இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday, 3 December 2011

மதனப் பெண் 28 - நான் எதுக்கு மாமா சாகணும்..?

கண்ணனின் விபரீத செயலைக் கண்டு அவரது சிறிய மாமா பதற்றத்தின் உச்சத்திற்கே போனார்.

கண்ணனின் கையை பிடித்து இழுப்பதற்காக அவர் கண்ணனின் அருகே ஓட்டமாக ஓடிச் சென்றார்.

"மாமா.. அவ கூப்புடுறா மாமா..." என்று சொல்லிக் கொண்டிருந்த கண்ணன் இப்போது, "மாமா.. இப்போ பவித்ராவோட குழந்தைங்களும்  தெரியறாங்க... அவ என்னை வரவேனாம்ன்னு சொல்றா மாமா.. குழந்தைங்களை பாத்துக்க சொல்றா... " என்றவாறு கண்ணன் கிணற்றின் சுற்றுச் சுவர் மீதிருந்து கீழே குதித்து அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டார். கண்ணனின் அருகில் வந்துவிட்ட மாமாவுக்கு அப்போதுதான், போன உயிர் திரும்பி வந்தது போல் ஆனது.

அவர் அப்படியே கண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "தெய்வமே.. நான் என்ன பண்ணுவேன்..? இப்படி சோதிக்கிறாயே ..." என்றவர், பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு, "கண்ணா.. கொஞ்ச நேரத்திலே என்ன காரியம் பண்ணப் போனே..? நீ இப்படி பண்ணலாமா? உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

பின் கண்ணன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து சடக்கென விடுபட்டார் போன்று, ஓவென கதறி அழ ஆரம்பித்தார். "பவித்ரா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்டியே ..." என்பதே திரும்பத் திரும்ப அவரது அழுகையின் ஊடே வந்த அவரது குரலாக இருந்தது.

கண்ணனின் துக்கங்கள், மன வேதனைகள், வருத்தங்கள், பவித்ராவின் நினைவுகள் எல்லாம் அழுகையின் வடிவில் வெளி வரட்டும் என்று அவரது மாமா அவரை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டார். கண்ணனின் பெருங்குரல் அழுகையை கேட்டு அந்த நந்தவனத்தில் இருந்த அனைவரும் திரண்டு விட்டனர். நிலைமையை அறிந்து அவர்களில் வயது முதியவர்களாக இருந்த சிலர் கண்ணனை மெல்ல சமாதனப்படுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்ணன் தனது அழுகை, தொடர்ந்து ஏற்பட்ட விசும்பல் எல்லாவற்றையும் மெல்ல நிறுத்தி, அருகில் இருந்த வாளியை எடுத்து கிணற்றில் விட்டு நீர் சேந்தி தலைக்கு மடமடவென ஊற்றிக் கொண்டார். பின் உடலை துண்டால் துவட்டி கொண்டு, உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டார். இப்போது அவரது முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

அருகில் வந்த மாமா, "கண்ணா.. நீ இப்போ பண்ணின மாதிரி எப்பவும் பண்ண மட்டே என்று என்கிட்டே சத்தியம் பண்ணு" என்று சற்று உறுதி கலந்த கண்டிப்புடன் தனது உள்ளங்கையை கண்ணனுக்கு எதிராக நீட்டினர். கண்ணன் அவரது கையை அப்படியே தனது கையால் பற்றிக் கொண்டார். "எனக்கு.. எங்கே பாத்தாலும் பவித்ரா தெரியறா  மாமா.. அவளோட untimely  death  என்னை ரொம்ப பாதிச்சிடிச்சு..  சாரி மாமா.. நான் சரி பண்ணிக்கிறேன்...  எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. பவித்ரா ஆசைப்பட்ட மாதிரி அவங்களை நல்ல வளக்கிறேன்.. அப்போதான் அவளோட ஆத்மா சாந்தியடையும்.. நான் எதுக்கு மாமா சாகணும்..? பவித்ராதான் என்கூடவே இருக்கல்லே...!  இனி குழந்தைங்களுக்காக  வாழப்போறேன்... நாம வீட்டுக்கு போலாம் மாமா.. எல்லோரும் காத்திருப்பாங்க.. " என்றவாறு மாமாவின் கைகளை பிடித்தவாறு கண்ணன் மெல்ல எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார்.

கண்ணன் உறுதியாக பேசுவதை கண்டு மாமாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது.. கண்ணன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மனதளவில் தயாரானார்.



அதிகமாக பிரியம் வைத்திருந்து, தானும் சந்தோசமாக இருந்து, மற்றவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் ஒருவர்,- அதுவும் அவர் அன்பான, அழகான, அருமையான, பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான, வாழ்வை வண்ணமயமாகும் மனைவியாக இருந்து, சிறிய வயதிலேயே திடீரென இறந்து விட்டால் இப்படிப்பட்ட உடனடித் தடுமாற்றங்கள் எல்லா கணவன்மார்களுக்கும்  ஏற்படும். அத்துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

(தொடரும்..)

Tuesday, 29 November 2011

மதனப் பெண் 27 - "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா.."

பவித்ராவை மண்ணுக்கு கொடுத்து விட்டு எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.


அவ்வப்போது சின்ன சின்ன விசும்பல்கள் வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பவித்ராவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கேற்றி  ஊதுபத்தி பொருத்தி வைத்திருந்தனர். கண்ணன் அந்தப் புகைப்படத்தின் முன் அமர்ந்தே இருந்தார். பவித்ராவை பார்த்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலசமயம் 'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்.

சாதி மத வழக்கப்படி பத்தாம் நாள் காரியம் செய்வார்கள். ஆனால் பவித்ரா இப்படி துர் மரணம் அடைந்த காரணத்தால் மூன்றாம் நாளே அக்காரியங்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டன. இடுகாட்டில் பவித்ராவை அடக்கம் செய்த இடத்தில் எல்லோரும் கூடினர்.  கண்ணன் பூஜை செய்தார். பவித்ராவின் மரணம் கொடுத்து அதிர்ச்சியில் இருந்து கண்ணன் எள்ளளவும் மீளவில்லை என்பதை அவர் ஏதோ ஒரு சாவி கொடுத்த பொம்மையாக பூஜை செய்ததிலிருந்து எல்லோரும் அறிய முடிந்தது.

பிறகு அருகில் இருக்கும் நந்தவனத்தில் குளித்து விட்டு கண்ணன் வீட்டிக்குள் நுழைய வேண்டும் என்று சமூகப் பெரியோர்கள் கூறினார். இதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது சிறிய மாமா (சுந்தரத்தின் தம்பி) நந்தவனத்திற்கு செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இடுகாட்டில் அந்திமக் காரியம் செய்து விட்டு வரும் உறவின் முறையினர் குளிக்க, உடை மாற்ற, பிற சாங்கியங்கள் செய்ய அதற்கு அருகிலேயே ஒரு இடத்தை பெரிய கிணற்று நீர் வசதியுடன் பூங்காவனம் போல அந்தக் காலத்திலேயே ஒதுக்கி கொடுத்திருந்தனர். அது நந்தவனமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு வரும் வரையில் கண்ணனோ, அவரது சிறிய மாமாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நந்தவனம் வந்து அதன் வாயிற் படியில் கண்ணன் இறங்கும் போது, "கண்ணா.. நீ படிச்சவன்.. வக்கீல்.. யாரும் நிரந்தரம் கிடையாது என்கிறதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அவ போய்ட்ட .. நம்மோட இல்லை என்கிறதை நீ நம்பித்தான் ஆகணும்.. இப்படியே நீ மௌனமா இருந்தா எப்படி..? பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்று கண்ணனின் சிறிய மாமா மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். கண்ணன் எவ்வித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தார்.

தொடர்ந்து, "கண்ணா நீ தலைக்கு குளிச்சிட்டு வந்திடு... பவித்ராவுக்கு இங்கேயே முழுக்கு போட்டுட்டு.. அவ திரும்பி வரப்போறதில்லே.. இந்தா பக்கெட்டு.. கிணத்து தண்ணியே சேந்தி தலைக்கு ஊத்திக்கோ" என்று சிறிய மாமா சொல்லிவிட்டு நந்தவன படிக்கட்டுக்கு அருகே சென்று அமர்ந்தார்.

மாமா கொடுத்த வாளியை அந்த பெரிய கிணற்றில் விட்டு தண்ணீர் சேந்தி கண்ணன் தலைக்கு விட்டுக் கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமா, கண்ணனை பவித்ராவின் நினைவுகளில் இருந்து மீட்டு கொண்டுவர தான் பேசிய பேச்சுகள் ஒரு சிறிய தாக்கத்தை முதற்கட்டமாக ஏற்படுத்தி இருக்கின்றன என்று நம்பினார். அப்போது திடீரென கண்ணன் ஒரு செயலைச்   செய்தார். அவர் அந்தப் பெரிய கிணற்றின் சுற்றுச் சுவர் மீது ஏறி நின்று கொண்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமாவுக்கு அதிர்ச்சி. உடனே கண்ணனின் அருகில் ஓடி வந்தார். "கண்ணா. என்ன ஆச்சி...? கீழே இறங்கப்பா..!" என்று கூவிக் கொண்டே வந்தார்.

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்.

தொடர்ந்து... "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா..!!" என்றவாறு இரண்டு கைகளையும் விரித்து கிணற்றில் விழத் தயாரானார் கண்ணன்.

மாமா பதறிப் போனார்..!?


(தொடரும்.)

Sunday, 27 November 2011

மதனப் பெண் 26 - வாய் விட்டு அழுதிடு

நன்கு வாழ வேண்டிய இளம் வயதில் ஒருவரை மரணம் தழுவிக் கொண்டால் சம்பந்தப்பட்டவர் வீட்டில் எப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சோகம் நிலவுமோ அச்சோகம் வரலஷ்மி மற்றும் சுந்தரத்தின் வீட்டில் நிலவியது. மேலும் மாமாமார்கள் , சித்தப்பாமார்கள் என சொந்தபந்தம் வட்டத்தில் பவித்ராவும் கண்ணனும் செல்லப் பிள்ளைகள். எனவே மொத்த உறவே அழுது கொண்டிருந்தது.

பவித்ராவின் அகால மரணம் அக்குடும்பத்தினரை பெரிதும் பாதித்து விட்டது. ஒரு புறம் பவித்ராவின் இழப்பு. மற்றொரு புறம் அவள் விட்டுச் சென்ற இரண்டு பிஞ்சுக் குழந்தைகள். மகள் ரோஹிணிக்கு வயது 5. மகன் சத்யதேவுக்கு வயது 3. இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அந்திம சாங்கியங்கள் முடிந்து பவித்ராவை இடுகாட்டில் புதைக்கும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. அவளது உடலை அலங்கரிப்பட்ட ஊர்தியில் இருந்து கீழே இறக்கி வைத்திருந்தனர். உடலின் அருகே ரோஹினியும், சத்தியதேவும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மண்ணுக்குள் செல்லவிருக்கும் தாயின் முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து கண்ணனின் சித்தப்பா குழந்தைகளை அப்படி அமர வைத்திருந்தார். துருதுருவென இருக்கும் இரண்டு குழந்தைகள் மீதும் கண்ணனின் சித்தப்பாவுக்கு மிகவும் பிரியம். அடிக்கடி பார்க்க வருவர். பொம்மைகள் வாங்கி தருவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி விளையாடுவார். இதனால் குழந்தைகளும் அவரிடம் 'தாத்தா.. சின்ன தாத்தா" என்று நன்றாக ஒட்டிக்கொண்டன. "தனது தாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ஏன் எழுந்திரிக்கவில்லை.."  என்று ரோஹினி புரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மீது மழைத்துளி விழாமல் இருக்க அவர் குடை விரித்து பிடித்திருந்தார். விபத்து மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பவித்ராவின் உடலை கொடுத்தனர். உடல் முழுவதும் துணிக் கட்டுகள். முகம் மட்டும் தெரிகிறது. அந்த முகத்தில் தூறிக் கொண்டிருந்த மழை துளிகளைக் கண்டு, அந்தக் குழந்தைகள் இருவரும் செய்தது, அனைவரையும் மீண்டும் அழ வைத்தது.

அமர்ந்திருந்த சத்தியதேவ் மெல்ல நகர்ந்து தனது பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை லேசாக துடைத்து விட்டான். தொடர்ந்து ரோஹினி, "தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

"தெய்வமே.. உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ? இந்த அறியாப் பிஞ்சு குழந்தைகளை இப்படி தவிக்க விட்டு விட்டாயே..." என்று நெஞ்சு குமுறி அழ ஆரம்பித்தார், கண்ணனின் சித்தப்பா.

கண்ணன் சித்தப் பிரமை பிடித்தார் போல் இருந்தார். பவித்ராவின் முகத்தை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் பேசவில்லை. "கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

அடக்கம் செய்பவர் சொன்னவற்றை கண்ணன் ஒரு இயந்திரமாக செய்து கொண்டு வந்தார். இதோ.. அழகு தேவதை பவித்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்டது. பெண் உறவினர்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு 'ஓ..'வென அழ ஆரம்பித்தனர். கடைசி பிடி மண் எடுத்து கண்ணன் பவித்ராவின் உடல் மீது இட்டார்.

எல்லாம் முடிந்து விட்டன. பவித்ரா தனக்கான ஒரு இறுதி இடத்தில் அமைதி ஆனாள். அவளுடன் அவளது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே  புதைந்து போயின.. 

(தொடரும்)

Tuesday, 22 November 2011

மதனப் பெண் 25 - "மாமா.. பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?"

மருத்துவமனையில் பவித்ராவுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் தொடங்கின. அறுவை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டாள். விவரம் அறிந்து கண்ணனின் சக வழக்குரைஞர் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

பவித்ராவுக்கு தலையில் அறுவை தொடங்கியது. எலும்பு முறிவு ஆன இடத்திலும் அறுவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கண்ணன் அறுவை அரங்கிற்கு வெளியே மனம் கொள்ளாமல் துக்கத்தில் தவித்தார். வரலக்ஷ்மி மிகவும் கவலையுடன் குழந்தைகளை கட்டிபிடித்தபடி அமர்ந்திருந்தார். பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து காரில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து மணி நேரம் அறுவை நடந்தது. மூத்த மருத்துவர் ஒருவர் வெளியே வந்தார். கண்ணனும், அவரது நண்பர்களும் விவரம் அறிய அவரை பதற்றத்துடன் நெருங்கினர்.

"கண்ணன்.. ஆபரேசன் எல்லாம் நல்லபடியா முடிச்சது. தலையில் ரொம்ப அடி பட்டிருக்கு. மல்டிபிள் பிராக்ச்சர் ஆகி இருக்கு. ரத்தம் ரொம்ப வெளியே போய்டிச்சு. இப்போ எதுவும் சொல்ல முடியாது. பவித்ரா கண் முளிச்சதான் என்னன்னு சொல்ல முடியும். கடவுளை வேண்டுங்க. " என்று எந்த வகையிலும் சேர்த்தி இல்லாமல் மருத்துவர் சொல்லி விட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் பவித்ராவை அறுவை அரங்கிலிருந்து அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு மாற்றினர். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. பவித்ராவின் உடலில் எந்த அசைவும் இல்லை. பிராண வாயு பொருத்தப்பட்டிருந்தது.

"இந்தக் காட்சியை காணத்தானா இவளை குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து சென்றேன்? தெய்வமே இது என்ன சோதனை?" என்று கண்ணன் வேதனையில் பிதற்றிக் கொண்டிருந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தினர்.

இப்படியே இரவு ஆகி விட்டது. அதற்குள் பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மதுரை வந்துவிட்டனர். அவசர சிகிச்சை அறையின் கதவுக் கண்ணாடி வழியாக பவித்ராவை பார்த்து அவளது தாய் சர்மிளா அழத் தொடங்கினர். சுந்தரத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி. நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார். யார் யாரைத் தேற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை.

இரவு சுமார் 12  மணியளவில் பவித்ராவின் கை விரல் அசைவு தெரிந்தது.  மீண்டும்  ஏதோ முனகுவது போல் பிராண வாய் குழாயையும் மீறி வாய் அசைந்தது. கண்கள் மூடியே இருந்தன. உடனே அங்கிருந்த பயிற்சி மருத்துவர் மற்றொரு மூத்த மருத்துவருக்கு இன்டர்காம் வழியாக தகவல் தெரிவித்தார். அவரும் இன்னும் இரு மருத்துவர்களும் உடனே அவசர சிகிச்சை அறைக்கு வந்தனர். பவித்ராவை பரிசோதித்தனர். பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கண்ணனை உள்ளே வரும்படி அழைத்தனர்.

கண்ணன் உள்ளே சென்று பவித்ராவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "கண்ணன்.. அழக்கூடாது.." என்று மேலும் ஏதோ சொல்ல வருவதை போல மருத்துவர்கள் ஒருவர் மற்றொருவரின் முகத்தை பார்த்துக் கொண்டனர். அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததை அவளது வாய் அருகே காது வைத்து கண்ணன் கேட்டார். விட்டுவிட்டு வந்த அந்த வார்த்தைகளை கோவையாக்கினால், "ம..மா..  பிள்ளைன் .. களை பாத்துப்பீங்....களா ?" என்பது தெளிவானது.. இது கேட்டு கண்ணனுக்கு துக்கம் இன்னும் அதிகமானது.. ஓவென அழ ஆரம்பித்தார்.. "பவித்ரா.. என்னை ஏமாத்திடாதே..." என்று கதற ஆரம்பித்தார். ஆனால் அவரது கதறல் தொடைக்குழிக்குள்ளே அடங்கிப் போனது.

மூத்த மருத்துவர் ஒருவர், "கண்ணன்.. பவித்ராவுக்கு பல்ஸ் இம்ப்ருவ் ஆகலே..  ஹார்ட் பீட் ரெகார்ட் சரியா இல்லே.. கிளாட் பார்ம் ஆகுது. அண்டிகொயக்குலன்ட்ஸ் போட்டாலும், கிளாட் பார்ம் ஆகுது. மனசை தேத்திக்கங்க கண்ணன்.." என்று மெல்ல சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது பவித்ரா ஏதோ ஆழ்ந்து மூச்சு விடுவது போல் நெஞ்சு மேலேறி வந்தது. மூன்று முறை அப்படி செய்திருப்பாள். பின் அவ்வளவுதான். எல்லாம் அடங்கி போனது. மருத்துவர் பவித்ராவின் நாடித்துடிப்பை பரிசோதனை செய்து பார்த்து, "சாரி கண்ணன்.. பவித்ரா இறந்து போய்ட்டாங்க..." என்று வேதனையுடன் கண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.

கண்ணனுக்கு ஒன்று புரியவில்லை.. தான் சிறுவயது முதலே பார்த்து ஆசையுடன்  பழகிய தன் அன்பு மனைவி பவித்ரா இறந்து போனாளா? கண்ணனுக்கு நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை.. அவருக்கு மூச்சு நின்று விடும் போல் ஆனது; பித்துபிடித்தார் போல் ஆனார்.

எல்லோரும்தான்..!

(தொடரும்)
 

Friday, 18 November 2011

மதனப் பெண் 24 - பவித்ராவுக்கு என்ன ஆச்சு ?

வரலஷ்மிக்கு மிக அருகில் லாரி வந்து விட்டது. அம்மாவுக்கு ஏதோ ஆகப் போகிறது என்று கண்ணன் நினைத்து எதிர்புறத்தில் இருந்து ஓடி வர ஆரம்பித்து விட்டார்.

அந்த நேரத்தில் பவித்ரா ஒரு காரியம் செய்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் வரலக்ஷ்மியின் கையை பிடித்து தன்னால் இயன்ற மட்டும் வேகமாக திட்டு பகுதிக்கு தரதரவென இழுத்தாள். வரலக்ஷ்மி நிலை தடுமாறி திட்டின் மீது விழுந்தார். லாரி அவரை உரசிய வண்ணம் சென்று நிற்க ஆரம்பித்தது.

அதே நேரம் அழகு பவித்ராவிற்கு என்ன நடந்தது? வரலக்ஷ்மியின் கையை பிடித்து பின்னுக்கு  இழுத்த வேகத்தில் பவித்ராவும் நிலை தடுமாறி பின் பக்கமாக சென்று திட்டை விட்டு தாங்கள் கோவிலில் இருந்து கடந்து வந்த சாலைப் பகுதியில் விழத் தொடங்கினாள்.

ஐய்யகோ...! என்னவென்று சொல்வது..? எப்படிச் சொல்வது? இப்படியும் ஆகுமா? அந்தக் குல தெய்வம் என்ன காரணத்தாலோ கை விட்டு விட்டதே..! முன் எச்சரிக்கைகளை, அறிகுறிகளை கண்ணனின் குடும்பம் கவனிக்காதது குற்றமாகி விட்டதா?

அப்போது அந்த சாலையில் மதுரையில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார், திட்டிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்து கொண்டிருந்த பவித்ராவின் மீது சடக்கென மோதிவிட்டது. மோதிய வேகத்தில் பவித்ரா மீண்டும்  திட்டு பகுதிக்கே  தூக்கி  எறியப்பட்டாள். தேவதை பவித்ராவின் உடல் முழுவதும் ரத்தம் கொப்புளித்து வெளி வரத் தொடங்கியது. தலையில் பலத்த அடி  பட்டிருந்தது .

வரலக்ஷ்மிக்கும் கண்ணனுக்கும் திக் பிரமை பிடித்தார் போல் ஆகி விட்டது. தன் கண் முன்னே தனது செல்ல மனைவி  பவித்ரா விபத்தில் அடிபட்டு ரத்தக் களறியாக தூக்கி எறியப்பட்ட காட்சியை கண்டு கண்ணனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் ஆனது. அந்தக் காட்சியை, உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடனே அருகில் இருந்தவர்கள் அங்கே  கூடிவிட்டனர். அங்கு வந்த பெண்டிர்களில் ஒருவர் உச் கொட்டியவாறு, "அடப்பாவமே.. நான் அப்போதே பார்த்தேன்.. இந்தப் பொண்ணு மாமியாளை காப்பாத்தப் போய் அது இப்போ ஆக்சிடேன்ட்லே மாட்டிகிச்சி" என்றார்.

அப்போது கண்ணன் வந்த காரும் U-Turn எடுத்து வந்து விட்டது. ஒரு 5  நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்து வாழ்க்கை அலங்கோலம் ஆகி விட்டது. பவித்ராவின் பிள்ளைகளுக்கு ஒன்று புரியவில்லை. ஆனால் அவர்கள் தாய் விழுந்து கிடந்த கோலத்தை கண்டு உடனே ஓவென அழத் தொடங்கினார்கள்.

கண்ணன் தட்டுதடுமாறி பவித்ராவின் அருகில் சென்று பார்க்கும் பொழுது, பவித்ராவிற்கு மூச்சு இருந்தது. உடனே பரபரப்பனார். தான் வந்த காரில் பவித்ராவை அள்ளி தூக்கி வைத்துக்கொண்டு, வரலக்ஷ்மியையும் அழைத்துக் கொண்டு உடனே மதுரையில் உள்ள விபத்து சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவமனை நோக்கி விரைந்தார். 'U-Turn எடுத்து வருவதற்குள் வக்கீல் சாரின் வாழ்க்கையே Turn  ஆகி விட்டதே' என்று ஓட்டுனர் ரகுவின் மனதில் பரிதாப எண்ணங்கள் தோன்றின. வழி முழுவதும் வரலக்ஷ்மியும், குழந்தைகளும் அழுது கொண்டே வந்தனர். பவித்ராவின் உடலில் அசைவு இல்லை. ஏற்கனவே சிகப்பாக இருக்கும் பவித்ராவின் உதடுகள் காயம் காரணமாக கிழிந்து மேலும் சிகப்பாகி இருந்தன. அவை மட்டும் அசைவது போல் தெரிந்தன. மூச்சு மெலிதாக வந்து கொண்டிருந்தது. கண்ணனின் மடியில் தலை வைத்து பவித்ரா படுத்து இருந்ததால், அவரது ஆடை முழுவதும் இரத்தமாகி விட்டிருந்தன.

மதுரை வந்தடைந்து,  மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பவித்ரா சேர்க்கப்பட்டாள். அந்த மருத்துவமனை கண்ணனுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயம் என்பதால், அந்தந்த துறை சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் வந்து விட்டனர். ஒரு குழுவாக நின்று பவித்ராவிற்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது தெரிந்தது. பவித்ரா ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

குல தெய்வம் பல எச்சரிக்கைகளை  செய்திருக்கிறது. பல சம்பவங்களை காட்டி இருக்கிறது.  ஆனால் அதை கண்ணனின் குடும்பம் கடை பிடிக்கத் தவறி விட்டது. குல தெய்வத்தை தொழுதால் எல்லாம் சரியாகி விடும் என்று மட்டும் நம்பினர். கோவில் ஆராதனையில் கற்பூர தீபம் திடீரென அணைந்த பிறகும், சாலையை இப்படி எச்சரிக்கை இல்லாமல் கடக்கலாமா? 5  நிமிடம் கால தாமதமாக மதுரை சென்றிருந்தால் ஒன்றும் தலை முழுகி போயிருக்காது. இப்போது மொத்த வாழ்க்கையே கேள்விகுறியானதே ! ஆபத்து நெருங்கும் போது இயற்கை சமிக்கை செய்யும். அதை புரிந்து  கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

இங்கு எல்லாம் தவறாகி விட்டதே..!

(தொடரும்)

Thursday, 17 November 2011

மதனப் பெண் 23 - வாழ்க்கை ஒரு 'U' TURN !

குலதெய்வப் பிரார்த்தனைகள் முடிந்தன. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் ஒன்றை எடுத்து கண்ணனின் கழுத்தில் போட்டு பூசாரி ஆசிர்வதித்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட சக்கரைப் பொங்கலை ஒரு சிறிய எவர்சில்வர் வாளியில் பாதியளவு வைத்து பிரசாதமாக பூசாரி வழங்கினார். அத்துடன் அபிசேகம் செய்த போது பிடித்த  பஞ்சாமிர்தத்தை மற்றொரு சிறிய டப்பாவில் வைத்து  கொடுத்தார்.  அவ்வாறே வாழைப்பழம், தேங்காய் மூடி தட்டை கொடுத்தார். விபூதி, குங்குமம் ஆகியவற்றை சிறு பொட்டலங்களாக கட்டிக் கொடுத்தார்.

அவரிடமிருந்து விடை பெற்று, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஓரிடத்தில் அனைவரும் சற்றே ஓய்வாக அமர்ந்தனர். கோவிலில் அந்த நேரத்தில் இருந்த அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் பிரசாதத்தை, வரலக்ஷ்மி கொஞ்சம் கொடுத்தார். பின் அனைவரும் சக்கரை பொங்கலை ஒரு கவளம் எடுத்து கண்களில் மேலாக ஒற்றி வாயில் பயபக்தியுடன் இட்டு உண்டனர். குழந்தைகள் ரோஹினி, சத்தியதேவ்-க்கு பவித்ரா ஊட்டிவிட்டாள். அப்போது மதியம் சுமார் 1  மணி இருக்கும். கொஞ்சம் சக்கரை பொங்கலை சாப்பிட்டது, அனைவருக்கும் பசியை மேலும் தூண்டியது.

"மாமா.. காலையிலேயே சாப்பாடு ஆக்கி வைச்சுட்டேன்.. எல்லோரும் வீட்டுக்கு போய் சாப்பாடு சாப்பிட்டுரலாம்... இங்கிருந்து ஒன் அவர்தானே..   2  மணிக்குள்ளே வீட்டுக்கு போயிறலாம்.. வேணுமின்னா வழியிலே இளநி சாப்பிடலாம்...ரொம்ப வெயிலா வேற இருக்கு" என்றாள் பவித்ரா.

இது கண்ணனுக்கும், வரலஷ்மிக்கும் ஏற்புடையதாக இருந்தது. அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்து காரில் பூஜை பொருட்களை எடுத்து வைத்தனர். ஓட்டுனருக்கு சிறிது பொங்கலை பவித்ரா கொடுத்தார். காரில் ஏறப் போன கண்ணன் அந்த சாலைக்கு எதிர் வரிசையில் ஒரு மரத்தடியில் நிறைய இளநீர் காய்களுடன் ஒருவர் அமர்ந்து விற்பனை செய்து கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனே கண்ணன் கார் டிரைவரிடம், "ரகு... நாங்க அந்தப் பக்கம் போய் இளநி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க அப்படியே வண்டிய எடுத்துப் போய் 'U' turn  பண்ணிக்கிட்டு வந்துடுங்க... நேரா மதுரை போய்டலாம்.." என்று சொன்னார்.

"சார் எல்லாரும் வண்டியிலேயே உக்காருங்க ... 'U' turn   எடுத்து அந்தப் பக்கம் போய் இளநி கடைக்காரர் கிட்டே போய் நிறுத்துறேன்.. இது ஹை வே ரோடு.. ரொம்ப ஸ்பீடா வருவாங்க..எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க சார்.." என்றார் டிரைவர் ரகு.

"இல்லே ரகு ...  'U' turn   எடுக்கிறதுக்கு ரொம்ப தூரம் போகணும்.. நாங்க அதுக்குள்ளே இளநி சாப்பிட்டு முடிச்சு ரெடியா இருப்போம்.. மதிய நேரம்.. வண்டி போக்குவரத்து ஒன்னும் காணோம்.. தோ... ஒரு நடைதானே..இளநி சாப்பிட்டு சீக்கிரமா மதுரை போய்டலாம்.. நல்ல பசி.." என்றார் கண்ணன்.

இதை ஆமோதிக்கும் வண்ணம் பவித்ரா, "ஆமா ரகு... நீங்க 'U' turn   எடுத்து வரதுக்குள்ளே நாங்க இளநி சாப்பிட்டு முடிச்சிடுவோம்.. பாப்பாங்க ரெண்டு பேரும் வேணா காருக்குள்ளே இருக்கட்டும்.. காலையிலே எழுந்தனாலே ரெண்டு பேருக்கும் தூக்கம் சொக்குது.." என்றவாறு இரண்டு குழந்தைகளையும் காருக்குள் படுக்க வைத்தாள்.

"சரி.. நான் அப்போ  'U' turn   எடுத்து அந்தப்பக்கம் வற்றேன்" என்றவாறு காரை கிளப்பினார் ரகு.

கண்ணன், பவித்ரா, வரலக்ஷ்மி அனைவரும் மெதுவாக அந்த இருவழி  சாலையில் ஒரு வழியை  கடந்து நடுவில் சுமார் இரண்டு அடி அகலம் உள்ள சாலை பிரிப்பு (Road Separator) திட்டில் வந்து நின்று கொண்டனர். சொன்னது போல வாகனப் போக்குவரத்து ஏதும் இல்லை. எனவே சாலையை கடப்பது ஒன்றும் சிரமமாக தெரியவில்லை.

பின் அங்கிருந்து மற்றொரு வழி சாலையை கடந்து எதிர்புறம் மரத்தடியில் உள்ள இளநீர் கடையை அடைய வேண்டும். கண்ணன் விடுவிடுவென அந்தப்பக்கம் போய், கடை அருகே நின்று கொண்டார். வரலக்ஷ்மியும், பவித்ராவும் அந்தப் பக்கம் வரவேண்டும். பவித்ராவின் கையை பிடித்தவாறு வரலக்ஷ்மி அந்த சாலை பிரிப்பு திட்டில் இருந்து இறங்கி இரண்டு எட்டுகள் வைத்து சாலையில் நடக்க ஆரம்பித்தார். பவித்ரா அவருக்கு பின்னாடி அவரது கையை பிடித்துக் கொண்டு அந்த திட்டில் இருந்து இறங்க ஆரம்பித்தாள்.

அப்போது அந்த சாலையின் வளைவுப் பகுதியில் இருந்து ஒரு லாரி வேகமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது அசுர வேகம்....

திட்டிலிருந்து  சாலையில் முதலில் காலடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்த வரலக்ஷ்மியின் மீது நேராக மோதியே தீர வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த லாரி வந்தது போல் இருந்தது.

லாரி வேகமாக வருவதும், அது வரலக்ஷ்மியின் மீது மோதி விடும் போல் திட்டு ஓரமாக வருவதும் எதிர் பக்கம் இருந்த கண்ணனுக்கு நன்கு தெரிந்தது. ஏதோ ஒரு பதற்றம் கண்ணனை உடனடியாக தொற்றிக் கொண்டது. அதே நேரம் திட்டிலிருந்து இறங்க முயன்று கொண்டிருந்த பவித்ராவுக்கும் இந்த அபாயம் புரிந்தது. 

"அம்மா பாத்து.. லாரி வருது" என்று கண்ணன் கத்தினார்.  வரலக்ஷ்மி இதை உணரும் முன் லாரி அவரது அருகில் வந்து விட்டது. அதன் ஓட்டுனர் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் அழுத்தி அதனால் எழும்பிய ஒலி வெளியில் கேட்டது. லாரியின் டயர் சாலையை அழுத்தித் தேய்க்கிறது.  இருந்தாலும் வேகம் சீக்கிரமாக மட்டுப்படவில்லை.

அடுத்து என்ன நடந்தது..?

(பின் சொல்கிறேன்)

Friday, 11 November 2011

மதனப் பெண் 22 -அம்மன் ஏதோ குறி சொல்றா..!

மதுரையில் இருந்து கொடைரோடு செல்லும் சாலையில் கண்ணனின் குல தெய்வமான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. பரம்பரைபரம்பரையாக தங்கள் குலம் காக்கும் தெய்வமாக கண்ணனின் அப்பா வேதாசலம், அவரது தந்தை, பாட்டன் என எல்லோரும் வழிபட்டு வந்த  தெய்வம்.

சிக்கலான பிரச்சனையில் முடிவெடுக்க அம்மனின் காலடியில் பூப்போட்டு பார்க்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருமணம், வீடு கிரஹப்பிரவேசம் போன்ற வீட்டு பெரிய விசேசங்களுக்கு கண்ணனின் பரம்பரை பங்காளி மக்கள் இங்கு முதலில் பத்திரிக்கை வைத்து அம்மனை அழைத்து, ஆசி பெற்ற பிறகுதான் உற்றார், உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார். வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நேர்ந்து கொள்வது , நிறைவேறிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துவது என்று அந்த அம்மன் கோவில் பெரிதும் பிரசித்தம் வாய்ந்தது.

நெடுச்சாலை ஓரம் சிறிதாக இருந்த இக்கோவில், காலம்காலமாக வழிபட்டு வரும் பரம்பரை மக்கள் கொடுத்த நன்கொடை காரணமாக பெரிதாக கட்டப் பட்டு சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிசேகமும் செய்யப்பட்டது. அண்மையில் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கும் போது பழமையான இக்கோவிலை இடித்து அல்லது நகர்த்தி விடாமல், அதற்கேற்றவாறு சாலையை சற்றே வளைத்து இட்டார்கள்.

ஏற்கனவே வரலஷ்மி பூசாரியிடம் சொல்லி அபிசேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே கண்ணன், பவித்ரா உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளுடன் காலையிலேயே கார் ஒன்றை வாடகைக்கு  பேசி கிளம்பினர்.

கொடைரோடு சென்றைடைய சுமார் 40  நிமிடம் பிடித்தது. அங்கிருந்து சாலையோரம் இருந்த குலதெய்வம் கோவிலை அடைந்து கண்ணன் குடும்பத்தினர் வழிபாடுகளை தொடங்கினர். இந்த அம்மனை குலதெய்வமாக  கொண்ட குடும்பத்தினர் மட்டுமே அக்கோவிலுக்கு அதிகம் வருவர். அன்றைய தினம் கண்ணனின் குடும்பம் தவிர வேறு யாரும் பூஜைக்கு வந்திருக்கவில்லை. எனவே அம்மனின் அபிசேகத்தை அருகில் அமர்ந்து கண்ணன் குடும்பத்தினர் நன்கு கண்டனர். அபிசேகம் முடிய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. பின் அலங்காரம், பூஜை ஆரம்பமானது.

அங்காள பரமேஸ்வரி தாய் வரலக்ஷ்மி வேண்டி வணங்கி சாத்திய மஞ்சள் பட்டுப் புடவையில் அலங்கார ரூபிணியாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மட்டும் ஏதோ ஒரு சோகம் தெரிவதாக வரலட்சுமிக்கு தோன்றியது. "என்ன குற்றம், குறை இருந்தாலும் மன்னித்து, குளிர்ச்சியாகி, என் குலத்தை காக்க வேண்டும் தாயே!" என்று வரலக்ஷ்மி மனமுருக வேண்டினார்.

பூசாரி ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் கற்பூரத் தட்டும்  ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் படக்கென அணைந்து விட்டது. எல்லோருக்கும் கருக்கென்று ஆனது.

"தாயே இது என்ன சோதனை.? ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்? நாங்கள் செய்யும் பூஜையில் என்ன குறை?" என்று வரலக்ஷ்மி வாய்விட்டு அம்மனிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.

'நன்றாக, ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் அணைந்து விட்டதே..' என்ற விசனம் பவித்ராவுக்கும். ஏற்கனவே இருந்த குழப்பங்களில்  'கோவிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்' என்று இங்கு வந்தால்.. ஏன் இப்படி நடக்கிறது? என்று கண்ணன் இப்போது உள்ளபடியாக சிந்திக்க ஆரம்பித்தார்.

அதற்குள் பூசாரி கற்பூரத்தை மீண்டும் ஏறிய வைத்து அம்மனுக்கு காட்டினர். "அம்மா.. அம்மன் ஏதோ குறி சொல்றா..! கொஞ்சம் ஜாக்கிரதையா, எச்சரிக்கையா இருங்க !" என்று பூசாரி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை எல்லோருடைய முகத்திலும் அடித்து, கையிலும் ஊற்றினார். குங்குமம், வீபூதி, சந்தானம் கொடுத்தார். வரலக்ஷ்மி விபூதி  இட்டுக் கொள்ள மற்றவர்கள் அனைத்தையும் இட்டுக் கொண்டனர். தன் மாங்கல்ய பலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கி பவித்ரா நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். தனது தங்கத் தாலியின் மீதும் சிறிது தடவிக் கொண்டாள்.

செல்வத்திற்கு லக்ஷ்மி, கல்விக்கு சரஸ்வதி, எதையும் தொடங்குவதற்கு முன் சுழி போட வேண்டிய இடம் பிள்ளையார், கிரகங்கள் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை அருள நவக் கிரக கோவில்கள் என அததுக்கு கோவில்களும், சாமிகளும் உள்ளன. ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை.. 

அந்த குல தெய்வம் இப்படி கண்ணனின் பூஜை, புனஸ்காரங்களை சரிவர ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஏதோ சமிக்கை செய்கிறதே..? கற்பூரம் அணைந்து விட்டதே...?

கண்ணனின் குலத்தை குல தெய்வம் காப்பாற்றியதா..?

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...