இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 26 October 2011

மதனப் பெண் 14 - எதிலும் ஒரு பக்குவம்

பவித்ரா எப்படி உருவத்தில், அழகில் ஒரு நேர்த்தியோ, அப்படியே எல்லா விதத்திலும். 

வாய்க்கு ருசியாக சமைப்பதில் ஒரு நேர்த்தி. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒரு நேர்த்தி. கண்ணன் கொடுக்கும் பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்துவதில் நேர்த்தி. கண்ணனுக்கு எந்த சமயத்தில், எப்படி உடுத்தினால், எப்படி அலங்கரித்துக் கொண்டால் பிடிக்குமோ அவ்வாறு செய்து கொள்வதில் நேர்த்தி. எதிலும் ஒரு பக்குவம். சீராக இருக்க வேண்டும், எல்லாம் அழகாக, ரசிக்கும்படியாக  இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டவள். திட்டமிடுவதில் வல்லமை அவளிடம் நிறைய இருந்தது.

அப்படித்தான் இப்போதும் ஒரு திட்டமிட்டு, தனது முடிவை கண்ணனிடம் சொன்னாள்.

"மாமா, நீங்க தொழிலே நல்ல முன்னுக்கு வந்துகிட்டு இருக்கீங்க.. முந்தி  மாதிரி இப்போ உங்களுக்கு நேரம் கிடைக்கிறதில்லை. நமக்கு ரோஹினி பிறந்து இப்போ கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகப் போவுது. இதோ... நீங்க எதிர்பார்த்த மாதிரி உங்களுக்கு மணியா ஒரு ஆண் வாரிசையும் பெத்துக்  கொடுத்திட்டேன். ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு... கணக்கு சரியாப் போச்சு. பெத்த குழந்தைகளை நல்ல ஜம்முன்னு வளக்கணும். அதனாலே..." என்று சிறிது இழுத்து இடைவெளி விட்டாள் பவித்ரா.

"அதனாலே என்ன பவித்ரா..?" என்று சற்று நெற்றியை சுருக்கியவாறு கண்ணன் வினவினார். 

பவித்ரா தலையை சற்று குனிந்தவாறு, "இல்லே மாமா.. நமக்கு இந்த ரெண்டு குழந்தைகள் போதும்.. நான் கருத்தடை ஆபரேசன் செய்துகிலாம்ன்னு நினைக்கிறேன்.." என்றாள்.

கண்ணனுக்கு இது ஆட்சேபத்திற்குரிய விசயமாக படவில்லை. "பவி.. நீ சொல்றது சரிதான். மூணு வருசத்திலே ரெண்டு குழந்தைகள் ஆயிடிச்சு. இவங்களை நல்ல வளத்தா  அதுவே போதும். நானும் இப்போ இருக்கிற வீட்டை கொஞ்சம் இடிச்சு பெருசா கட்டணும்ன்னு நினைக்கிறேன். அதனாலே பேமலி பிளானிங் செய்துகிறது நல்லதுதான்." என்று பவித்ராவின் முடிவை ஆமோதிக்கும் வண்ணம் கண்ணன் சொன்னார். 

எனினும் பவித்ரா, "நீங்க சரின்னு சொல்லிடீங்க.. எதுக்கும் அத்தே கிட்டே ஒரு வார்த்தை கேட்டுரது நல்லது.. அவங்க கிட்டே கேட்கமே நாமளே முடிவு பண்றது எனக்கு அவ்வளவு சரியப்படலை" என்றாள். 

தனது தாயின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று பவித்ரா கூறியது கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது தாய் தங்கள் விருப்பத்திற்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை என்பதால், "வெரி குட்.. அப்படியே செய்யலாம்" என்றார் கண்ணன். 

பவித்ராவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கண்ணனின் தாயார் வரலக்ஷ்மி வந்திருந்த போது இந்த விஷயத்தை அவரிடம் இருவரும் மெல்ல கூறினார். 

அவர் ஏற்றுக் கொண்டு விடுவார் என்று கண்ணன்-பவித்ராவும் நம்பினார்.

வரலக்ஷ்மி இவர்கள் இருவரின் முடிவை ஏற்றுக் கொண்டாரா?

(தொடரும்) 

Monday 24 October 2011

மதனப் பெண் 13 - நினைத்ததே நடந்தது !

பிரசவ அறையை விட்டு பரபரப்பாக வெளி வந்த மருத்துவரின் முகத்தில் கலவரம் ஏதும் தெரியவில்லை. மாறாக ஒரு சிறிய புன்சிரிப்பு வெளிப்பட்டது. எனவே பவித்ராவிற்கு சுகப் பிரசவம் ஆகியுள்ளது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

ஆனால் அவரது பரபரப்பிற்கு  என்ன காரணம்? ஒருவேளை வேறு ஏதும் சிக்கலோ, என்று கண்ணன், வரலக்ஷ்மி, சுந்தரம் உள்ளிட்ட அனைவரும் எண்ணினார்.  

அவர்கள் அருகில் வந்த டாக்டர், கண்ணனை பார்த்து, "வாழ்த்துகள் வக்கீல் சார்... நீங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருக்கு" என்று சொல்லி சில நொடிகள் இடைவேளை விட்டார். கண்ணனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. "நான் என்ன நினைத்தேன்?.. என்ன நடந்திருக்கிறது?" என்று கண்ணன் சிந்திக்க ஆரம்பித்ததுடன் அவருக்கு விவரம் உடனடியாக விளங்கி விட்டது. "டாக்டர்... நிஜமாவா?" என்று கேட்டார் கண்ணன்.

"ஆமா.. மிஸ்டர் கண்ணன்.. உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எங்களாலும் நம்ப முடியலை. எனி ஹொவ் கன்கிரசுலேசன். பை தி பை, தாயும் சேயும் நலம்" என்று சொல்லிகொண்டே ஒ.பி. பார்க்க டாக்டர் விடுவிடுவென சென்று விட்டார்.

கருவில் உள்ளது பெண் குழந்தை என்று ஸ்கேன் சொன்னது. மருத்துவரும் அப்படியே சொன்னார். அதற்கு என்ன பெயர் சூட்டுவது என்பதைக் கூட  எல்லோரும் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர். ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.  இந்நிலையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தையே பிறந்துவிட்டது. அதாவது 'நினைத்ததே நடந்தது' என்பதால்  எல்லோருக்கும் மகிழ்ச்சி. குறிப்பாக வரலட்சுமிக்கு மிக்க மகிழ்ச்சி.

இப்படி எல்லோரும் கொஞ்சம் நேரம் வியப்புடன் பேசிக் கொண்டு கண்ணனுக்கு வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்தனர். சில மணி நேரங்கள் சென்றன. அப்போது ஒரு செவிலியர், " இப்போ.. நீங்க பவித்ராவையும் குழந்தையையும் போய் பார்க்கலாம். கும்பலா போக வேண்டாம்" என்று சொன்னார். முதலில் அறைக்குள் கண்ணன் தனது முதல் குழந்தை ரோஹிணியுடன் சென்று  பார்த்தார்.

குழந்தை நல்ல  சிவந்த நிறத்துடன் நீண்ட கை, கல் விரல்களை கொண்டு இருந்தது. உயரமாக வளரத்தக்க உடல்வாகு. கண்ணனின் அப்பா வேதாசலத்தின் சாயல் தெரிந்தது. பவித்ராவின் முகத்தில் களைப்பு. மெல்ல புன்முறுவல் பூத்தாள். மெல்லிய குரலில் "மாமா.. சக்சஸ். நம்ம குடும்பத்துக்கு ஒரு குட்டி கண்ணனை பெற்றுக் கொடுத்திருக்கேன்.. ஹேப்பியா ? " என்றாள்.

கண்ணனுக்கு என்ன பதில் பேசுவது என்று தெரியவில்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பவித்ராவின் கன்னத்தில் ஒரு முத்தமும், குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தார்.

பின் எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக பவித்ரா மற்றும் குழந்தையை சென்று பார்த்தனர்.

இப்படி ஐந்து  நாட்கள் சென்று விட்டன. குழந்தைக்கு  சொட்டு மருந்து, பவித்ராவிற்கு சத்து மருந்து என வழக்கமான மருத்துவ கவனிப்புகள் நடந்தன.  இதைத் தொடர்ந்து பவித்ராவை மருத்துவர் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என்று கூறினார். 

அப்போது பவித்ரா ஒரு முக்கிய முடிவெடுத்தாள்  !

அது என்ன முடிவு?  

(பின் சொல்கிறேன்)
Related Posts Plugin for WordPress, Blogger...