இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 5 November 2011

மதனப் பெண் 19 - "சார்... கட்டடம் காவு கேட்குது"

மேஸ்திரி காட்டிய ஈசான்ய திசை மூலையில் பவித்ராவும், கண்ணனும் பார்த்தார்கள். அப்போது கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சித்தாள், கொத்தனார் அனைவரும் அங்கு நின்று வியப்பு கலந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அங்கு அப்படி என்னதான் இருந்தது?

அது ஒரு ஆந்தை. உடல் பகுதி வெள்ளையாகவும், இறக்கை பகுதி சற்று வண்ணம் கலந்தவாறும் இருந்தது. அதுதான் அந்த மூலையில் அமர்ந்து தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வை மிகவும் தீட்சன்யமாக இருந்தது. பார்ககவே சற்று பயங்கரமாக தோன்றியது. அதை பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் முகத்தில் ஒரு மிரட்சி அலை தோன்றி மறைந்தது. 

ஒரு புதிய கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும், அதுவும் சுமார் 6 ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு ஆந்தை எப்படி வந்தது என்று எல்லோர் மனதிலும் கேள்விகுறி. இப்படி கும்பலாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போதும் அந்த ஆந்தை பறந்து செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கண்ணன் மெல்லமாக சற்று அருகில் சென்று அந்த ஆந்தையை பார்த்தார். அப்போது ஒன்று புரிந்தது. அதன் இறக்கை பகுதியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஆந்தையால் பறக்க இயலவில்லை. அதற்கான முயற்சியும் செய்யவில்லை. ஏதோ ஒரு வெளிநாட்டு ஆந்தை இறக்கையில் அடிபட்டு இங்கு வந்து தஞ்சம் புகுந்து கொண்டது என்று எண்ணிய கண்ணன் உடனடியாக மதுரை வனத்துறை அலுவலருக்கு தொலைபேசி செய்து விவரம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தில்  இருந்து இரண்டு பணியாட்கள் வந்தனர். அவர்கள் அப்பறவையை பார்த்ததும் அது ஒரு வெளிநாட்டு பெண் ஆந்தை என்பதை உறுதி செய்தனர். பின் அதை லாவகமாக பிடித்து தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டனர். அடிபட்ட இடத்திற்கு வைத்தியம் பார்த்து, பழமுதிர்சோலை மலைப்  பகுதியில் விட்டுவிட்டால் பறந்து சென்று விடும் என்று கூறி, அதை கொண்டு சென்றனர். கண்ணன் அவர்கள் வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தார். 

கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் இப்படி ஆந்தை அதுவும் ரத்த காயத்துடன்  வந்து அமர்ந்திருந்ததை மேஸ்திரி 'ஏதோ கெட்டது நடக்கப் போவதற்கான   அறிகுறி' என்று மனதிற்குள் நினைத்தார். ஆனால் தான் நினைத்ததை அப்படியே கண்ணனிடம் சொல்லாமல்,  "சார், கட்டடம் காவு கேட்குது.. கான்கிரீட் முட்டு பிரிக்கறதுக்கு முன்னாடி கடா வெட்டி பூஜை போட்டுறலாம்" என்றார். ஆனால் இந்த சாங்கியத்தில் எல்லாம் கண்ணனுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. "அதெல்லாம் வேண்டாம் மேஸ்திரி", என்றார் கண்ணன். "ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு, சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் மேஸ்திரி.

இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் பவித்ரா மிகவும் அப்செட் ஆனாள். பவித்ராவிற்கு கால் நகத்தில் அடிபட்டது ரத்தம் நின்றிருந்தாலும் மிகவும் வலித்துக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த கண்ணன் 'பவி, வா, கீழே போய் மருந்து போட்டுக் கொள்ளலாம்' என்று பவித்ராவை அழைத்துக் கொண்டு கீழ் வீட்டிற்கு சென்றார்.

நடந்ததை தெரிந்து கொண்ட வரலக்ஷ்மி, "கண்ணா, கட்டிகிட்டிருக்கிற வீட்டிலே ஆந்தை வர்றது நல்லதுக்கு கிடையாது.. அதுவும் பவித்ராவிற்கு அதே நேரத்திலே காலிலும் அடிபட்டிருக்கு. பேசாம மேஸ்திரி சொன்ன மாதிரி செய்றதுதான் எனக்கு நல்லதா படுது. அப்படியே நம்ம குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கும் போய் ஒரு அபிசேகம் செய்துடலாம்.." என்று தனது அனுபவத்தில் இருந்து சில விசயங்களை சொன்னார்.

"அம்மா.. நீங்க புரியாம பேசுறீங்க.. ஒரு வெளிநாட்டு பறவை அடிபட்டு போக்கிடம் இல்லமே இங்கே வந்து உட்காந்துகிச்சு.. அதுக்காக அதப் பண்ணலாம்.. இதப் பண்ணலாம்ன்னு நீங்க சொல்றது எனக்கு பிடிக்கலை" என்றார் கண்ணன். இருப்பினும் கொஞ்சம் இடைவெளி விட்டு, "வேனும்ம்ன்னா.... குலதெய்வம் கோவிலுக்கு வேணா போயிட்டு வரலாம்" என்று தன் தாயை சமாதானப்படுத்தினார். பவித்ராவும் இதற்கு இசைந்தாள். அடுத்த வாரம் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

இருந்தாலும் பவித்ராவிற்கு மேஸ்திரி சொன்ன ஒரு வார்த்தை அப்படியே நெஞ்சில் பதிந்து போனது, "சார்... கட்டடம் காவு கேட்குது" என்ற மேஸ்திரியின் வார்த்தைகள் பவித்ராவின் மனதில் திரும்பதிரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டில் திரும்பிய இடத்தில் எல்லாம் ஆந்தை அமர்ந்து இருப்பதாக தெரிந்தது. தனது குழந்தைகளின் முகம் சில சமயம் ஆந்தை முகமாக தெரிந்தது. பவித்ரா மிகவும் டிஸ்டர்ப் ஆனாள்.

"சார்.. கட்டடம் காவு கேட்குது..காவு கேட்குது..." என்ற குரல்  வீடு முழுவதும் எதிரொலிப்பதாக பவித்ராவிற்கு பிரமை ஏற்பட்டது.

ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டபடி குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு முன் தினம் கட்டடத்தின் முட்டுக்களை பிரிக்க மேஸ்திரியும், கூடுதலாக சில ஆட்களும் வந்திருந்தனர். அந்த வேலைகள் ஆரம்பமாகின.

அப்போது என்ன நடந்தது தெரியுமா ?

(தொடரும்)

10 comments:

aalunga said...

சொல்லுங்கள்..
கதையைக் கேட்க ஆவலுடன் உள்ளோம்

Advocate P.R.Jayarajan said...

Solkiren....

Advocate P.R.Jayarajan said...

Mun aththiyangalaiyum padiyungal...

Advocate P.R.Jayarajan said...

இந்த வலைப்பதிவுக்கு 10 என்ற இரட்டை இலக்கத்தில் உறுப்பினராக வந்த 'ஆளுங்க' என்ற உங்களுக்கு நன்றி.

உங்கள் முகவரியை அனுப்பினால் நான் எழுதிய 'குடியுரிமை தொடர்பான சட்டங்கள்' என்ற நூலை பரிசாக உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். முந்திய அத்தியாயங்களையும் படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

Advocate P.R.Jayarajan said...

அவ்வாறே முதல் உறுப்பினராக இணைந்து, தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் விமர்சனங்களை அனுப்பி ஊக்குவிக்கும் 'ராஜேஸ்வரி ஜெகமணி' அவர்களுக்கும் நன்றி.

அவருக்கும் எனது நூல் பரிசு உண்டு..!

aalunga said...

நன்றி ஐயா....

நல்லது. உங்கள் புத்தகத்தைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்..
உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.

என்னைத் தொடர்பு கொள்ள:
http://www.blogger.com/profile/13390299914708894846

இராஜராஜேஸ்வரி said...

சார்.. கட்டடம் காவு கேட்குது..காவு கேட்குது..." என்ற குரல் வீடு முழுவதும் எதிரொலிப்பதாக பவித்ராவிற்கு பிரமை ஏற்பட்டது.

மன சஞ்சலம்.. தொட்ர்கிறதே!

இராஜராஜேஸ்வரி said...

அவ்வாறே முதல் உறுப்பினராக இணைந்து, தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் விமர்சனங்களை அனுப்பி ஊக்குவிக்கும் 'ராஜேஸ்வரி ஜெகமணி' அவர்களுக்கும் நன்றி.

அவருக்கும் எனது நூல் பரிசு உண்டு..!

குடியுரிமை தொடர்பான சட்டங்கள்' ??

சட்டத்தால் வஞ்சிக்கப்ப்ட்ட என்க்கு!

Advocate P.R.Jayarajan said...

@ ஆளுங்க (AALUNGA)
நன்றி ஐயா....

//உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.//

தங்கள் முகவரி தெரிவியுங்கள் அது போதும்..
நூல் அனுப்பி வைக்கின்றேன்..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி...

//சட்டத்தால் வஞ்சிக்கப்ப்ட்ட என்க்கு//

ஏன் என்ன நடந்தது...?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...