இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Monday 12 December 2011

மதனப் பெண் 30 - அது வெறும் ஒப்புக்குத்தான் !

மேல்தள கட்டடப் பணிகள் 80  சதவீதம் முடிந்து விட்டன. பவித்ரா இருந்தால் விரிவாக கிரஹப்பிரவேசம் செய்திருக்கலாம். பவித்ரா இல்லை. அத்தோடு பவித்ரா இறந்து 6  மாதங்கள்தான் ஆகின்றன. எனவே எளிய முறையில் பால் பொங்கி மேல் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை மாற்றி விடலாம் என கண்ணன் நினைத்திருந்தார். ஆனால், மாமா, சித்தப்பாமார்கள், சில பெரியவர்கள் என எல்லோரும் பவித்ராவின் ஆண்டு திதி முடிந்த பிறகு மேல்தள கட்டத்திருக்கு குடி போகலாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர். இது கண்ணனுக்கும் சரியெனப்பட்டது.

பவித்ரா ஆசைஆசையாகப் பார்த்து வடிவமைத்து, அவளது மேற்பார்வையில் தொடங்கப்பட்ட அலுவலகக்  கட்டடம், படுக்கையறை, சமையலறை.... அந்தக் அறைகளில் எப்படி எல்லாம் தனது கணவனுடன், குழந்தைகளுடன்  வாழ வேண்டும் என்று பவித்ரா கனவு கண்டிருந்தாளோ, நினைத்திருந்தாளோ ? எனவே முதலில் பவித்ராவின் ஆண்டு திதியை நல்ல முறையில் முடித்து விட்டு பிறகு மேல் தள கட்டடத்திற்கு குடி போகலாம் என்று கண்ணனும் முடிவு செய்து விட்டார்.

கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை. குழந்தைகள் இருவரையும் அவரது தாத்தா சுந்தரம் அழைத்து சென்று விட்டார். கண்ணன் நீதிமன்றம் திறந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய சில வழக்குகளை தயார்  செய்து கொண்டிருந்தார்.

பவித்ராவின் மறைவுக்குப் பிறகு கண்ணனை தனிமை நிறைய தொந்தரவு செய்தது. பெரிய நட்பு வட்டத்தை கொண்ட அவர்  இப்போது தான் உண்டு, தனது வேலை உண்டு, வீடு உண்டு, குழந்தைகள் உண்டு என்று மிகவும் சுருக்கமானார். சிரிப்பதை மறந்து போனார். உற்சாகமான முகம் இறுக்கமாகிக் விட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவரால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. பளீர்பளீரென பவித்ராவின் நினைவுகள் அவரது மனதை மின்னலாக தாக்கிக் கொண்டே இருந்தன. குழந்தைகள் மட்டுமே சற்று ஆறுதல். ஆனால் வரலக்ஷ்மியால் இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியவில்லை. சரிவர சமைக்க முடியவில்லை. அவரிடமும் எந்த உற்சாகமும் இல்லை. ஏதோ இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

புரிதல் மிக்க அழகான  மனைவி, பாசமிகு தாய், பொறுப்பான மருமகள் என வலம் வந்த பவித்ராவின் திடீர் மறைவு, கண்ணனின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. பரபரப்பாய், சந்தோசமாய், கலகலவென பம்பரமாய் சுழன்று வந்த பவித்ரா என்ற ஒரு ஒத்தைப் பெண்மணி இல்லாமல் கண்ணன் உட்பட நான்கு ஜீவன்கள் தடுமாறிப் போனார்கள். அவரவர்களுக்கு உண்டான தவிப்பை உணர்ந்தார்கள். மனித வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏற்படும் இழப்பை சட்டென சரி செய்து கொள்ள முடியுமா? ஈடு செய்ய இயலுமா? அப்படி முடிந்தாலும் அது வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகளும் தங்கள் தாத்தா வீட்டிற்கு சென்று இருப்பதால் வீடு வெறிச்சோ என்று இருந்தது. கண்ணன் வெறுமையின் கொடுமையை அனுபவித்தார்.

ஒரு நாள் மதியம் வரலக்ஷ்மி சமைக்கவில்லை. "கண்ணா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கு ஓட்டல்லே இருந்து ஒரு எடுப்பு சாப்பாடு வாங்கிட்டு வந்திடு... என்னால சமைக்க முடியலப்பா..." என்று கொஞ்சம் மூச்சிரைக்க வரலக்ஷ்மி கூறினார். அவ்வாறே கண்ணனும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தார். வரலக்ஷ்மி சரியாகச் சாப்பிடவில்லை. களைப்பாக இருக்கிறது என்று தனது அறையில் சென்று படுத்துவிட்டார். "சரி.. அம்மா ஓய்வெடுக்கட்டும்" என்று கண்ணன் சிறிது  நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை 5  மணி இருக்கும்.. வரலக்ஷ்மியின் அறைக்குள் கண்ணன் எட்டிப் பார்த்தார். அப்போதும் வரலக்ஷ்மி தூங்கிக் கொண்டிருந்தார். 'சரி.. தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கருதி, கண்ணன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அப்படியே கால்நடையாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு கிளம்பிப் போனார். அங்கே தரிசனம் முடிந்து விட்டு கண்ணன் வீடு திரும்பும் போது 7  மணி இருக்கும். வீட்டுக்குள் மின்விளக்கு ஏதும் போடப்படவில்லை என்பதை வெளி ஜன்னல் வழியாக கண்ணன் தெரிந்து கொண்டார். "அம்மா.. இப்படி சாயங்கால வேளையிலே படுத்திருக்க மாட்டங்களே..! ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை...?" என்ற சில வியப்பான கேள்விகளுடன் பூட்டை திறந்து கண்ணன் ஹாலின் மின் விளக்கை போட்டவாறு வரலக்ஷ்மியின் அறைக்கு சென்றார்.

அங்கே மாலையில் கண்ணன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது வரலக்ஷ்மி எப்படி வயிற்றின் மீது கைகளை குறுக்காக இட்டு படுத்து இருந்தாரோ அதே நிலையில் அப்போதும் படுக்கையில் படுத்து இருந்தார்.

கண்ணனை சடக்கென ஒரு பயம் தொற்றிக் கொண்டது. உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. 

(தொடரும்) 
Related Posts Plugin for WordPress, Blogger...