இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday 8 November 2011

மதனப் பெண் 21 - ஏதோ நடக்கப் போகிறது !

மேல் தள கட்டடத்திற்கு சென்று பார்த்த அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சி !

ஒரு சித்தாள் பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது அவளது முகம், ஆடை முழுவதையும் சிகப்பாக ஆக்கி கோரமாக தெரிந்தது. வலியால் அழுது கொண்டிருந்தாள். 

பொதுவாக கான்கிரீட் போடும்போது முதலில் கட்டடத்தின் நான்கு சுவர்கள் மீது பலகை வைத்து அதை ஒன்றுடன் ஒன்றாக ஆணி அடித்து இணைத்து, அதே நேரத்தில் அப்பலகைகளின் ஆதரவுக்கு அவற்றின் கீழே சவுக்கு மரங்களை முட்டு கொடுத்து வைப்பார்கள். இவ்வாறு பலகை வைத்த பிறகு, அதன் மீது இரும்புக் கம்பிகளை கட்டி, கான்கிரீட் போடுவார்கள். 

ஆனால் இங்கு அவ்வாறு   செய்யும் போது ஆணியால் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பலகைகள் அந்த ஆணியின் பிடியில் இருந்து எப்படியோ விலகி, கான்கிரீட் தளத்துடன் கெட்டியாக ஒட்டிக் கொள்ளாமல் கீழே இருந்த சவுக்கு மர முட்டுகளின் ஆதரவில் மட்டும் உட்கார்ந்து இருந்தது. கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண் சம்பந்தப்பட்ட மர முட்டை நகர்த்தும் போது அந்த இரண்டு பலகைகளும் எதிர்பாராத விதமாக அவளது தலை மீதே விழுந்து விட்டது. அதில் அரைகுறையாக ஒட்டிக் கொண்டிருந்த ஆணி அவளது நடு மண்டையில் இறங்கியது. இதனால் அவளது தலையில் பொத்தல் விழுந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பலகை விழுந்த வேகத்தில் அப்பெண் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த முட்டுகளின் மீது சரிந்தாள். இதனால் அம்முட்டுகளும் சரிந்து விழுந்தன. 

விவரங்களை ஊகித்துக் கொண்ட கண்ணன், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கவும், வேண்டிய சிகிச்சைகளை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

பவித்ரவிற்கும், வரலக்ஷ்மிக்கும் நிறைய மன சங்கடங்கள். ஒன்று மாற்றி ஒன்று ஏதோ ஒரு அறிகுறி காட்டி கொண்டே இருக்கிறதே என்று வேதனை பட்டார்கள். "எந்த நேரத்தில் கட்டட வேலை தொடங்கினோமோ தெரியவில்லை... ஏதேதோ நடக்கிறதே ?!"  என்று புலம்ப ஆரம்பித்தனர். 

மருத்துவமனைக்கு சென்று அந்த சித்தாளை சேர்த்துவிட்டு வந்த மேஸ்திரி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். 

"மேஸ்திரி, அவளுக்கு எப்போ இப்படி இருக்கு..? டாக்டர் டிரீட்மென்ட் ஆரம்பிச்சட்டரா?" என்று கண்ணன் கேட்டார்.

மேஸ்திரி, அதற்கு எதற்கும் பதில் சொல்லவில்லை. மாறாக, "சார், நான் வேலையே நிப்பட்டுறேன்.. இது நமக்கு சரிப்பட்டு வராது.. 'கட்டடம் காவு கேட்குது சார்-ன்னு நான் அப்போவே சொன்னேன். நீங்க கேட்கலை.. கடா வெட்டி பூஜை போடாமே இனி என்னலே வேலை செய்ய முடியாது. செய்ஞ்ச வரைக்கும் கூலி குடுத்துடுங்க. சித்தாள் ஆஸ்பத்திரி செலவுக்கும் பணம் கொடுங்க" என்று மேஸ்திரி பேசிக் கொண்டே போனார். கூடவே, தனது பணி கருவிகளான சட்டி, சம்மட்டி, மம்மட்டி, கடப்பாரை ஆகியவற்றை மூட்டை கட்ட ஆரம்பித்தார். 

ஒரு கணம் கண்ணனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. "சில நம்பிக்கைகளுக்கு தான் செவி சாயக்காதது தவறாக போய் விட்டதோ..?" என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. அந்த நேரத்தில் மேஸ்திரியின் பக்கம் வரலக்ஷ்மி சேர்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "நானும் அப்பவோ சொன்னான்.. நீ கேட்கலை.. சிலது சொல்றாங்கன்ன கேட்கணும்.. இப்போ என்ன ஆச்சு பாத்தியா?" என்று வரலக்ஷ்மி சொல்லி விட்டு.. "மேஸ்திரி.. நீ ஒரு நாள் பாத்து பூஜைக்கு ஆக வேண்டியது என்னவோ செய்.. வேலையை நிறுத்தாதே.. பூஜை போட்டு முடிச்ச பிறகு வேணா வேலையை தொடங்கு .. இந்தா பணம்" என்று பூஜைக்கும், சித்தாளின் சிகிச்சைக்கும் உண்டான தொகையை தனது பீரோவிலிருந்து எடுத்துக் கொடுத்தார். 

அதை ஒப்புக் கொள்ளும் வண்ணம் மேஸ்திரி தனது கருவிகளை மூட்டை  கட்டுவதை நிறுத்தி, பணத்தைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

"கண்ணா... இதெல்லாம் கட்டடம் கட்டுவதில் ஒரு சடங்கு, சாங்கியம்.. செய்யாம விட்டா அது தப்பாய்டும். நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு.. நான் இந்தப் பூஜைக்கு ஆக வேண்டியதைப் பாக்குறேன்.. மறக்காம நாளைக்கு குல தெய்வம் அபிசேகத்துக்கு நீ மதியம் 12  மணிக்கு வரணும்.. மறந்துடாதே.." என்று சொல்லிக் கொண்டே பேரன் சத்தியாவை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றார்.

பவித்ராவிற்கு நிறைய குழப்பம். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தங்கள் வாழ்வில் ஏன் இப்படி சங்கடங்கள்..? இறக்கையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் ஒரு பெண் ஆந்தை வந்து அமர்ந்து இருந்தது, அப்போதே தன் காலில் அடிபட்டு நகம் உடைந்து ரத்தம் வந்தது.. பின் இன்று சித்தாள் பெண்ணின் தலை மீது பலகை விழுந்து ரத்தம் வந்தது.. இப்படி எல்லா நேர்வுகளிலும் ரத்தம் கண்டது, அந்த எல்லா நேர்வுகளிலும் ஒரு பெண் இனம் சம்பந்தப் பட்டிருந்தது.. இவை யாவும் பவித்ராவின் மனதை நெருடிக் கொண்டிருந்தன. 

"மாமா.. ஏதோ நடக்கப் போவுதுன்னு என் உள்மனசு சொல்லுது.. கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பெண்ணா இருக்கிறவங்களுக்கு ஏதோ பிரச்னை வந்த மாதிரி இருக்கு " என்று கண்ணனின் அருகில் நெருக்கமாக வந்து நின்று கொண்டு, அவரது வலது கையை பிடித்துக் கொண்டு அச்சத்துடன் சொன்னாள். ஏதோ ஒரு இனம் புரியாத கவலை அவளை ஆட்கொண்டிருந்தது.

"போடி.. பயித்தியக்காரி... அதெல்லாம் ஒன்னும் இல்லே.. அதுதான் மேஸ்திரி சொன்ன மாதிரி எல்லா பூஜையும் பண்ணப்போறோமே.. அதோட  நாளைக்கு கோவிலுக்கும் போகப் போறோம்.. நீ சும்மா மனசை போட்டு அலட்டிக்காதே .." என்று ஆறுதலுக்கு கண்ணன் சொன்னார். 

ஆனால் கண்ணனின் மனதிலும் பவித்ராவின் உள்மனது சொன்னதைப் போல "ஏதோ நடக்கப் போகிறது..!" என்ற ஒரு நெருடல் இருந்தது. "ஒருவேளை அம்மாவோட உடம்புக்கு ஏதாவது .. அம்மா பிரசருக்கு மாத்திரை சாப்பிடுறாங்க.. ஹெல்தியா இருக்காங்க.." இப்படி கண்ணனின் சிந்தனை கண்டபடி சென்று கொண்டிருந்தது.

ஆனால் 'ஏதோ நடக்கப் போகிறது' என்பது கண்ணனின் குடும்பத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

(தொடரும்) 


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் கண்ணனின் மனதிலும் பவித்ராவின் உள்மனது சொன்னதைப் போல "ஏதோ நடக்கப் போகிறது..!" என்ற ஒரு நெருடல் இருந்தது. /

நெருடல் .. ஆரம்பித்துவிட்டது எதிர்பார்ப்புகளுடன்!

Advocate P.R.Jayarajan said...

என்ன செய்யச் சொல்கிறீர்கள்... ? எல்லாம் விதிப் பயன்..!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...