இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Showing posts with label அத்தியாயம் 34. Show all posts
Showing posts with label அத்தியாயம் 34. Show all posts

Sunday, 25 December 2011

மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு

மாமா சுந்தரத்தின் ஆலோசனையை கண்ணன் கூர்ந்து கேட்டார். அதற்கு பதில் தர ஆரம்பிக்கு முன் கண்ணன் ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.

"மாமா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நீங்க ஒரு பிரக்டிகல் மேன். ஆனா ... இன்னும் கொஞ்சம் பிரக்டிகலா தின்க் பண்ணி பாக்கணும். முதல்லே இங்கே விட்டுட்டு அம்மா அங்கே வந்து இருக்கணும்... இங்கே எப்படி அம்மாவுக்கு வயசாகுதோ, அப்படியே உங்களுக்கும், மாமிக்கும். சொல்லப்போன நீங்க என்  அம்மாவோட அண்ணன்.. வயசு அதிகம்.. நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும். தவிர அம்மாவும் குழந்தைகளும் அங்கே வந்திட்டா நான் இங்கே தனியாள இருக்கணும். ஓட்டல் சாப்பாடு..! வீடு வேற பெருசா கட்டிட்டேன்.. மதுரை டூ கோவை தூரம் அதிகம்" என்று தனது தரப்பை மெல்ல நியாயப்படுத்தி கண்ணன் பேசி வந்தார்.

"மாமா.. இன்னொரு விசயத்தையும் நீங்க கவனிக்கணும்.. குழந்தைகளை நீங்க கொண்டு போய் வளத்தினா, பின்னிட்டு அவங்க என்னை ஒரு நல்ல கார்னர்லே வச்சிருக்கிறது சந்தேகம்.. குழந்தைங்க உங்க பராமரிப்புலே வளருது என்கிற நினைப்புலே நான் என் வோர்கிலே பிசிய இருந்துடுவேன்.. ஏதோ ஒரு டிடாச்மென்ட் ஏற்பட சான்ஸ் இருக்கு.. ரோஹினி ஹாஸ்டல்லே படிச்சா நான் கண்டிப்பா போய் பாத்துட்டு வருவேன்.. என் குழந்தைங்க மேலே எனக்கு பெர்சனல் ரெஸ்பான்சிபிளிட்டி அதிகம் இருக்கணும்..  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கணும்.. அவங்க மம்மி இறந்த பிறகு அவங்களை டாடிதான் வளக்கிறார் என்ற உணர்வு அவங்களுக்கு இந்த வயசிலிருந்தே ஏற்படணும்.." என்று தனது மன உணர்வுகளை கோவையாக சொன்னார் கண்ணன்.

"அதனாலே மாமா.. நான் எடுத்திருக்கிற டிசிசன் வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் உங்க ஆசீர்வாதம் ஒன்னு மட்டும்தான்.." என்று கண்ணன் முடித்தார்.

சுந்தரத்திற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்துடன் முன்னதாக தான் சொல்ல வந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம், அதற்கு இது தருணமல்ல  என்று முடிவு செய்து விட்டார். "சரி மாப்பிள்ளே.. நீங்க நினைச்ச மாதிரி செய்யுங்க.. நீங்களே குழந்தைகளே கவனிச்சாத்தான் அதுக பின்னிட்டு உங்க மேலே பாசமா இருக்கும்ன்னு சொல்லறீங்க.. அதுக்கு நாங்க தடையா நிக்க விரும்பலை.. குழந்தைகளையும் , அம்மாவையும் பாத்துகோங்க... நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்." என்று சொல்லிவிட்டு அடுத்தநாள் சர்மிளாவுடன் கோவை புறப்பட்டு சென்று விட்டார், சுந்தரம்.

வரலக்ஷ்மி மெல்ல உடல் நலம் தேறி வந்தார். பேரன், பேத்தி இருவரும் வரலக்ஷ்மியிடம் சமத்தாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய வேலைக்காரி ஒருவரை அதிக சம்பளத்தில் வரலக்ஷ்மி நியமனம் செய்தார். அவர் தன்னை இயல்பான நிலைக்கு தாயார்படுத்தி கொண்டார். தினமும் சாப்பிட வேண்டிய இதய நோய் மாத்திரைகளை தொடர்ச்சியாக சாப்பிட பழகிக் கொண்டார். சில சிறிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு கற்றுக் கொண்டார். டென்சனை தவிர்த்தார். சமைக்கும் நேரம் போக குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். எனினும் இப்படி நிறைய நேரம் அவரால் உற்சாகமாக இருக்க இயலவில்லை. சோர்வு ஏற்பட்டது. இப்படியாக சுமார் 10 நாட்கள் சென்று விட்டன.


கோடை விடுமுறை முடிவடையும் நேரம். கண்ணன் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுபடி ரோஹிணியை கொடைக்கானல் பள்ளியில் சேர்க்க தயாரானார். வரலக்ஷ்மி, சுந்தரம், சர்மிளா உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்று ரோஹிணியை பள்ளியில் விட்டனர். ஹாஸ்டல் வார்டன், பள்ளியின் சிஸ்டர் ஆகியோரிடம் ரோஹினி 'தாயில்லாக் குழந்தை' என்ற விவரத்தைக் கூறி கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தனர். 

ரோஹிணிக்கு தனது தந்தை கண்ணனை விட்டு பிரிய மனமில்லை. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.  கண்ணனுக்கும், மற்றவர்களுக்கும்  அழுகை வந்து விட்டது. பிறகு ஒரு வழியாக ரோஹினியின் புது தோழிகள் வந்து சமாதனம் செய்தனர்.  "ரோஹினி அழதேம்மா... டாடி இங்கேதான் இருக்கப் போறேன்... உன்னை அடிக்கடி வந்து பாத்திட்டு போவேன்.. உன்னை சண்டேஸ்லே நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போவேன்.. நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தருவேன்.. உங்களுக்கு இங்கே நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. தம்பியும் அடுத்த வருஷம் இங்கேயே படிக்க வந்திடுவான்.  நீங்க நல்ல படிக்கணும்...  சரியா..? அழக்கூடாது... நீங்க அழுதா டாடி அழுவேன்.. கண்ணை துடைச்சிகோங்க..." என்று பலவாறு சமாதானம் கூறி கண்ணன் மெல்ல ரோஹிணியிடமிருந்து விடை பெற்றார்.

கண்ணனின் மனதில் பவித்ரா ஒரு புன்சிரிப்புடன் மின்னலாக தோன்றி மறைந்தாள். 

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...