இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday, 27 December 2011

மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்தது

வித்ரா மறைந்த பிறகு கண்ணனின் வீடு ஏற்கனவே களையிழந்து இருந்தது.   இப்போது ரோஹிணியை கொடைக்கானல் ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்த பிறகு, வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

ஒரு குடும்பம், அதன் வளர்ச்சி, தொடர்ச்சி என்பது தினமும் முனைந்து பாடுபட்டு மிகுந்த முயற்சியால் கட்டிய கூடு. அது திடீரென கலைந்து விட்டால், மீண்டும் அதை உருவாக்கி வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, என்ன விளைவுகள் ஏற்படும், இன்னும் இது போன்ற பல்வேறு காரணிகளை சிந்திக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு கலைந்து போன வாழ்வை கண்ணன் தனக்கு தெரிந்தவரை சீர் செய்து கொள்ள எடுத்த முதல் முடிவு, ரோஹினியின் கல்வி வாழ்வு சிறக்க வேண்டும்; அதற்கு அவளை தற்போதுள்ள சூழலில் ஹாஸ்டல் பள்ளியில் சேர்ப்பது. பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு  கல்வி வாழ்க்கை கிடைத்தது.  அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பெற்றோர்கள் வருகை தினம். கண்ணன் வெள்ளிக்கிழமை மதியமே மதுரையிலிருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்று விடுவார். இவ்வாறு மாதத்தில் இருமுறை சென்று வருவதால் கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள விடுதி ஒன்றை, தான் வழக்கமாக தங்கும் இடமாக்கிக் கொண்டார், கண்ணன். அவரது வருகை அறிந்து அவருக்காக அறை காத்திருக்கும். அவ்வப்போது வரலஷ்மி, சத்தியதேவ் ஆகியோரை அழைத்து வரவும் கண்ணன் தவறுவதில்லை.

வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் வந்தடையும் கண்ணன்,  விடுதியில் தங்கி மறுநாள் சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ரோஹிணியை பார்ப்பார். அச்சமயத்தில் மற்றெல்லா பெற்றோர்களும் வந்திருப்பர். பள்ளி வளாகத்தில் எங்கு நோக்கிலும் பிள்ளைகளின்  ஆரவாரத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அவர்களுடன் பெற்றோர்களும் சிறுபிள்ளைகள் ஆகி விடுவர்.

தனது தந்தையின் வருகைக்காக ரோஹினி நன்றாக உடுத்திக் கொண்டு, ஒரு குட்டி தேவதையாக கையில் ஒரு ரோஜாப் பூவுடன் காத்திருப்பாள். கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். பிறகு அவளை அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்று, பல இடங்களை சுற்றிக் கட்டுவார்.  போட்டிங், ரெஸ்டாரென்ட், பூங்கா, விளையாட்டு என ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாக போகும். குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது. படிப்பில் சுட்டியான ரோஹிணி தனது பாடங்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பற்றி கண்ணனிடம் நிறைய சளைக்காமல் பேசுவாள். புல்வெளியில் அமர்ந்துகொண்டு அவற்றையெல்லாம் ரசித்து கண்ணன் கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு தினங்கள் போவதே தெரியாது. ஞாயிற்றுக் கிழமை பிரியும் போது மட்டும் ரோஹினியின் முகம் வாட்டமடையும். கொஞ்சம் ஹோம் மேட் சாக்லேட்ஸ். சில முத்தங்கள்.  மீண்டும் வருவதாக சமாதானம். பிறகு விடை பெறல். இது வழக்கமான நிகழ்வானது.

மதுரையில் மகன் சத்தியதேவ் யு.கே.ஜி. படித்து வந்தான். பள்ளிக்கு 'ஸ்கூல் வேனில்' சென்று திரும்பி வந்தான். அவனுடன் வொர்க்ஷீட், டிராயிங், கிளே வொர்க், ஹோம் வொர்க் என வரலக்ஷ்மியும் பொழுது போக்கினார்.  பவித்ராவின் இறப்பிற்கு பிறகு, தற்போது  எல்லாம் ஓரளவு 'செட் ரைட்' ஆனதாக கண்ணன் நம்பினார்; தனது தொழில், மதுரை-கொடைக்கானல் டிரிப், குழந்தைகள் என பிசியானார்.

ரோஹிணிக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் விடுமறை விடப்பட்டது. பள்ளியில் அதன் தாளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகளை கூறிவிட்டு, அவளை கண்ணன் மதுரைக்கு அழைத்து வந்தார். கண்ணனுக்கும் நீதிமன்றம் விடுமுறை. எனவே கண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். சித்தப்பா, சிறிய மாமா என உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்; அளவளாவினார். பேச்சின் ஊடே பவித்ராவை நினைவு கூர்ந்து அவளது பேச்சை எடுக்காமல், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் பற்றி கண்ணன் தொடர்ந்து உரையாடியதைக் கேட்டு எல்லோரும் சற்று நிம்மதி; அமைதி !


கண்ணனின் குடும்பத்தில் மெல்ல மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

தான் தனியாக சட்டத் தொழிலில் நன்கு காலூன்றி விட்டாலும், தனது தொழில் வளர்ச்சிக்கு காரணமாக, அடித்தளமாக இருந்த மூத்த வழக்குரைஞரை கண்ணன் அவ்வப்போது சென்று சந்திக்கத் தவறுவதில்லை. கண்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது சீனியருக்கு மிகவும் கட்டுப்பட்டவர். அவரது எந்த பேச்சையும் தட்டமாட்டார்.  அவர் கண்ணனுக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது நிறைய ஆறுதல் வார்த்தைகள் கூறி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்த்தியவர். பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய சூழலை சுட்டிக் காட்டியவர். மனதிற்கு வலு சேர்த்தவர்.

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு  ஓர்  சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர்.  மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'.

இந்த முறை தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சீனியரை சென்று பார்த்தார் கண்ணன்.

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! 

(தொடரும்...)

Sunday, 25 December 2011

மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு

மாமா சுந்தரத்தின் ஆலோசனையை கண்ணன் கூர்ந்து கேட்டார். அதற்கு பதில் தர ஆரம்பிக்கு முன் கண்ணன் ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.

"மாமா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நீங்க ஒரு பிரக்டிகல் மேன். ஆனா ... இன்னும் கொஞ்சம் பிரக்டிகலா தின்க் பண்ணி பாக்கணும். முதல்லே இங்கே விட்டுட்டு அம்மா அங்கே வந்து இருக்கணும்... இங்கே எப்படி அம்மாவுக்கு வயசாகுதோ, அப்படியே உங்களுக்கும், மாமிக்கும். சொல்லப்போன நீங்க என்  அம்மாவோட அண்ணன்.. வயசு அதிகம்.. நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும். தவிர அம்மாவும் குழந்தைகளும் அங்கே வந்திட்டா நான் இங்கே தனியாள இருக்கணும். ஓட்டல் சாப்பாடு..! வீடு வேற பெருசா கட்டிட்டேன்.. மதுரை டூ கோவை தூரம் அதிகம்" என்று தனது தரப்பை மெல்ல நியாயப்படுத்தி கண்ணன் பேசி வந்தார்.

"மாமா.. இன்னொரு விசயத்தையும் நீங்க கவனிக்கணும்.. குழந்தைகளை நீங்க கொண்டு போய் வளத்தினா, பின்னிட்டு அவங்க என்னை ஒரு நல்ல கார்னர்லே வச்சிருக்கிறது சந்தேகம்.. குழந்தைங்க உங்க பராமரிப்புலே வளருது என்கிற நினைப்புலே நான் என் வோர்கிலே பிசிய இருந்துடுவேன்.. ஏதோ ஒரு டிடாச்மென்ட் ஏற்பட சான்ஸ் இருக்கு.. ரோஹினி ஹாஸ்டல்லே படிச்சா நான் கண்டிப்பா போய் பாத்துட்டு வருவேன்.. என் குழந்தைங்க மேலே எனக்கு பெர்சனல் ரெஸ்பான்சிபிளிட்டி அதிகம் இருக்கணும்..  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கணும்.. அவங்க மம்மி இறந்த பிறகு அவங்களை டாடிதான் வளக்கிறார் என்ற உணர்வு அவங்களுக்கு இந்த வயசிலிருந்தே ஏற்படணும்.." என்று தனது மன உணர்வுகளை கோவையாக சொன்னார் கண்ணன்.

"அதனாலே மாமா.. நான் எடுத்திருக்கிற டிசிசன் வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் உங்க ஆசீர்வாதம் ஒன்னு மட்டும்தான்.." என்று கண்ணன் முடித்தார்.

சுந்தரத்திற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்துடன் முன்னதாக தான் சொல்ல வந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம், அதற்கு இது தருணமல்ல  என்று முடிவு செய்து விட்டார். "சரி மாப்பிள்ளே.. நீங்க நினைச்ச மாதிரி செய்யுங்க.. நீங்களே குழந்தைகளே கவனிச்சாத்தான் அதுக பின்னிட்டு உங்க மேலே பாசமா இருக்கும்ன்னு சொல்லறீங்க.. அதுக்கு நாங்க தடையா நிக்க விரும்பலை.. குழந்தைகளையும் , அம்மாவையும் பாத்துகோங்க... நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்." என்று சொல்லிவிட்டு அடுத்தநாள் சர்மிளாவுடன் கோவை புறப்பட்டு சென்று விட்டார், சுந்தரம்.

வரலக்ஷ்மி மெல்ல உடல் நலம் தேறி வந்தார். பேரன், பேத்தி இருவரும் வரலக்ஷ்மியிடம் சமத்தாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய வேலைக்காரி ஒருவரை அதிக சம்பளத்தில் வரலக்ஷ்மி நியமனம் செய்தார். அவர் தன்னை இயல்பான நிலைக்கு தாயார்படுத்தி கொண்டார். தினமும் சாப்பிட வேண்டிய இதய நோய் மாத்திரைகளை தொடர்ச்சியாக சாப்பிட பழகிக் கொண்டார். சில சிறிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு கற்றுக் கொண்டார். டென்சனை தவிர்த்தார். சமைக்கும் நேரம் போக குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். எனினும் இப்படி நிறைய நேரம் அவரால் உற்சாகமாக இருக்க இயலவில்லை. சோர்வு ஏற்பட்டது. இப்படியாக சுமார் 10 நாட்கள் சென்று விட்டன.


கோடை விடுமுறை முடிவடையும் நேரம். கண்ணன் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுபடி ரோஹிணியை கொடைக்கானல் பள்ளியில் சேர்க்க தயாரானார். வரலக்ஷ்மி, சுந்தரம், சர்மிளா உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்று ரோஹிணியை பள்ளியில் விட்டனர். ஹாஸ்டல் வார்டன், பள்ளியின் சிஸ்டர் ஆகியோரிடம் ரோஹினி 'தாயில்லாக் குழந்தை' என்ற விவரத்தைக் கூறி கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தனர். 

ரோஹிணிக்கு தனது தந்தை கண்ணனை விட்டு பிரிய மனமில்லை. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.  கண்ணனுக்கும், மற்றவர்களுக்கும்  அழுகை வந்து விட்டது. பிறகு ஒரு வழியாக ரோஹினியின் புது தோழிகள் வந்து சமாதனம் செய்தனர்.  "ரோஹினி அழதேம்மா... டாடி இங்கேதான் இருக்கப் போறேன்... உன்னை அடிக்கடி வந்து பாத்திட்டு போவேன்.. உன்னை சண்டேஸ்லே நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போவேன்.. நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தருவேன்.. உங்களுக்கு இங்கே நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. தம்பியும் அடுத்த வருஷம் இங்கேயே படிக்க வந்திடுவான்.  நீங்க நல்ல படிக்கணும்...  சரியா..? அழக்கூடாது... நீங்க அழுதா டாடி அழுவேன்.. கண்ணை துடைச்சிகோங்க..." என்று பலவாறு சமாதானம் கூறி கண்ணன் மெல்ல ரோஹிணியிடமிருந்து விடை பெற்றார்.

கண்ணனின் மனதில் பவித்ரா ஒரு புன்சிரிப்புடன் மின்னலாக தோன்றி மறைந்தாள். 

(தொடரும்)

Saturday, 24 December 2011

மதனப் பெண் 33 - மாமாவின் நல்ல ஆலோசனை

தனது மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து மாமா சுந்தரம் பல்வேறு ஊகங்களுக்கு போனார். ஒருவேளை தான் நினைத்துக் கொண்டிருந்த விசயத்தைதான் மாப்பிள்ளையும் சொல்லப் போகிறாரோ..? என்றும் சுந்தரம் நினைத்தார். எனினும் மாப்பிள்ளை சொல்வதை முதலில் கேட்போம் என்று கருதி தான் சொல்ல வந்த விசயத்தை தள்ளி வைத்து விட்டார்.

"நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே.. சொல்லுங்க மாப்பிள்ளே.."

"ஒண்ணுமில்லே மாமா.. நான் உங்ககிட்டே ஏற்கனவே கோடு போட்டு காட்டியதுதான்... இருந்தாலும் அது சரி வருமா என்ற யோசனையும் எனக்கு இருந்தது... ஆனா அதுக்கான ஒரு டிசிசன் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போ எனக்கு ஏற்பட்டு இருக்கு.. இது சரியான நேரமும் கூட.. முக்கியமா குழந்தைங்க நல்ல வளரனும்.. எங்க அம்மாவும் நல்ல இருக்கணும்.. எனக்கு தொழில் அது இதுன்னு நேரம் போய்கிட்ருக்கு.. நான் பெர்சனலா குழந்தைங்கலே கவனிக்க முடியுமா என்பது கொஞ்சம் டிபிகல்டியா இருக்கு.. அதுக்காகதான் இந்த முடிவு.. எனக்கு வேற வழி தெரியலை.. " என்று நிறைய பீடிகைகளை போட்டு கண்ணன் பேசிக் கொண்டே போனார்.

"அதெல்லாம் சரி மாப்பிளே.. என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே.." என்று சுந்தரம் சற்று அங்கலாய்ப்புடன் கேட்டார்.

"இப்போ ரோஹிணிக்கு சம்மர் வெகேசன். 2 -ஆம் வகுப்பு போகப் போறா. சத்தியா யு.கே.ஜி. போகப் போறான். ரோஹினி நல்ல படிக்கிறா. அவளை கொடைக்கானல்லே இருக்கிற போர்டிங் ஸ்கூல்லே சேர்க்கப் போறேன். அப்ப்ளிகேசன் வாங்கிட்டேன். சத்தியா 1 -ஆம் கிளாஸ் போகிறப்போ அவனையும் அந்த ஸ்கூல்லே சேர்க்க முடிவு செய்திருக்கேன். ரெண்டு குழந்தைகளையும் வைச்சு அம்மாவலே நேரத்துக்கு சமைச்சு போடா முடியலே.. ரெண்டும் ரொம்ப சேஷ்டை செய்யறாங்க.. தவிர  அம்மா, ஏதோ நியாபகத்திலே ஏதேதோ செய்றாங்க.. பதற்றபடறாங்க .. ஹோம் வொர்க் கோச்சிங் தெரியலே.. அதனாலேதான் இந்த முடிவு.  நான் மாசத்துக்கு ஒரு தடவை கொடைக்கானல் போய் ரோஹிணியை பார்த்திட்டு வரப் போறேன். என்ன மாமா.... மதுரையிலிருந்து இதோ இங்கிருக்கிற வத்தலகுண்டு ஒரு மன்நேரம். அங்கிருந்து 2  மணி நேரம்  கொடைக்கானல். போயிட்டு ஒரு நாள் அங்கே தங்கிருந்து ரோஹிணியை பாத்திட்டு அடுத்த நாள் வந்திடப் போறேன்," என்றார் கண்ணன்.


மாப்பிள்ளை கண்ணன் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்த சுந்தரத்திற்கு இந்த சங்கதி அவரது மனதில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. தான் சொல்ல வந்த விசயத்தைப் பற்றி அவர் வாயைத்   திறக்கவில்லை. மாறாக, "அதான் குழந்தைகளே நாங்க கூட்டிகிட்டு போய் வளத்துரோம்ன்னு முதல்லேயே சொன்னோம்ல்லே மாப்பிளே.. . நீங்க இப்போ ஹாஸ்டல்லே சேக்கணும்ன்னு சொல்றீங்க.. இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை... நீங்க குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்ககிட்டே விட்டுரங்க.. கோவையில் எத்தனையோ நல்ல ஸ்கூல் இருக்கு. அதிலே குழந்தைகளை சேக்கறோம்.. நான் உங்கம்மாவையும் கோவைக்கே கூட்டிட்டிட்டு போறேன். அவ எங்ககூட இருக்கட்டும். நீங்க வந்து பாத்துட்டு போங்க.. நீங்க ரோஹிணியை ஹாஸ்டல்லே சேத்து நல்ல படிக்க வைக்கோணம்ன்னு சொல்றீங்க. வேணும்னா அவளை ஊட்டி  ஸ்கூல்லே சேர்ப்போம்.. சத்தியா கோவை ஸ்கூல்லே படிக்கட்டும்...  எங்ககூட இருக்கட்டும்.." என்று சுந்தரம் உள்ளபடி வீட்டுக்கு மூத்தவராக இருந்து படபடப்பாக தனது தரப்பை சொன்னார். 

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..? 

ஆனால் கண்ணன் இதற்கு வேறு ஒரு பதில் சொன்னார்.

(பிறகு சொல்கின்றேன்.)

Friday, 23 December 2011

மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?

படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக  வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி,  திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி. தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும்  வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும்  மருத்துவமனைக்கு வந்து  வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4  நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.

சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப  சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

(பின் சொல்கிறேன்..) 

Wednesday, 21 December 2011

மதனப் பெண் 31 - அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..

கண்ணன் ஒருவித பீதியுடன் வரலக்ஷ்மியின் அருகில் சென்று பார்த்தார். மெல்லிய குறட்டை சத்தத்துடன் சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. இதைக் கண்டு கண்ணனுக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது. "அம்மா.. அம்மா.. என்னாச்சு உங்களுக்கு?" என்றவாறு  வரலக்ஷ்மியை கண்ணன் மெல்ல தட்டி எழுப்பினார். மெல்ல விழித்துக் கொண்ட  வரலக்ஷ்மி, சற்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "ஒண்ணுமில்லேப்பா... மதியம் சாப்பிட்ட பிறகு எப்பவும் இல்லாத மேனிக்கு ரொம்ப அசதியா இருந்தது... கண்ணை அப்படியே இருட்டிக்கிட்டு வந்தது.. கொஞ்ச நேரம் தலையை கீழே வைக்கலாம்ன்னு படுத்தேன்.. அப்படியே நல்ல தூங்கிட்டேன் போல.. மத்தபடிக்கு ஒண்ணுமில்லே" என்றார்.

"அம்மா.. பி.பி. மாத்திரை ரெகுலரா சாப்பிடுறீங்க இல்லே? மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா.. பாத்துக்குவா... வேணுமின்னா டாக்டர் கிட்டே கூட்டுட்டு போகவா?" என்று கண்ணன் அனுசரணையாக கேட்டார். "வேண்டாம் கண்ணா.. ஏதோ அசதி.. அவ்வளவுதான்" என்றார் வரலக்ஷ்மி.

"சரி ... நீங்க படுத்திருக்கீங்கன்னு நான் அப்படியே மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.. வர்ற வழியிலே ஓட்டல்லே இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்.. சாப்பிடுங்க.. மதியம் கூட நீங்க கொஞ்சம் சாதம்தான் வச்சுகிட்டீங்க.." என்று கூறிகொண்டே தான் வாங்கி வந்திருந்த டிபன் பொட்டலங்களை கண்ணன் பிரிக்க ஆரம்பித்தார்.

வரலக்ஷ்மி 4  இட்லிக்களை திருப்தியுடன் சாப்பிட்டார். கண்ணனும் சாப்பிட்டார். பிறகு இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். கண்ணன் தொலைபேசியில் கோவையிலிருக்கும் தனது மகள் மற்றும் மகனுடன் சிறிது நேரம் பேசினார். இப்படியாக மாலைபொழுது முற்றிலும் மறைந்து இரவு 10௦ மணி ஆகிவிட்டது.

வரலக்ஷ்மி ஒரு கொட்டாவியுடன் மீண்டும் தனது அறைக்கு சென்று படுத்துக் கொண்டார். ஏதும் பேசவில்லை. கண்ணனும் தனது அறைக்கு சென்று படுத்து விட்டார். அவருக்கு நல்ல தூக்கம்.

பின்னிரவு மணி 3.30 இருக்கும். அப்போது, "கண்ணா.. கொஞ்சம் இங்கே வர்றையப்பா..." என்று தன்னை வரலக்ஷ்மி முனகலுடன் மெல்ல அழைப்பது போல் கண்ணன் உணர்ந்தார். கனவா.. என நினைத்து கண்ணன் சட்டென விழித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் கண்ணனை வரலக்ஷ்மி தனது அறையில் இருந்து அழைத்துக் கொண்டிருப்பது அவருக்கு நன்கு கேட்டது.

உடனே கண்ணன் வரலக்ஷ்மியின் அறைக்கு ஓடினார். அங்கே, இரவு மின் விளக்கின் ஒளியில் வரலக்ஷ்மி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது கண்ணனுக்கு தெரிந்தது. கண்ணன் உடனடியாக விளக்கை போட்டார். மேலே மின்விசிறி வேகமாக  சுற்றிக் கொண்டிருந்தது. எனினும்  வரலக்ஷ்மியின் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. மூச்சு விட சிரமப் படுவது போல் தெரிந்தது. 

"கண்ணா.. நெஞ்சை பிசையறா மாதிரி இருக்கு.. மூச்சு விட முடியலே.. மயக்கமா இருக்கு.. ஏதோ பன்னுதப்பா... " என்றார் வரலக்ஷ்மி. "நான் அப்போதே சொன்னேன்.. டாக்டர் கிட்டே ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலன்னு.." என்றார் கண்ணன். பிறகு உடனடியாக தொலைபேசி செய்து ஒரு டாக்சியை வரவழைத்து வரலக்ஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை வாசலருகே வரும் போது வரலக்ஷ்மி மயக்கமாகி துவண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த டூட்டி மருத்துவர்கள் வரலக்ஷ்மியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலில் பிராண வாயு செலுத்தினர். இ.சி.ஜி. பார்த்தனர். அங்கேயே நெஞ்சின் மீது நுண்கதிர் படம் எடுத்தனர்.  வரலக்ஷ்மி வழக்கமாக பரிசோதித்துக் கொள்ளும் இருதய சிறப்பு மருத்துவரை துரிதமாக வரவழைத்தனர்.

அவர் வந்து வரலக்ஷ்மியை சுமார் இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ஊசிகள் சிலவற்றை அவருக்கு இட்டு, சில குறிப்புகளை அங்கிருந்த டூட்டி மருத்துவர்களிடம் கூறிவிட்டு ஐ.சி.யு.-வில் இருந்து வெளி வந்தார்.

"டாக்டர்.. அம்மாவுக்கு பி.பி. ரைஸ் ஆய்டிச்சா.. ஹார்ட் எப்படி இருக்கு?" என்று அடுக்கடுக்காக சில கேள்விகளை படபடவென கேட்டார் கண்ணன்.

"எஸ்.. யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கண்ணன்.. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு.. மைல்ட்ன்னு சொல்ல முடியாது.. பி.பி. நர்மல்லே இல்லே.. நல்ல வேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்திட்டீங்க.. கொலஸ்ட்ரல், சுகர் எல்லாம் டெஸ்ட் செய்யனும். ரெண்டு நாள் இன்டென்சிவ் கேர்லே இருக்கட்டும்.. நாளைக்கு செக் பண்ணிட்டு சில டேப்லேட்ஸ் எழுதி தர்றேன்.." என்றார் மருத்துவர்.

"அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்சன் கூடாது.." என்று கூறிக்கொண்டே கிளம்பி விட்டார் மருத்துவர்.

ஐ.சி.யு. அறைக்குள் வரலக்ஷ்மி பிராண வாயு முகமூடி அணிந்து, ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அதே கையின் ஆட்காட்டி விரல் நூனியில்  நாடித் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்க, மற்றொரு கையின் மேல் பகுதியில் இரத்த அழுத்தத்தை தானாக கண்காணிக்கும் பட்டை பொருத்தப்பட்டிருக்க, தலைக்கு மேலே இவற்றின் அளவுகளை காட்டும் மானிட்டர் பெட்டியுடன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. 


(தொடரும்..) 

Monday, 12 December 2011

மதனப் பெண் 30 - அது வெறும் ஒப்புக்குத்தான் !

மேல்தள கட்டடப் பணிகள் 80  சதவீதம் முடிந்து விட்டன. பவித்ரா இருந்தால் விரிவாக கிரஹப்பிரவேசம் செய்திருக்கலாம். பவித்ரா இல்லை. அத்தோடு பவித்ரா இறந்து 6  மாதங்கள்தான் ஆகின்றன. எனவே எளிய முறையில் பால் பொங்கி மேல் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை மாற்றி விடலாம் என கண்ணன் நினைத்திருந்தார். ஆனால், மாமா, சித்தப்பாமார்கள், சில பெரியவர்கள் என எல்லோரும் பவித்ராவின் ஆண்டு திதி முடிந்த பிறகு மேல்தள கட்டத்திருக்கு குடி போகலாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர். இது கண்ணனுக்கும் சரியெனப்பட்டது.

பவித்ரா ஆசைஆசையாகப் பார்த்து வடிவமைத்து, அவளது மேற்பார்வையில் தொடங்கப்பட்ட அலுவலகக்  கட்டடம், படுக்கையறை, சமையலறை.... அந்தக் அறைகளில் எப்படி எல்லாம் தனது கணவனுடன், குழந்தைகளுடன்  வாழ வேண்டும் என்று பவித்ரா கனவு கண்டிருந்தாளோ, நினைத்திருந்தாளோ ? எனவே முதலில் பவித்ராவின் ஆண்டு திதியை நல்ல முறையில் முடித்து விட்டு பிறகு மேல் தள கட்டடத்திற்கு குடி போகலாம் என்று கண்ணனும் முடிவு செய்து விட்டார்.

கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை. குழந்தைகள் இருவரையும் அவரது தாத்தா சுந்தரம் அழைத்து சென்று விட்டார். கண்ணன் நீதிமன்றம் திறந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய சில வழக்குகளை தயார்  செய்து கொண்டிருந்தார்.

பவித்ராவின் மறைவுக்குப் பிறகு கண்ணனை தனிமை நிறைய தொந்தரவு செய்தது. பெரிய நட்பு வட்டத்தை கொண்ட அவர்  இப்போது தான் உண்டு, தனது வேலை உண்டு, வீடு உண்டு, குழந்தைகள் உண்டு என்று மிகவும் சுருக்கமானார். சிரிப்பதை மறந்து போனார். உற்சாகமான முகம் இறுக்கமாகிக் விட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவரால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. பளீர்பளீரென பவித்ராவின் நினைவுகள் அவரது மனதை மின்னலாக தாக்கிக் கொண்டே இருந்தன. குழந்தைகள் மட்டுமே சற்று ஆறுதல். ஆனால் வரலக்ஷ்மியால் இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியவில்லை. சரிவர சமைக்க முடியவில்லை. அவரிடமும் எந்த உற்சாகமும் இல்லை. ஏதோ இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

புரிதல் மிக்க அழகான  மனைவி, பாசமிகு தாய், பொறுப்பான மருமகள் என வலம் வந்த பவித்ராவின் திடீர் மறைவு, கண்ணனின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. பரபரப்பாய், சந்தோசமாய், கலகலவென பம்பரமாய் சுழன்று வந்த பவித்ரா என்ற ஒரு ஒத்தைப் பெண்மணி இல்லாமல் கண்ணன் உட்பட நான்கு ஜீவன்கள் தடுமாறிப் போனார்கள். அவரவர்களுக்கு உண்டான தவிப்பை உணர்ந்தார்கள். மனித வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏற்படும் இழப்பை சட்டென சரி செய்து கொள்ள முடியுமா? ஈடு செய்ய இயலுமா? அப்படி முடிந்தாலும் அது வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகளும் தங்கள் தாத்தா வீட்டிற்கு சென்று இருப்பதால் வீடு வெறிச்சோ என்று இருந்தது. கண்ணன் வெறுமையின் கொடுமையை அனுபவித்தார்.

ஒரு நாள் மதியம் வரலக்ஷ்மி சமைக்கவில்லை. "கண்ணா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கு ஓட்டல்லே இருந்து ஒரு எடுப்பு சாப்பாடு வாங்கிட்டு வந்திடு... என்னால சமைக்க முடியலப்பா..." என்று கொஞ்சம் மூச்சிரைக்க வரலக்ஷ்மி கூறினார். அவ்வாறே கண்ணனும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தார். வரலக்ஷ்மி சரியாகச் சாப்பிடவில்லை. களைப்பாக இருக்கிறது என்று தனது அறையில் சென்று படுத்துவிட்டார். "சரி.. அம்மா ஓய்வெடுக்கட்டும்" என்று கண்ணன் சிறிது  நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை 5  மணி இருக்கும்.. வரலக்ஷ்மியின் அறைக்குள் கண்ணன் எட்டிப் பார்த்தார். அப்போதும் வரலக்ஷ்மி தூங்கிக் கொண்டிருந்தார். 'சரி.. தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கருதி, கண்ணன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அப்படியே கால்நடையாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு கிளம்பிப் போனார். அங்கே தரிசனம் முடிந்து விட்டு கண்ணன் வீடு திரும்பும் போது 7  மணி இருக்கும். வீட்டுக்குள் மின்விளக்கு ஏதும் போடப்படவில்லை என்பதை வெளி ஜன்னல் வழியாக கண்ணன் தெரிந்து கொண்டார். "அம்மா.. இப்படி சாயங்கால வேளையிலே படுத்திருக்க மாட்டங்களே..! ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை...?" என்ற சில வியப்பான கேள்விகளுடன் பூட்டை திறந்து கண்ணன் ஹாலின் மின் விளக்கை போட்டவாறு வரலக்ஷ்மியின் அறைக்கு சென்றார்.

அங்கே மாலையில் கண்ணன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது வரலக்ஷ்மி எப்படி வயிற்றின் மீது கைகளை குறுக்காக இட்டு படுத்து இருந்தாரோ அதே நிலையில் அப்போதும் படுக்கையில் படுத்து இருந்தார்.

கண்ணனை சடக்கென ஒரு பயம் தொற்றிக் கொண்டது. உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. 

(தொடரும்) 

Wednesday, 7 December 2011

மதனப் பெண் 29 - உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க !

பவித்ரா இறந்த பிறகு கண்ணன் பல நாட்கள் வெறுமனே இருந்தார். தனது பணிகளை தொடங்கவில்லை. நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள் வழக்கு கட்டுகளை கவனித்துக் கொண்டனர். கண்ணனின் வாழ்க்கை வறண்ட பூமியாக ஆகி விட்டது. அவ்வப்போது நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கட்டட வேலை பாதியில் அப்படியே நின்று விட்டது.

மகள் ரோஹினி மட்டும் பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினாள். மகன் சத்தியதேவ் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. ரோஹிணிக்கு வேண்டியதை செய்து அவளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளை வரலக்ஷ்மி செய்து வந்தார். பவித்ரா வந்த பிறகு ஓய்வில் இருந்த வரலக்ஷ்மிக்கு இந்த திடீர் பணிகள் அவரது உடல்நலத்தை படுத்த ஆரம்பித்தது. அவரால் வீட்டுப் பணிகளை, சமையல் வேலைகளை  முன்பு போல் ஓடியாடி செய்ய இயலவில்லை.  குறிப்பாக மகன் சத்தியதேவ் இரவில் திடீரென முழித்துக் கொண்டு 'மம்மி..மம்மி.." என்று பவித்ராவை தேட தொடங்கினான். அவனை சமாதானப்படுத்தி தூங்க வைப்பது வரலக்ஷ்மிக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இப்படியாக மூன்று மாதங்கள் சென்று விட்டன.

ஒருமுறை தனது பேரக் குழந்தைகளை பார்க்க கோவையிலிருந்து மாமனார் சுந்தரம் வந்திருந்தார். "மாப்பிளே.. நீங்க இப்படியே இருக்கக் கூடாது.. பழையபடி உங்க தொழிலை கவனிக்ககோணும்... குழந்தைகளை பாக்கணும்.. நின்னு போன கட்டட வேலையை முடிங்க.. பவித்ராதான் போயிட்டா..  நீங்களும் இப்படியே இடிஞ்சு போயிட்டா நாங்க என்ன பண்ண முடியும்?" என்று அவர் கண்ணனுக்கு தைரியம் சொன்னார்.

"ஆமா மாமா.. நான் என்னை தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்.. நான் சில முடிவுகளை எடுத்து இருக்கேன்.. முதல்லே ரோஹிணியை ஒரு போர்டிங் ஸ்கூல்லே சேர்த்தப் போறேன்.. சத்தியாவை வர்ற விஜய தசமி அன்னிக்கு எல்.கே.ஜி.-யிலே சேர்த்தப் போறேன். அம்மாவாலே முடியலே.. இந்த கட்டட வேலையை கூடிய சீக்கிரம் முடிக்கப் போறேன்.." என்று தனது மனதில் இருந்த திட்டங்களை கண்ணன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க.. ஆனா.. பிள்ளைங்களை நல்ல கவனிச்சுக்கோங்க... சத்தியாவை வேணா என்னகிட்டே விட்டுருங்க.. நாங்க அவனை கோயமுத்தூர்லே ஒரு நல்ல ஸ்கூல்லே சேக்கிறோம்... நாங்க பாத்துக்கிறோம்.." என்றார் சுந்தரம்..

ஆனால் அதற்கு கண்ணன் இசையவில்லை. "இல்லை மாமா.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க கவலைபடாதீங்க.." என்றார் கண்ணன். சுந்தரம் குழந்தைகளை பார்த்து விட்டு அடுத்த நாள் கோவை கிளம்பிச் சென்றார்.

விஜயதசமி அன்று மகன் சத்தியாவை மகள் ரோஹினி படித்துக் கொண்டிருக்கும் அதே பள்ளியில் எல்.கே.ஜி.-வகுப்பில் சேர்த்தார். அதே தினத்தில் தனது அலுவலகத்திற்கு பூஜை போட்டு தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினர். கண்ணன் இவ்வாறு வழக்கமான  பணிக்கு திரும்பியது கண்டு அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள், தட்டச்சர், குமாஸ்தா அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் தசரா விடுமுறை முடிந்ததும் கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல ஆரம்பித்தார்.

ஒரு நல்ல நாளில் நின்று போன கட்டட வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். முந்தைய மேஸ்திரி பணிக்கு வரவில்லை. எனவே வேறு ஒரு மேஸ்திரி மற்றும் பொறியாளரை வைத்து வரைபடத்தில் சில திருத்தங்களை செய்து பணிகளை தொடங்கினார்.

கண்ணன் காலையில் தனது அலுவலக அறைக்கு வரும் போது, மறைந்து போன தந்தையார் வேதாச்சலத்தின் நிழற்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்குவது வழக்கம். இப்போது அந்த நிழற்படத்திற்கு அருகே பவித்ராவின் நிழற்படமும் சேர்ந்து விட்டது.

அருகில் இல்லாது போனாலும், உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் மனதார வணங்கி விட்டு கண்ணன் தனது அன்றாட பணிகளை தொடங்கினார். ரோஹினியும் இப்படி வழிபாடு செய்து விட்டு பள்ளிக்கு சென்று வந்தாள். இவ்வாறு வழிபட சத்தியதேவும் பழகிக் கொண்டான். "வாழ்த்த வேண்டிய வயசிலே, என்னை இப்படி கும்பிட வெச்சிட்டேயம்மா...? நீ எங்கே இருந்தாலும் இந்தப் புள்ளைங்களையும், உன் புருசனையும் காப்பாத்து" என்று புலம்பியவாறு இந்த மூவரின் பிரார்த்தனையில் வரலக்ஷ்மியும் அவ்வப்போது சேர்ந்து விடுவர்.

இப்படியாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி காலம் சென்று கொண்டிருந்தது.

ரோஹினி முழு ஆண்டுதேர்வை எழுதி முடித்து விட்டாள். சத்தியதேவ் யு.கே.ஜி.-க்கு தயாராகி விட்டான். கோடைக் கால விடுமுறை தொடங்கி விட்டது. கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தன.

அப்போது ஒரு நாள்...!

(தொடரும்) 
Related Posts Plugin for WordPress, Blogger...