இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 7 December 2011

மதனப் பெண் 29 - உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க !

பவித்ரா இறந்த பிறகு கண்ணன் பல நாட்கள் வெறுமனே இருந்தார். தனது பணிகளை தொடங்கவில்லை. நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள் வழக்கு கட்டுகளை கவனித்துக் கொண்டனர். கண்ணனின் வாழ்க்கை வறண்ட பூமியாக ஆகி விட்டது. அவ்வப்போது நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கட்டட வேலை பாதியில் அப்படியே நின்று விட்டது.

மகள் ரோஹினி மட்டும் பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினாள். மகன் சத்தியதேவ் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. ரோஹிணிக்கு வேண்டியதை செய்து அவளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளை வரலக்ஷ்மி செய்து வந்தார். பவித்ரா வந்த பிறகு ஓய்வில் இருந்த வரலக்ஷ்மிக்கு இந்த திடீர் பணிகள் அவரது உடல்நலத்தை படுத்த ஆரம்பித்தது. அவரால் வீட்டுப் பணிகளை, சமையல் வேலைகளை  முன்பு போல் ஓடியாடி செய்ய இயலவில்லை.  குறிப்பாக மகன் சத்தியதேவ் இரவில் திடீரென முழித்துக் கொண்டு 'மம்மி..மம்மி.." என்று பவித்ராவை தேட தொடங்கினான். அவனை சமாதானப்படுத்தி தூங்க வைப்பது வரலக்ஷ்மிக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இப்படியாக மூன்று மாதங்கள் சென்று விட்டன.

ஒருமுறை தனது பேரக் குழந்தைகளை பார்க்க கோவையிலிருந்து மாமனார் சுந்தரம் வந்திருந்தார். "மாப்பிளே.. நீங்க இப்படியே இருக்கக் கூடாது.. பழையபடி உங்க தொழிலை கவனிக்ககோணும்... குழந்தைகளை பாக்கணும்.. நின்னு போன கட்டட வேலையை முடிங்க.. பவித்ராதான் போயிட்டா..  நீங்களும் இப்படியே இடிஞ்சு போயிட்டா நாங்க என்ன பண்ண முடியும்?" என்று அவர் கண்ணனுக்கு தைரியம் சொன்னார்.

"ஆமா மாமா.. நான் என்னை தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்.. நான் சில முடிவுகளை எடுத்து இருக்கேன்.. முதல்லே ரோஹிணியை ஒரு போர்டிங் ஸ்கூல்லே சேர்த்தப் போறேன்.. சத்தியாவை வர்ற விஜய தசமி அன்னிக்கு எல்.கே.ஜி.-யிலே சேர்த்தப் போறேன். அம்மாவாலே முடியலே.. இந்த கட்டட வேலையை கூடிய சீக்கிரம் முடிக்கப் போறேன்.." என்று தனது மனதில் இருந்த திட்டங்களை கண்ணன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க.. ஆனா.. பிள்ளைங்களை நல்ல கவனிச்சுக்கோங்க... சத்தியாவை வேணா என்னகிட்டே விட்டுருங்க.. நாங்க அவனை கோயமுத்தூர்லே ஒரு நல்ல ஸ்கூல்லே சேக்கிறோம்... நாங்க பாத்துக்கிறோம்.." என்றார் சுந்தரம்..

ஆனால் அதற்கு கண்ணன் இசையவில்லை. "இல்லை மாமா.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க கவலைபடாதீங்க.." என்றார் கண்ணன். சுந்தரம் குழந்தைகளை பார்த்து விட்டு அடுத்த நாள் கோவை கிளம்பிச் சென்றார்.

விஜயதசமி அன்று மகன் சத்தியாவை மகள் ரோஹினி படித்துக் கொண்டிருக்கும் அதே பள்ளியில் எல்.கே.ஜி.-வகுப்பில் சேர்த்தார். அதே தினத்தில் தனது அலுவலகத்திற்கு பூஜை போட்டு தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினர். கண்ணன் இவ்வாறு வழக்கமான  பணிக்கு திரும்பியது கண்டு அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள், தட்டச்சர், குமாஸ்தா அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் தசரா விடுமுறை முடிந்ததும் கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல ஆரம்பித்தார்.

ஒரு நல்ல நாளில் நின்று போன கட்டட வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். முந்தைய மேஸ்திரி பணிக்கு வரவில்லை. எனவே வேறு ஒரு மேஸ்திரி மற்றும் பொறியாளரை வைத்து வரைபடத்தில் சில திருத்தங்களை செய்து பணிகளை தொடங்கினார்.

கண்ணன் காலையில் தனது அலுவலக அறைக்கு வரும் போது, மறைந்து போன தந்தையார் வேதாச்சலத்தின் நிழற்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்குவது வழக்கம். இப்போது அந்த நிழற்படத்திற்கு அருகே பவித்ராவின் நிழற்படமும் சேர்ந்து விட்டது.

அருகில் இல்லாது போனாலும், உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் மனதார வணங்கி விட்டு கண்ணன் தனது அன்றாட பணிகளை தொடங்கினார். ரோஹினியும் இப்படி வழிபாடு செய்து விட்டு பள்ளிக்கு சென்று வந்தாள். இவ்வாறு வழிபட சத்தியதேவும் பழகிக் கொண்டான். "வாழ்த்த வேண்டிய வயசிலே, என்னை இப்படி கும்பிட வெச்சிட்டேயம்மா...? நீ எங்கே இருந்தாலும் இந்தப் புள்ளைங்களையும், உன் புருசனையும் காப்பாத்து" என்று புலம்பியவாறு இந்த மூவரின் பிரார்த்தனையில் வரலக்ஷ்மியும் அவ்வப்போது சேர்ந்து விடுவர்.

இப்படியாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி காலம் சென்று கொண்டிருந்தது.

ரோஹினி முழு ஆண்டுதேர்வை எழுதி முடித்து விட்டாள். சத்தியதேவ் யு.கே.ஜி.-க்கு தயாராகி விட்டான். கோடைக் கால விடுமுறை தொடங்கி விட்டது. கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தன.

அப்போது ஒரு நாள்...!

(தொடரும்) 
Related Posts Plugin for WordPress, Blogger...