணமல்ல  என்று முடிவு செய்து விட்டார். "சரி மாப்பிள்ளே.. நீங்க நினைச்ச மாதிரி செய்யுங்க.. நீங்களே குழந்தைகளே கவனிச்சாத்தான் அதுக பின்னிட்டு உங்க மேலே பாசமா இருக்கும்ன்னு சொல்லறீங்க.. அதுக்கு நாங்க தடையா நிக்க விரும்பலை.. குழந்தைகளையும் , அம்மாவையும் பாத்துகோங்க... நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்." என்று சொல்லிவிட்டு அடுத்தநாள் சர்மிளாவுடன் கோவை புறப்பட்டு சென்று விட்டார், சுந்தரம்.

வரலக்ஷ்மி மெல்ல உடல் நலம் தேறி வந்தார். பேரன், பேத்தி இருவரும் வரலக்ஷ்மியிடம் சமத்தாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய வேலைக்காரி ஒருவரை அதிக சம்பளத்தில் வரலக்ஷ்மி நியமனம் செய்தார். அவர் தன்னை இயல்பான நிலைக்கு தாயார்படுத்தி கொண்டார். தினமும் சாப்பிட வேண்டிய இதய நோய் மாத்திரைகளை தொடர்ச்சியாக சாப்பிட பழகிக் கொண்டார். சில சிறிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு கற்றுக் கொண்டார். டென்சனை தவிர்த்தார். சமைக்கும் நேரம் போக குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். எனினும் இப்படி நிறைய நேரம் அவரால் உற்சாகமாக இருக்க இயலவில்லை. சோர்வு ஏற்பட்டது. இப்படியாக சுமார் 10 நாட்கள் சென்று விட்டன.


கோடை விடுமுறை முடிவடையும் நேரம். கண்ணன் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுபடி ரோஹிணியை கொடைக்கானல் பள்ளியில் சேர்க்க தயாரானார். வரலக்ஷ்மி, சுந்தரம், சர்மிளா உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்று ரோஹிணியை பள்ளியில் விட்டனர். ஹாஸ்டல் வார்டன், பள்ளியின் சிஸ்டர் ஆகியோரிடம் ரோஹினி 'தாயில்லாக் குழந்தை' என்ற விவரத்தைக் கூறி கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தனர். 

ரோஹிணிக்கு தனது தந்தை கண்ணனை விட்டு பிரிய மனமில்லை. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.  கண்ணனுக்கும், மற்றவர்களுக்கும்  அழுகை வந்து விட்டது. பிறகு ஒரு வழியாக ரோஹினியின் புது தோழிகள் வந்து சமாதனம் செய்தனர்.  "ரோஹினி அழதேம்மா... டாடி இங்கேதான் இருக்கப் போறேன்... உன்னை அடிக்கடி வந்து பாத்திட்டு போவேன்.. உன்னை சண்டேஸ்லே நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போவேன்.. நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தருவேன்.. உங்களுக்கு இங்கே நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. தம்பியும் அடுத்த வருஷம் இங்கேயே படிக்க வந்திடுவான்.  நீங்க நல்ல படிக்கணும்...  சரியா..? அழக்கூடாது... நீங்க அழுதா டாடி அழுவேன்.. கண்ணை துடைச்சிகோங்க..." என்று பலவாறு சமாதானம் கூறி கண்ணன் மெல்ல ரோஹிணியிடமிருந்து விடை பெற்றார்.

கண்ணனின் மனதில் பவித்ரா ஒரு புன்சிரிப்புடன் மின்னலாக தோன்றி மறைந்தாள். 

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...