இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Showing posts with label அத்தியாயம் 3. Show all posts
Showing posts with label அத்தியாயம் 3. Show all posts

Sunday, 9 October 2011

மதனப் பெண் 3 - மனம்

ஒரு திரைப்படத்திற்கு பார்முலா என்பது ஒரு கதை, மூன்று அல்லது நான்கு காதல் பாடல்கள், ஒரு கவர்ச்சி நடனம், இரண்டு சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக்கென இரண்டு நடிகர்கள் கொண்ட ஒரு தனி டிராக் அல்லது கதாநாயகனுடன் சேர்ந்து சிரிப்பு நடிகர் செய்யும் சேஷ்டைகள், அயல்நாட்டு படப்பிடிப்பு, கொஞ்சம் சோகம், சில வசனங்கள், திடீரென ஒரு கிளைமாக்ஸ். இது ஒரு பொதுவான பார்முலா. 

பொதுவாக ஒரு எதிரி, தனது சுய லாபத்திற்காக நன்றாக பழகிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்பினரை அவர்களுக்குள் வெறுப்பு கொள்ளச் செய்து அவர்களை மோத விட்டு, இடைவேளைக்கு பின் தாங்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்வது அந்த எதிரியின் சதியால்தான் என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து, அவர்கள் இருவரும் சேர்ந்து எதிரியை முடித்துக் கட்டுவது. இதுவே எல்லாப் படங்களிலும் இழையோடும் ஒரு பொத்தம்பொதுவான அம்சம். சில புதினக் கதைகள் இதற்க்கு விதிவிலக்கு. இப்படிப்பட்ட படங்கள் கதைக்காகவோ, பாடல்களுக்கவோ, நடிப்பிற்காகவோ சில சமயங்களில் வெற்றி பெற்று விடுவதுண்டு. ஆனால் பல சமயங்களில் தோல்வியே கண்டுள்ளது. 

ஆனால் வெற்றிகரமான திரைப்படத்திற்கு வேண்டியது என்ன தெரியுமா? ஒரு கதை மட்டுமல்ல ! கதைக்குள் கதை இருக்க வேண்டும். அதாவது கிளைக் கதைகள். இரண்டு பிளாஷ்பேக். படத்தின் இறுதியில் மட்டும் என்றில்லாமல் நிறைய இடங்களில் அதிரடியான திருப்பங்கள் இருக்க வேண்டும். காட்சிகள் தொய்வில்லாமல் ஓட வேண்டும். சூழல் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்பது ஊகிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். வெள்ளி விழா கண்ட எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த அம்சங்கள் இருக்கும். 

ஒரு திரைக்கதை அம்சங்களைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாக கூறுகிறேன் என்றால், நமது மதனப் பெண் கதையும் அத்துணை விறுவிறுப்பை உள்ளடக்கியது. 

அந்த வகையில் நமது நாயகி லலிதாவிற்கு நிறைய பிளாஷ்பேக் உண்டு. கண்ணனுக்கும் அவ்வாறே !

தங்கள் மகளுக்கு 'எப்படியோ' ஒரு வரன் அமைந்து விட்டால், மேற்கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையை நகர்த்த ஏதுவாக இருக்கும் என்று லலிதாவின் பெற்றோர்கள் தினமும் சிந்தித்துக் கொண்டிருதனர். 

பொதுவாக தங்கள் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்றே பெற்றோர் விரும்புவர். ஆனால் லலிதாவின் பெற்றோர்கள் மட்டும் தங்கள் மகளுக்கு 'எப்படியோ' ஒரு வரன் அமைந்து விட வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?

பெற்றோர்கள் லலிதாவின் திருமணத்தை பற்றி இப்படி சிந்தித்துக் கொண்டிருக்க லலிதாவின் மனமோ வேறு மாதிரி சிந்திந்துக் கொண்டிருந்தது. தான் திருமணம் செய்து கொண்டால்தான் தனது குடும்பம் முன் நோக்கி செல்லும் என்பதை லலிதா நன்கு உணர்ந்திருந்தாள். ஆனால் அவளுக்குள் திருமணத்தைப் பற்றி ஒரு பயம், படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்தித்தது. 

திருமணம் என்றால் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஆனால் அதைப் பற்றி லலிதா வேறு விதமாக ஏன் நினைக்க வேண்டும்? லலிதாவின் இந்த சிந்தனைகள் எதையும் அறியாதவர்களாக அவளது பெற்றோர் இருந்தனர். தான் திருமணத்திற்கு சம்மதமான நிலையில், மகிழ்ச்சியான மன உணர்வில் உள்ளதாக லலிதா தனது பெற்றோரிடம் காட்டி வந்தாள். அதாவது பாசாங்கு செய்து வந்தாள் என்றுதான் கூற வேண்டும். லலிதாவின் இந்தப் பாசாங்குத்தனம், பின் தொடர்ந்து வந்த 12  ஆண்டுகளில் எல்லா நிகழ்வுகளிலும்  நீடித்தது. 

பெற்றோர் ஒரு புறம் அப்படி நினைக்க, லலிதா இப்படி ஒரு புறம் நினைக்க என்ன காரணம்? என்ன ஏதாவது பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

(ஒவ்வொன்றாக விடை தருகிறேன்..)  
Related Posts Plugin for WordPress, Blogger...