இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Showing posts with label அத்தியாயம் 13. Show all posts
Showing posts with label அத்தியாயம் 13. Show all posts

Monday, 24 October 2011

மதனப் பெண் 13 - நினைத்ததே நடந்தது !

பிரசவ அறையை விட்டு பரபரப்பாக வெளி வந்த மருத்துவரின் முகத்தில் கலவரம் ஏதும் தெரியவில்லை. மாறாக ஒரு சிறிய புன்சிரிப்பு வெளிப்பட்டது. எனவே பவித்ராவிற்கு சுகப் பிரசவம் ஆகியுள்ளது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

ஆனால் அவரது பரபரப்பிற்கு  என்ன காரணம்? ஒருவேளை வேறு ஏதும் சிக்கலோ, என்று கண்ணன், வரலக்ஷ்மி, சுந்தரம் உள்ளிட்ட அனைவரும் எண்ணினார்.  

அவர்கள் அருகில் வந்த டாக்டர், கண்ணனை பார்த்து, "வாழ்த்துகள் வக்கீல் சார்... நீங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருக்கு" என்று சொல்லி சில நொடிகள் இடைவேளை விட்டார். கண்ணனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. "நான் என்ன நினைத்தேன்?.. என்ன நடந்திருக்கிறது?" என்று கண்ணன் சிந்திக்க ஆரம்பித்ததுடன் அவருக்கு விவரம் உடனடியாக விளங்கி விட்டது. "டாக்டர்... நிஜமாவா?" என்று கேட்டார் கண்ணன்.

"ஆமா.. மிஸ்டர் கண்ணன்.. உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எங்களாலும் நம்ப முடியலை. எனி ஹொவ் கன்கிரசுலேசன். பை தி பை, தாயும் சேயும் நலம்" என்று சொல்லிகொண்டே ஒ.பி. பார்க்க டாக்டர் விடுவிடுவென சென்று விட்டார்.

கருவில் உள்ளது பெண் குழந்தை என்று ஸ்கேன் சொன்னது. மருத்துவரும் அப்படியே சொன்னார். அதற்கு என்ன பெயர் சூட்டுவது என்பதைக் கூட  எல்லோரும் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர். ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.  இந்நிலையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தையே பிறந்துவிட்டது. அதாவது 'நினைத்ததே நடந்தது' என்பதால்  எல்லோருக்கும் மகிழ்ச்சி. குறிப்பாக வரலட்சுமிக்கு மிக்க மகிழ்ச்சி.

இப்படி எல்லோரும் கொஞ்சம் நேரம் வியப்புடன் பேசிக் கொண்டு கண்ணனுக்கு வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்தனர். சில மணி நேரங்கள் சென்றன. அப்போது ஒரு செவிலியர், " இப்போ.. நீங்க பவித்ராவையும் குழந்தையையும் போய் பார்க்கலாம். கும்பலா போக வேண்டாம்" என்று சொன்னார். முதலில் அறைக்குள் கண்ணன் தனது முதல் குழந்தை ரோஹிணியுடன் சென்று  பார்த்தார்.

குழந்தை நல்ல  சிவந்த நிறத்துடன் நீண்ட கை, கல் விரல்களை கொண்டு இருந்தது. உயரமாக வளரத்தக்க உடல்வாகு. கண்ணனின் அப்பா வேதாசலத்தின் சாயல் தெரிந்தது. பவித்ராவின் முகத்தில் களைப்பு. மெல்ல புன்முறுவல் பூத்தாள். மெல்லிய குரலில் "மாமா.. சக்சஸ். நம்ம குடும்பத்துக்கு ஒரு குட்டி கண்ணனை பெற்றுக் கொடுத்திருக்கேன்.. ஹேப்பியா ? " என்றாள்.

கண்ணனுக்கு என்ன பதில் பேசுவது என்று தெரியவில்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பவித்ராவின் கன்னத்தில் ஒரு முத்தமும், குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தார்.

பின் எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக பவித்ரா மற்றும் குழந்தையை சென்று பார்த்தனர்.

இப்படி ஐந்து  நாட்கள் சென்று விட்டன. குழந்தைக்கு  சொட்டு மருந்து, பவித்ராவிற்கு சத்து மருந்து என வழக்கமான மருத்துவ கவனிப்புகள் நடந்தன.  இதைத் தொடர்ந்து பவித்ராவை மருத்துவர் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என்று கூறினார். 

அப்போது பவித்ரா ஒரு முக்கிய முடிவெடுத்தாள்  !

அது என்ன முடிவு?  

(பின் சொல்கிறேன்)
Related Posts Plugin for WordPress, Blogger...